மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடிக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டதையடுத்து, அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் இன்று (செப்டம்பர் 23) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 65.
சுரேஷ் அங்காடி, கர்நாடகா மாநிலம், பெலகாவி மக்களவைத் தொகுதியில் இருந்து பாஜக எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு, மத்திய ரயில்வே இணை அமைச்சராக பதவி வகித்து வந்தார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு 2 வாரங்களுக்கு முன்னர், சுரேஷ் அங்காடிக்கு பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மத்திய இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி கொரோனா பாதிப்புக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 65.
மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “சுரேஷ் அங்காடி ஒரு விதிவிலக்கான செயற்பாட்டாளர் ஆவார். அவர் கர்நாடகாவில் கட்சியை பலப்படுத்த கடுமையாக உழைத்தார். அவர் ஒரு அர்ப்பணிப்பு மிக்க எம்.பி.யாக இருந்தார். திறமையான அமைச்சராகவும் இருந்தார். அவர் துறை முழுவதும் போற்றப்பட்டார். அவரது மறைவு வருத்தமளிக்கிறது. இந்த சோகமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் உள்ளன. ஓம் சாந்தி” என்று ட்வீட் செய்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி உள்பட குறைந்தபட்சம் 9 மத்திய அமைச்சர்கள் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"