/tamil-ie/media/media_files/uploads/2017/11/z834.jpg)
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக உள்ள சோனியா காந்தி அவ்வப்போது உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். இந்தநிலையில், நீண்ட காலமாக தலைமை பதவிக்கு தன்னை தயார்ப்படுத்தி வரும் ராகுல் காந்தி விரைவில் தலைவர் பொறுப்பை ஏற்பார் என பல நேரங்களில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் ராஜீவ் குடும்பத்துக்கு நெருக்கமானவருமான சச்சின் பைலட் கடந்த மாதம் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ராகுல் காந்தி கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்க இருக்கிறார் என கூறியிருந்தார்.
ராகுல் காந்தியின் தலைமை பொறுப்பு பதவியேற்பு தீபாவளிக்கு பின்னர் இருக்கும் என அப்போதே பேசப்பட்டது. இந்நிலையில் அக்கட்சியின் தலைவராக 19 ஆண்டுகளாக பொறுப்பு வகித்து வரும் சோனியா காந்தி, காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்திற்கு நாளை(திங்கள்) அழைப்பு விடுத்துள்ளார். சோனியா காந்தியின் இல்லத்தில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தின் முக்கிய நோக்கமே கட்சியின் தலைமையை ராகுல் காந்தியிடம் ஒப்படைப்பதுதான் என்று காங்கிரஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குஜராத்தில் வரும் டிசம்பர் 9-ஆம் தேதி தொடங்கவுள்ள முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன்னதாகவே ராகுல் காந்தி, காங்கிரஸின் தலைமை பொறுப்பை ஏற்பார் என கூறப்படுகிறது. 1998 முதல் காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை வகித்து வரும் சோனியா, அக்கட்சியின் நீண்ட கால தலைவராக உள்ளார். 2004-ல் அரசியலில் நுழைந்த ராகுல், 2013-ல் கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். சோனியாவுக்கு அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்படுவதால், காங்கிரஸ் கட்சியை தற்போது பின்னால் இருந்து இயக்கி வருவது ராகுல் காந்தி தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.