scorecardresearch

ஹத்ராஸ் உயிரிழப்பு: குடும்ப உறவினர்களுக்கு நேரில் ஆறுதல் கூறிய ராகுல் காந்தி

உ.பி. அரசு, தான் விரும்பியதை எல்லாம் தன்னிச்சையாக செய்ய முடியாது. இப்போது முழு நாடும் நாட்டின் மகளுக்கு நீதி கேட்டு நிற்கிறது என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

ஹத்ராஸ் உயிரிழப்பு: குடும்ப உறவினர்களுக்கு நேரில் ஆறுதல் கூறிய ராகுல் காந்தி

உத்தரபிரதேசம் மாநிலம், ஹத்ராஸில் 4 ஆதிக்க சாதி ஆண்களால்  கூட்டு பாலியல் வல்லுறவால் கொலை செய்யப்பட்ட 19 வயது தலித் பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க காங்கிரஸ் தலைவர்களான  ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு உத்திர பிரேதேச நிர்வாகம் அனுமதி வழங்கியது.  இதனையடுத்து, சாலை மார்க்கமாக பயணம் செய்த ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி தற்போது ஹத்ராஸ் கிராமத்தை அடைந்தனர்.

 

 

 

குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1911 பிரிவு 144-ன் கீழ் தடை உத்தரவு பிறக்கப்பட்டிருப்பதால், ஐந்து உறுப்பினர்கள் மட்டும் நொய்டா வழியாக ஹத்ராஸுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டதாக நொய்டா காவல்துறை தெரிவித்தது. கே.சி வேணுகோபால், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோரும் ராகுல் காந்தியுடன் பயணித்தனர்.

 

நேற்று, பலியான தலித் பெண் குடும்பத்தினரை சந்திக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஹத்ராஸ் சென்றபோது யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், ராகுல் காந்தியுடன் சென்றவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதாகவும், அதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக ராகுல் காந்தி கீழே விழுந்ததாககவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டனர்.

உயிரிழந்த பெண்ணின் உடலை தங்களிடம் ஒப்படைக்காமல், போலீசார் வலுக்கட்டாயமாக இறுதிச் சடங்கை நடத்தி வைத்ததாக பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த வழக்கு தொடர்பான சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) தனது விசாரணையை முடித்துவிட்டதாக உத்தரபிரதேச நிர்வாகம் கூறியதையடுத்து, முன்னதாக பத்திரிக்கையாளர்கள் கிராமத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

 

 


உ.பி கூடுதல் தலைமைச் செயலாளர் (உள்துறை) அவனிஷ் குமார் அவஸ்தி, டிஜிபி ஹிடேஷ் சந்திர அவஸ்தி ஆகியோரும் இன்று  உயிரிழந்த பெண்ணின் உறவினர்களை சந்தித்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக, உத்தரபிரதேச அரசு ஹத்ராஸ் காவல்துறை கண்காணிப்பாளர் விக்ராந்த் விர் உள்ளிட்ட  மூன்று காவல்துறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்தது.

வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கொலையாளிகள், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்ப உறவினர்கள், விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் மீது உண்மை கண்டறிய நடத்தப்படும் நார்கோ அனாலசிஸ், பாலிகிராப் சோதனைகள் நடத்தப்படும் என்று அரசாங்க செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

ராம்தாஸ் அதாவலே கருத்து:  தலித்துகள் மீதான ஆதிக்க சாதிகளின் அட்டூழியங்கள் என்ற பெயரில் அரசியல் செய்யக் கூடாது  என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர்  ராம்தாஸ் அதாவலே  இன்று தெரிவித்தார். “ஹத்ராஸில் நடந்தது மிகவும் கொடூரமானது. ஒரு தலித் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது” என்று அவர் கூறினார்.

முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை  சந்தித்து பேச இருப்பதாக கூறிய அதாவலே, “ஹத்ராஸ் வழக்கில், தலித்துகள் மீதான அட்டூழியங்கள் என்ற பெயரில் அரசியல்  செய்யக்கூடாது. யோகி அரசின் போது  தலித்துகள் மீதான அட்டூழியங்கள் நடக்கின்றது என்று பிரச்சாரம் செய்வது சரியல்ல  அட்டூழியங்கள் நடைபெறுவது உண்மை தான். ஆனால், முலாயம் சிங் யாதவ், மாயாவதி, அகிலேஷ் யாதவ் போன்ற முந்தைய ஆட்சிகளிலும் அது நிகழ்ந்தது” என்று அவர் மேலும் கூறினார்.

மம்தா பேனர்ஜி மிகப்பெரிய கண்டன பேரணி:  ஹத்ராஸ் கூட்டு பாலியல் வல்லுறவைக் கண்டித்து  மேற்கு வங்க முதல்வர் மமத் பானர்ஜி  மிகப்பெரிய கண்டனப்  பேரணியை நடத்தினார். பிர்லா கோளரங்கத்தில் தொடங்கி சுமார் 2 கி.மீ  தொலைவில் உள்ள மாயோ சாலையில் அமைந்துள்ள காந்தி சிலை வரை  கண்டனப்  பேரணி நடந்தது.

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Rahul priyanka given permission to visit hathras victims family

Best of Express