கேரளாவின் கோட்டயத்தில் உள்ள அரசு செவிலியர் கல்லூரியில் படிக்கும் 5 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த இரண்டு மாதங்களாக, ராகிங் என்ற பெயரில் தாங்கள் அனுபவித்த கொடுமைகள் குறித்து முதலாமாண்டு மாணவர்கள் போலீசாரிடம் புகாரளித்துள்ளனர்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Ragging horror from Kerala: Students complain of being stripped, tortured through the night
பி.என்.எஸ் மற்றும் கேரள ராகிங் தடைச் சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைதான மாணவர்கள், இன்று (பிப் 12) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். கைதான மாணவர்கள், வயநாடு, மலப்புரம் மற்றும் கோட்டயத்தைச் சேர்ந்தவர்கள் என்று போலீஸார் தெரிவித்தனர்.
ராகிங் சம்பவங்கள் அனைத்தும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16-ஆம் தேதி முதல் பிப்ரவரி 10-ஆம் தேதி வரை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
யுபிஐ மூலமாக தங்கள் வங்கிக் கணக்கில் பணம் செலுத்த வேண்டும் என மிரட்டிய சீனியர் மாணவர்கள், தங்களுக்கு மரியாதை செலுத்தவில்லை என ஜூனியர் மாணவர்களின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டியதாக தெரிகிறது.
இதேபோல், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், மாணவர்கள் ராகிங் கொடுமைக்கு ஆளானதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மதுபானம் வாங்குவதற்கு பணம் கொடுக்காத ஜூனியர் மாணவரை, இரவு முழுவதும் முழங்காலிட வைத்து அடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவங்களை தங்கள் குடும்பத்தினரிடம் கூட தெரிவிப்பதற்கு பயப்படுவதாக மாணவர்கள் போலீசாரிடம் கூறியுள்ளனர்.
- Shaju Philip