நாட்டில் இளைஞன் வேலை கேட்டால், அவனை, நிலாவை பார்க்க சொல்கிறார்கள் என்று மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் மாஜி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல், ஒரேகட்டமாக அக்டோபர் 21ம் நடைபெற உள்ளது. தேர்தல் நாள் நெருங்குவதையொட்டி, பாரதிய ஜனதா, காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
மகாராஷ்டிரா மாநிலம் லடூர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில், காங்கிரஸ் மாஜி தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது, விவசாயிகள் தற்கொலை, வேலைவாய்ப்பின்மை, பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட விவகாரங்களில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான நிர்வாகம் படுதோல்வி அடைந்துவிட்டது.
நாட்டில் உள்ள முக்கிய பிரச்னைகளிலிருந்து மக்களை திசைதிருப்ப, மோடி மற்றும் அமித் ஷா, ஊடகங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதுவே ஊடகங்களின் தலையாய பணியாக உள்ளது. விவசாயிகள் தற்கொலை விவகாரம், வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஊடகங்கள் வாயே திறப்பதில்லை. பெரும்பணக்காரர்களுக்கு கடன் தள்ளுபடி விவகாரங்களிலும் ஊடகங்கள் வாய்மூடி மவுனியாகவே இருந்துவருகிறது.
சந்திராயன் 2 மிஷன் சோதனை பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான். ஆனால், வேலைவாய்ப்பு குறித்து இளைஞன் கேள்வி கேட்டால், அவனை இந்த அரசாங்கம் நிலாவை பார்க்க சொல்கிறது. 370வது சட்டப்பிரிவு, சந்திராயன் 2 குறித்து அவ்வளவு பேசும் மத்திய அரசு, மக்கள் படும் பிரச்னைகளை பேச மறுத்து விடுகிறது.
டோக்லாம் விவகாரம், இந்திய எல்லைக்குள் சீனப்படைகள் ஊடுருவிய விவகாரம் தொடர்பாக, சீன அதிபருடன் ஏன் பிரதமர் பேச்சு நடத்தவில்லை.
5.5 கோடி மக்கள் கடனில் தத்தளித்துக்கொண்டிருக்க, 15 பணக்காரர்களின் கடன்களை மட்டும் இந்த அரசு தள்ளுபடி செய்ததன் மர்மம் என்ன என்பதை விளக்க வேண்டும் என்று ராகுல் கூறினார்.