/indian-express-tamil/media/media_files/2025/07/29/rahul-gandhi-2025-07-29-08-50-57.jpg)
20+ குழந்தைகளைத் தத்தெடுத்த ராகுல்காந்தி: பூஞ்ச் தாக்குதலில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கல்விச் செலவு ஏற்பு!
ஏப்.22 பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு ஏற்பட்ட இந்தியா-பாகிஸ்தான் மோதலில் பெற்றோரை இழந்த 20-க்கும் மேற்பட்ட குழந்தைகளை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி "தத்தெடுக்க" முடிவு செய்துள்ளார். பூஞ்ச் பகுதியில், பாகிஸ்தான் ஷெல் தாக்குதலில் பெற்றோர் இருவரையும் அல்லது குடும்பத்தின் ஒரே வருமான ஆதாரத்தை இழந்த 22 குழந்தைகளின் கல்விச்செலவை ராகுல் காந்தி ஏற்பார் என்று ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீத் கர்ரா தெரிவித்தார்.
குழந்தைகள் தங்கள் படிப்பைத் தொடர ஏதுவாக, நிதியுதவியின் முதல் தவணை புதன்கிழமை அன்று வெளியிடப்படும் என்று கர்ரா கூறினார். "இந்தக் குழந்தைகள் பட்டப்படிப்பை முடிக்கும் வரை உதவி தொடரும்," என்றும் அவர் மேலும் தெரிவித்தார். மே மாதம் பூஞ்ச் பகுதிக்குச் சென்றிருந்த ராகுல் காந்தி, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பட்டியலைத் தொகுக்குமாறு உள்ளூர் கட்சித் தலைவர்களிடம் கேட்டுக் கொண்டார். அதன் பின்னர், கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அரசு பதிவுகளை சரிபார்த்து குழந்தைகளின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டன.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
ராகுல் காந்தி, கிறிஸ்ட் பப்ளிக் பள்ளிக்கும் நேரில் சென்று, அந்தப் பள்ளியின் மாணவர்களான 12 வயது இரட்டையர்களான உர்பா ஃபாத்திமா மற்றும் ஜைன் அலி ஆகியோர் உயிரிழந்த சம்பவம் குறித்து அறிந்து கொண்டார். அவர் அங்கிருந்த குழந்தைகளிடம், "நான் உங்களைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறேன். உங்கள் சிறிய நண்பர்களை நீங்கள் இழந்துவிட்டீர்கள். அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். இப்போது, நீங்கள் சற்று ஆபத்தையும், பயத்தையும் உணர்கிறீர்கள், ஆனால் கவலைப்பட வேண்டாம், எல்லாம் சாதாரணமாகிவிடும்... இதற்கு உங்கள் பதில் மிகவும் கடினமாகப் படிப்பது, கடினமாக விளையாடுவது மற்றும் பள்ளியில் நிறைய நண்பர்களை உருவாக்குவதுதான்," என்று கூறினார்.
பூஞ்ச் நகரம் எல்லைத் தாண்டிய பீரங்கி தாக்குதலால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. ஜியா உல் ஆலம் என்ற மதப் பள்ளியில் நடந்த பீரங்கி தாக்குதலில் சுமார் அரை டஜன் குழந்தைகள் காயமடைந்தனர். பாதிக்கப்பட்டவர்களில், அவரது குடும்பத்தினர் நகரத்தை விட்டு வெளியேற முயன்றபோது, பீரங்கி சிதறல்களால் கொல்லப்பட்ட விகான் பார்கவ் என்பவரும் அடங்குவார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.