/indian-express-tamil/media/media_files/2025/07/25/rahul-looks-back-2025-07-25-18-23-51.jpg)
'பிரச்னைகள் புரியவில்லை, அதனால்தான் பாதுகாக்கவில்லை'... ஓ.பி.சி. குறித்து ராகுல் காந்தி வருத்தம்
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) எதிர்கொள்ளும் பிரச்னைகளைப் புரிந்துகொள்வதில் காங்கிரஸ் "குறைபாடு" கொண்டிருந்ததால், பா.ஜ.க-வுக்கு "வாய்ப்பு" கிடைத்ததாக ராகுல் காந்தி கூறிய மறுநாள், ஓபிசி சமூகத்தின் நலன்களைத் தனது அரசியல் வாழ்க்கையின் ஆரம்பத்தில் பாதுகாக்கத் தவறியதற்கு, அவர்களின் பிரச்னைகள் சிக்கலானவை மற்றும் எளிதில் புலப்படாதவை என்பதையே காரணம் என ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
டெல்லி தல்கடோரா மைதானத்தில் நடைபெற்ற ஓபிசிக்களுக்கான மாநாட்டில் பேசிய காந்தி, பழங்குடியினர், தலித்துகள், சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் தொடர்பான பிரச்னைகளில்தான் சிறப்பாக செயல்பட்டதாகக் குறிப்பிட்டாலும், ஓபிசிக்களின் பிரச்னைகளைப் புரிந்து கொள்ளத் தவறியதையும், அவர்களுக்காக போதுமானவற்றை செய்யவில்லை என்பதையும் ஒப்புக்கொண்டார். இனி இரட்டிப்பாக உழைப்பேன் என்றும் அவர் கூறினார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
"2004 முதல் நான் அரசியலில் இருக்கிறேன். 21 ஆண்டுகள் கடந்துவிட்டன. நான் திரும்பிப் பார்க்கும்போது, ஒரு வகையில், என்னை நானே ஆராயும்போது நான் எங்கே சரியாகச் செய்தேன், எங்கே பின்தங்கினேன் சில பெரிய பிரச்னைகளைப் பார்க்கிறேன். நிலம் கையகப்படுத்தும் மசோதா, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம், உணவு உரிமை, பழங்குடியினர் மசோதா... போன்ற விஷயங்களில் நான் சிறப்பாகச் செயல்பட்டேன். பழங்குடியினர், தலித்துகள், சிறுபான்மையினர், பெண்கள் பிரச்னைகளில் நான் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்று நினைக்கிறேன். நான் திரும்பிப் பார்க்கும்போது, ஒரு விஷயத்தை நான் தெளிவாகப் பார்க்கிறேன். ஒரு விஷயத்தில் பின்தங்கிவிட்டேன், தவறு செய்துவிட்டேன், அது என்ன? காங்கிரஸும் நானும் ஒரு தவறு செய்துவிட்டோம். ஓபிசி பிரிவை நான் பாதுகாத்திருக்க வேண்டும்; நான் பாதுகாக்கவில்லை. இதற்குக் காரணம், உங்கள் பிரச்னைகளை நான் அப்போது புரிந்துகொள்ளவில்லை" என்று அவர் கூறினார்.
சுமார் ஒரு தசாப்தத்திற்கு முன்பு, தலித்துகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளைத் "தெளிவாக காண முடிந்தது" என்றும், "அது தெளிவாக புரிந்தது" என்றும் ராகுல்காந்தி கூறினார். "தீண்டாமை என்பது அவர்களின் வரலாறு" என்றும் அவர் குறிப்பிட்டார். பழங்குடியினரைப் பற்றிப் பேசிய ராகுல் "பழங்குடியினரின் பிரச்னைகளைப் புரிந்துகொள்வது எளிது - காடு, நீர், நிலம் ஆகியவற்றை நீங்கள் அங்கேயே பார்க்கலாம்" என்றார்.
"ஆனால் ஓபிசி பிரச்னைகள் மறைந்தவை, எளிதில் பார்க்க முடியாதவை. உங்கள் வரலாற்றையும் பிரச்னைகளையும் நான் அறிந்திருந்தால், அப்போது ஜாதிவாரி கணக்கெடுப்பை செய்திருப்பேன் என்பது எனது வருத்தம். அது எனது தவறு, காங்கிரஸின் தவறு அல்ல. நல்ல விஷயம் என்னவென்றால், நான் அப்போது ஜாதிவாரி கணக்கெடுப்பைச் செய்திருந்தால், இப்போது இருக்கும் அளவுக்கு அது சிறப்பாக இருந்திருக்காது" என்று அவர் கூறினார்.
தெலுங்கானா ஜாதிவாரி கணக்கெடுப்பு "சுனாமி" போன்றது என்றும், அதன் "பின்விளைவு" விரைவில் உணரப்படும் என்றும் காந்தி கூறினார். "சுனாமி வந்த விதத்தைப் போல... சுனாமிக்குக் காரணமான பூகம்பம் காணப்படவில்லை. அது கடலுக்கு அடியில் இருந்தது... சுனாமி வந்தபோது, அதன் தாக்கம் 2-3 மணி நேரம் கழித்து உணரப்பட்டது. தெலுங்கானாவிலும் அதேதான் நடந்துள்ளது" என்று அவர் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.