Rahul Priyanka Hathras Visit: உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இறந்த 19 வயது பெண்ணின் குடும்பத்தினரைச் சந்திக்கக் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோர் கடந்த வியாழக்கிழமை தொடங்கிய பயணத்தில் தடங்கல் ஏற்பட்டு சனிக்கிழமை கிராமத்தை அடைந்தனர். அங்கு அவர்களோடு ஒரு மணி நேரம் இருந்துள்ளனர்.
“அவர் (பிரியங்கா) என்னுடன் உட்கார்ந்து, என் மகளைப் பற்றி முழுமையாக விசாரித்தார். அவள் எப்படி இறந்தாள், செப்டம்பர் 14 அன்று என்ன நடந்தது…. என் மகளின் தகனம் பற்றியும் கேட்டார். மேலும், எங்களுக்கு நீதி கிடைக்க உதவுவதாக உறுதியளித்தனர்" எனப் பாதிக்கப்பட்டவரின் தாய் கூறியுள்ளார்.
இரு தலைவர்களும் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்தபோது உடன் இருந்த சமூக ஆர்வலர் யோகிதா பயானா “அவர்களுக்கு சிபிஐ விசாரணை வேண்டுமா என்று குடும்பத்தினரிடம் தலைவர்கள் கேட்டார்கள். அதற்கு குடும்பத்தினர் வேண்டாம் என்று கூறினர். அவர்கள் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து, தங்கள் ஆதரவையும் வழங்கினார்கள்” என்று தி சண்டே எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.
இரு தலைவர்களும் குடும்பத்தின் இல்லத்தை அடைந்தபோது, 50-க்கும் மேற்பட்ட உத்திர பிரதேச காவல்துறை பணியாளர்கள் மற்றும் ஜாயின்ட் மேஜிஸ்ட்ரேட் பிரேம் பிரகாஷ் மீனா ஆகியோர் கலந்து கொண்டனர். “அவர்கள் எங்களுக்கு உதவி செய்வதாக உறுதியளித்தனர். தங்களால் இயன்றதைச் செய்வார்கள் எனக் கூறினார்கள்” என்று பாதிக்கப்பட்டவரின் சகோதரர் தி சண்டே எக்ஸ்பிரஸ்ஸிடம் பதிவு செய்தார்.
சந்திப்பு முடிந்தபின், பிரியங்கா மற்றும் ராகுல் ஆகியோர் என்சிஆரிலிருந்து (NCR) வெளியேறும் போது, டிஎன்டி-யின் கடுமையான போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அவர்களுடைய வாகனம், காங்கிரஸ் தொழிலாளர்கள் கூட்டத்தின் வழியாக டிஎன்டி திசை நோக்கி வெளியேறும்போது, சில கட்சித் தொழிலாளர்கள் சுங்கச்சாவடிகளில் நிறுத்தப்பட்ட காவல் அதிகாரிகளுடன் மோதல்களில் ஈடுபட்டனர்.
சில காங்கிரஸ் தொழிலாளர்கள், காவல் அதிகாரிகளின் தாக்குதல்களை எதிர்கொண்டதால், பிரியங்கா வாகனத்திலிருந்து இறங்கி அவர்களைக் காப்பாற்ற முயன்றார். மேலும் அவர் சில காவல் பணியாளர்களை விலக்கிவிட்டு, அங்கே வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு தடுப்புகளை நகர்த்தி வைத்துள்ளார்.
லத்திசார்ஜில் காயமடைந்ததாக டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் அனில் சவுத்ரி தெரிவித்திருக்கிறார். “உத்தரப் பிரதேச பெண்கள், சிறுமிகள் மற்றும் தலித் பெண்களின் பாதுகாப்பிற்காகக் காங்கிரஸ் பணியாளர்கள் ரத்தம் சிந்துவார்கள். லத்திகள் அல்லது மோடி-யோகி ஆட்சிக்கு நாங்கள் பயப்படவில்லை”என்றும் அவர் கூறியுள்ளார்.
சனிக்கிழமை கிராமத்திற்குச் செல்லும் வழியில், "இந்த மகிழ்ச்சியற்ற ஹத்ராஸ் குடும்பத்தின் சந்திப்பதிலிருந்தும், அவர்களின் வேதனையைப் பகிர்ந்து கொள்வதிலிருந்தும் உலகின் எதுவும் என்னைத் தடுக்க முடியாது" என்று ராகுல் ட்வீட் செய்தார்.
டிஎன்டி-யில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் செல்ஜா குமாரி, "உத்தரப் பிரதேச அரசாங்கம் நீதியை நம்பவில்லை. இது ஜங்கிள் ராஜ் மீது நம்பிக்கை வைத்துள்ளது. அதன் விளைவுதான் இது. ஓர் ஜனநாயக நாட்டில், யார் யாரை வேண்டுமானாலும் சந்திக்கலாம். இங்கு ஜனநாயகம் என்ற ஒன்று இருக்கிறதா? உ.பி. அரசாங்கத்தின் கீழ் அதற்கான எந்த ஆதாரத்தையும் காணமுடியவில்லை” என தி சண்டே எக்ஸ்பிரஸ்ஸிடம் பகிர்ந்துகொண்டார்.
ஏஐசிசி-யின் (AICC) ரீஜினல் ஒருங்கிணைப்பாளர் மற்றும் உறுப்பினர் டாக்டர் சாய் அனாமிகா, “கட்சி பணியாளர்கள் மற்றும் ஒரு சில மூத்த அரசியல்வாதிகளும் காவல் அதிகாரிகளின் லத்திசார்ஜில் காயமடைந்தனர். அவர்களில் கமல் கிஷோரும் இருந்தார்” என்று கூறினார்.
கட்சியின் மூத்த தலைவர்களான கே.சி.வேணுகோபால், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா மற்றும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோரும் ராகுல் மற்றும் பிரியங்காவுடன் சென்றனர்.
குடும்பத்தினருடனான சந்திப்பைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட ஹத்ராஸ் குடும்பத்தின் சார்பாக ஐந்து கேள்விகளை பிரியங்கா ட்வீட் செய்தார்: "உச்ச நீதிமன்றத்தின் மூலம் நீதி விசாரணை செய்யப்பட வேண்டும்"; ஹத்ராஸ் மாவட்ட மேஜிஸ்ட்ரேட் இடைநீக்கம் செய்யப்பட வேண்டும்; “எங்களிடம் கேட்காமல் பெண்ணின் உடல் ஏன் பெட்ரோல் பயன்படுத்தி எரிக்கப்பட்டது”; "நாங்கள் ஏன் தவறாக வழிநடத்தப்படுகிறோம், மீண்டும் மீண்டும் அச்சுறுத்தப்படுகிறோம்"; மற்றும் "மனிதநேயத்திற்காக நாங்கள் சமாதியிலிருந்து பூக்களை எடுத்தோம், ஆனால் அந்த உடல் எங்கள் மகள் என்பதை நாங்கள் எப்படி அறிவோம்?"
"இந்த கேள்விகளுக்குப் பதில்களைப் பெறுவது இந்த குடும்பத்தின் உரிமை, உ.பி. அரசாங்கம் நிச்சயம் பதிலளிக்க வேண்டும்" என்று அவர் ட்வீட் செய்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"