ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு அபத்தமானது; அடிப்படை ஆதாரமற்றது: தேர்தல் ஆணையம் பதில்

பீகாரில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மராட்டிய தேர்தல் முறைகேடுகளை மீண்டும் சுட்டிக்காட்டியுள்ள ராகுல் காந்தி அது தொடர்பாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் ஒன்றில் கட்டுரையும் எழுதியுள்ளார்.

பீகாரில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மராட்டிய தேர்தல் முறைகேடுகளை மீண்டும் சுட்டிக்காட்டியுள்ள ராகுல் காந்தி அது தொடர்பாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் ஒன்றில் கட்டுரையும் எழுதியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Rahul Gandhi’s attack on EC

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு அபத்தமானது; அடிப்படை ஆதாரமற்றது: தேர்தல் ஆணையம் பதில்

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் எழுதிய ஒரு கட்டுரையில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தின் மீது நேரடி தாக்குதல் நடத்தியுள்ளார். கடந்த காலங்களில் ராகுல் வைத்த குற்றச்சாட்டுகளையே மீண்டும் வலியுறுத்துகிறது மற்றும் தேர்தல் ஆணையம் வெளியிட்ட மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தல் தரவுகளுக்கு முரணாக உள்ளது.

அவருடைய குற்றச்சாட்டு மற்றும் அது தொடர்பான தரவுகளை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆய்வு செய்ததில், ராகுல்காந்தியின் விமர்சனமானது ஆவணங்களைத் தேர்ந்தெடுத்து மேற்கோள் காட்டுவதாகவும், முக்கியமான சூழல்களைப் புறக்கணிப்பதாகவும், ஒரு விஷயத்தில் தொடர்பே இல்லாத இடத்தில் தொடர்பை உருவாக்குவதாகவும் தெரியவந்துள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இதுகுறித்து கருத்து தெரிவிக்கவில்லை. இருப்பினும், தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: “தேர்தலில் தோற்ற பிறகு, நடுவரைக் குறை கூறுவது வழக்கமான நடைமுறையாகிவிட்டது. இந்தக் குற்றச்சாட்டுகள் அபத்தமானவை, தேர்தல் ஆணையத்தின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் ஒரு முயற்சி. இதே பிரச்னைகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் (ECI), இந்திய தேசிய காங்கிரசுக்கு (INC) 24 டிசம்பர் 2024 அன்று பதிலளித்துள்ளது. அந்தக் பதிலை கட்சி அவருடன் (ராகுல்காந்தியுடன்) பகிர்ந்து கொள்ளவில்லை என்று தெரிகிறது.”

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

தேர்தல் ஆணையர்களின் நியமனம்: தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்கான குழுவிலிருந்து இந்தியத் தலைமை நீதிபதியை (CJI) நீக்கி, அவருக்குப் பதிலாக கேபினட் அமைச்சரை நியமிக்கும் அரசின் முடிவை ராகுல் காந்தி கேள்விக்குட்படுத்தியுள்ளார். இது, 2023-ஆம் ஆண்டின் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறுவதாகவும், தேர்வு முறையின் நடுநிலைத் தன்மை குறித்து கவலை எழுப்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உண்மை என்னவென்றால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) உட்பட கட்சி பேதமின்றி அடுத்தடுத்து வந்த அரசுகளுக்கு வெளிப்படைத் தன்மை வாய்ந்த நியமன முறையை உருவாக்குவதற்கு வாய்ப்புகள் இருந்தபோதிலும், அவை அதைச் செய்யத் தவறின. உதாரணமாக, 2007-ம் ஆண்டில், காங்கிரஸ் தலைவர் வீரப்ப மொய்லி தலைமையிலான நிர்வாக சீர்திருத்த ஆணையம் (Administrative Reforms Commission), தேர்தல் ஆணையத்தின் "மிகுந்த முக்கியத்துவத்தை" காரணம் காட்டி, தேர்தல் ஆணையர்களை நியமிக்க கொலீஜியம் முறையைப் பரிந்துரைத்தது.

அந்த ஆணையம், பிரதமர், மக்களவைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், சட்ட அமைச்சர் மற்றும் மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஆகியோர் அடங்கிய ஒரு தேர்வுக் குழுவை முன்மொழிந்தது. இருப்பினும், இந்தப் பரிந்துரை ஒருபோதும் செயல்படுத்தப்படவில்லை. இதேபோல், நீதிபதி ஷா தலைமையிலான 20-வது சட்ட ஆணையம், 2015-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அரசிடம் சமர்ப்பித்த அறிக்கையில் இருந்த பரிந்துரையும் கூட செயல்படுத்தப்படவில்லை.

இதுகுறித்து ஒரு மூத்த தேர்தல் ஆணைய அதிகாரி கூறும்போது, “இப்போது முதன்முறையாக, தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC), தேர்தல் ஆணையர்களை (ECs) நியமிப்பதற்காக, சட்டப்பிரிவு 325-ன் கீழ் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட ஒரு சட்டம் 2023 முதல் நடைமுறையில் உள்ளது. முந்தைய முறை சிறந்ததா அல்லது இந்தப் புதிய முறை சிறந்ததா? இப்போது, கலந்தாலோசனை இருக்கிறது, வெளிப்படைத்தன்மை இருக்கிறது, மேலும் பெரும்பான்மை என்ற ஒரு கொள்கையும் இருக்கிறது,” என்றார்.

புதிய வாக்காளர்களின் அதிகரிப்பு: 2024 மக்களவைத் தேர்தலுக்கும், சட்டமன்றத் தேர்தலுக்கும் இடையேயான 5 மாதத்திற்குள் மகாராஷ்டிராவில் 41 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதை ராகுல் காந்தி "நம்பமுடியாத புரட்சி" என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் சேர்க்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு சமம் என்பதால், வாக்காளர் பட்டியல்களில் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்று ராகுல் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

தேர்தல் சட்டங்களின்படி, இறுதி வாக்காளர் பட்டியலைத் தயாரிக்கும் ஒவ்வொரு கட்டத்திலும் அரசியல் கட்சிகள் ஈடுபடுத்தப்படுகின்றன. தேர்தல் அதிகாரிகள் அரசியல் கட்சிகளுடன் தொடர்ந்து கூட்டங்களை நடத்துகிறார்கள்; வரைவு மற்றும் இறுதி வாக்காளர் பட்டியல்களின் நகல்களை அவர்களுக்கு இலவசமாக வழங்குகிறார்கள். மேலும் அவற்றை அதிகாரப்பூர்வ இணையதளங்களிலும் வெளியிடுகிறார்கள். வாக்காளர் பட்டியல் சுருக்கமுறைத் திருத்தத்தின்போது, பெயர் சேர்ப்புகள் மற்றும் நீக்கங்கள் குறித்த வாராந்திர பட்டியல்கள் கட்சிகளுடன் பகிரப்பட்டு, ஆட்சேபனைகளைத் தெரிவிக்க வாய்ப்பளிக்கப்படுகிறது.

2024 மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, அரசியல் கட்சிகளால் 1,03,727 வாக்குச்சாவடி நிலை முகவர்கள் நியமிக்கப்பட்டனர். இதில், 27,099 பேர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள். வாக்குச்சாவடி மட்டத்தில் முரண்பாடுகள் இருந்தால், தேர்தல் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு அதைச் சுட்டிக்காட்டுவது இந்த முகவர்களின் பொறுப்பாகும். ஆனாலும், இந்தப் பட்டியல் திருத்தத்தின்போது, பெயர் சேர்ப்பு அல்லது நீக்கம் தொடர்பாக அனைத்துக் கட்சிகளின் முகவர்கள் சார்பிலும் 100-க்கும் குறைவான மேல்முறையீடுகளே செய்யப்பட்டன.

வாக்குப்பதிவு சதவீதம்: 2024 நவம்பர் 20 அன்று மாலை 5 மணிக்கு 58.22% ஆக இருந்த வாக்குப்பதிவு, மறுநாள் காலை 66.05% ஆக உயர்ந்ததை ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 7.83% புள்ளிகள், அதாவது சுமார் 76 லட்சம் வாக்காளர்கள் அதிகம். இந்த உயர்வை "முன்னெப்போதும் இல்லாதது" என்று அவர் குறிப்பிட்டார். 2019 மகாராஷ்டிர தேர்தலில் தற்காலிக மற்றும் இறுதி வாக்குப்பதிவு சதவீதத்திற்கு இடையேயான வித்தியாசம் வெறும் 0.64% புள்ளிகளாக மட்டுமே இருந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.

உண்மை என்னவென்றால், தேர்தல் கண்காணிப்பு அமைப்பானது, வாக்குப்பதிவு நாளன்று வெளியிடப்படும் புள்ளிவிவரங்களை எப்போதும் தற்காலிகமானதாகவே கருதுகிறது. அதற்குக் காரணம் இருக்கிறது. வாக்குப்பதிவு அதிகாரிகள், நிகழ்நேர அறிக்கையிடலை விட, வாக்குப்பதிவு செயல்முறையின் நேர்மைக்கு முன்னுரிமை அளிக்கின்றனர். எனவே, புள்ளிவிவரங்கள் தாமதமாக வருவது பொதுவானதே.

வாக்காளர் பதிவுசெயலி (Voter Turnout) வருவதற்கு முன்பு, தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு நாளன்று மாலை 6 மணியளவில் ஊடகங்களுக்கு விளக்கம் அளிக்கும். அப்போது, மாலை 5 மணி நிலவரப்படியான புள்ளிவிவரங்கள் தோராயமானவையே என்று அதிகாரிகள் தொடர்ந்து கூறுவார்கள். ஏனெனில், அதிகாரப்பூர்வ நேரம் முடிந்த பிறகும் பல இடங்களில் வாக்குப்பதிவு தொடரும். இந்தச் சூழலில், மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படும் தற்காலிக வாக்குப்பதிவுக்கும், மறுநாள் காலை வெளியிடப்படும் இறுதி எண்ணிக்கைக்கும் இடையே இடைவெளி இருப்பது குறிப்பாக முந்தைய தேர்தல்களுடன் ஒப்பிடும்போது அசாதாரணமானது அல்ல.

சனிக்கிழமையன்று, மகாராஷ்டிர தலைமைத் தேர்தல் அதிகாரி (CEO) அலுவலகம், 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024 ஆம் ஆண்டில் தற்காலிக மற்றும் இறுதி வாக்குப்பதிவு புள்ளிவிவரங்களுக்கு இடையிலான வேறுபாடு அசாதாரணமானது அல்ல என்று தெளிவுபடுத்தியது. 2019-ல், வாக்குப்பதிவு சதவீதம் மாலை 5 மணிக்கு சுமார் 54.43% ஆக இருந்து, இறுதியில் 61.10% ஆக உயர்ந்தது; 2024-ல், இது 58.22% ஆக இருந்து 66.05% ஆக உயர்ந்தது. இறுதி புள்ளிவிவரங்கள், சரிபார்ப்புக்காக வாக்குச்சாவடி முகவர்களுக்கு வழங்கப்படும் அதிகாரப்பூர்வ பதிவான படிவம் 17C-ஐ அடிப்படையாகக் கொண்டவை என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம் கூறியது.

மேலும், ராகுல் தரவு ஒப்பீடு பிழையானது என்றும் அது சுட்டிக்காட்டியது: 2019-ஆம் ஆண்டிற்கு, வாக்குப்பதிவு உண்மையாக முடிந்த பிறகு (மாலை 6 மணியைக் கடந்தும் தொடர்ந்திருக்கலாம்) பதிவு செய்யப்பட்ட தற்காலிக புள்ளிவிவரங்களை இறுதி புள்ளிவிவரங்களுடன் அவர் ஒப்பிட்டுள்ளார். ஆனால் 2024-ம் ஆண்டிற்கு, வாக்குப்பதிவு முடிவதற்கு முன்பே (மாலை 5 மணிக்கு) எடுக்கப்பட்ட தற்காலிக புள்ளிவிவரத்தை இறுதி புள்ளிவிவரத்துடன் ஒப்பிட்டுள்ளார்.

மேலும், 2024-ல் மகாராஷ்டிராவில் ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 58 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்ததாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் அடிப்படையில், கடைசி இரண்டு மணி நேரத்தில் மட்டும் 116 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்திருக்க முடியும். எனவே, 76 லட்சம் வாக்காளர்கள் அதிகரித்தது முற்றிலும் நம்பக்கூடியதே ஆகும்

கள்ள வாக்குப்பதிவு: 2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. பின்தங்கியிருந்த 85 தொகுதிகளில் உள்ள 12,000 வாக்குச்சாவடிகளில் மட்டும் வாக்குப்பதிவு திடீரென அதிகரித்ததாகவும், சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. பெற்ற வெற்றிகளுடன் இதைத் தொடர்புபடுத்தியும் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். உதாரணமாக, காம்தி சட்டமன்றத் தொகுதியில், மக்களவைத் தேர்தலில் 1.19 லட்சமாக இருந்த பாஜகவின் வாக்குகள், சட்டமன்றத் தேர்தலில் 1.75 லட்சமாக உயர்ந்ததாகவும், அதே சமயம் காங்கிரஸின் வாக்குகள் பெரிதும் மாறாமல் அப்படியே இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், தேர்தல் ஆணையம், வேட்பாளர்களும் அவர்களின் வாக்குச்சாவடி முகவர்களும் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் சென்று நிகழ்நேரத்தில் ஆட்சேபனைகளைத் தெரிவிக்க முழு அனுமதி வழங்குகிறது. முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகும் கூட, வேட்பாளர்கள் உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகளைத் தாக்கல் செய்து, தேர்தல் முடிவுகளுக்கு எதிராக முறையிடலாம்.

காம்தி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சுரேஷ் போயர், அத்தகைய எந்த மனுவையும் தாக்கல் செய்யவில்லை. மகாராஷ்டிரா முழுவதும் தாக்கல் செய்யப்பட்ட 112 தேர்தல் வழக்குகளில், 28 மட்டுமே காங்கிரஸ் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் காம்தி தொகுதி இல்லை.

ராகுல்காந்தியின் கூற்று குறித்து கேட்டபோது, மகாராஷ்டிர தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், அது 'உண்மைக்குப் புறம்பானது' என்றார். காம்தி தொகுதியானது ராம்டெக் மக்களவைத் தொகுதிக்குக் கீழ் வருகிறது. அங்குப் பொதுத் தேர்தலில் சிவசேனா போட்டியிட்டதே தவிர, பா.ஜ.க. போட்டியிடவில்லை. “எனவே, மக்களவைத் தேர்தலின் போது காம்தியில் பாஜக 1.19 லட்சம் வாக்குகளைப் பெற்றது என்ற கேள்விக்கே இடமில்லை,” என்று அந்த அதிகாரி கூறினார்.

மேலும், காங்கிரஸ் வேட்பாளர் போயர், 2019-ல் 1,07,064 வாக்குகளையும், 2024-ல் 1,34,033 வாக்குகளையும் பெற்றுள்ளார்; இது அவருக்கு ஆதரவு அதிகரித்திருப்பதையே காட்டுகிறது என்றும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டினார்.

ஆதாரங்களை ‘மறைத்தல்’: தேர்தல் ஆணையம் “மௌனம் மற்றும் ஆக்ரோஷத்துடன்” பதிலளிப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களின் வாக்காளர் பட்டியல்களைக் கேட்டு விடுத்த கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதாகவும், மகாராஷ்டிராவில் நடந்த வாக்குப்பதிவின் வீடியோ பதிவுகள் மற்றும் சிசிடிவி காட்சிகளை வழங்க தேர்தல் கண்காணிப்பு அமைப்பு மறுத்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

இதுகுறித்து ஒரு உயர் அதிகாரி கூறும்போது, “வாக்காளர் பட்டியல்கள் (பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் பட்டியல்) ஏற்கெனவே அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படுகின்றன. ஆனால், உண்மையில் வாக்களித்தவர்களின் பட்டியலைப் பகிர முடியாது. ஏனெனில், இது 'வாக்களிப்பின் ரகசியத்தன்மை' என்ற கொள்கையை மீறும். சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதி செய்வதற்கு இது ஒரு அடிப்படைக் கொள்கையாகும்.

இந்தக் காரணத்திற்காகவே, தேர்தல் ஆணையம் ஒவ்வொரு வாக்காளருக்கும் தனிப்பட்ட வாக்குப்பதிவு அறைகளை வழங்குகிறது. தேர்தலுக்குப் பிறகு யார் வாக்களித்தார்கள் என்ற விவரத்தை வெளிப்படுத்துவது, வாக்காளர்களை மிரட்டல் அல்லது அழுத்தத்திற்கு உள்ளாக்கக்கூடும்,” என்றார்.

சிசிடிவி காட்சிகளைப் பொறுத்தவரை, டிசம்பர் 2024-ல், தேர்தல் ஆணையம் மத்திய அரசுடன் கலந்தாலோசித்த பிறகு, 1961-ஆம் ஆண்டின் தேர்தல் நடத்தை விதிகளைத் திருத்தி, மின்னணுப் பதிவுகளுக்கான அணுகலைக் கட்டுப்படுத்தியது என்பது உண்மையே. வழக்கறிஞர் மெஹ்மூத் ப்ராச்சாவுக்கு வீடியோ காட்சிகளை வழங்குமாறு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து இந்தத் திருத்தம் செய்யப்பட்டது. சிசிடிவி காட்சிகளை வழங்குவது, வாக்குப்பதிவின் ரகசியத்தன்மையை மீறுவதாகும் என்றும், செயற்கை நுண்ணறிவைப் (artificial intelligence) பயன்படுத்தி அதைத் தவறாகப் பயன்படுத்த வழிவகுக்கும் என்றும் ஆணையம் வாதிட்டுள்ளது.

இதுபற்றிக் கேட்டபோது, மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலக அதிகாரி ஒருவர், "தேர்தல் செயல்முறை தொடர்பான ஏதேனும் குறைகள் அல்லது ஆட்சேபனைகள் இருந்தால், 1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 80-வது பிரிவின் கீழ், 'தேர்தல் மனு' (Election Petition) என்ற சட்டப்பூர்வ தீர்வு உள்ளது. இதனை மாண்புமிகு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம். அத்தகைய மனுவின் விசாரணையின் போது நீதிமன்றம் தேவை எனக் கருதினால், தேர்தல் தொடர்பான மின்னணு அல்லது ஆவண ஆதாரங்கள் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி சமர்ப்பிக்கப்படும்," என்றார்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: