ரயில் பயணிகளில் வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோர் லோயர் பெர்த் கிடைத்தால் மிகவும் வசதியாக உணர்வார்கள். அவர்களின் இந்த நீண்ட கால எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதமாக, ரயில்வே நிர்வாகம் ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இனிமேல், மூத்த குடிமக்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே தானாகவே லோயர் பெர்த் ஒதுக்கீடு செய்யப்படும் வகையில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரை, ரயில் பயணத்தின்போது தங்களுக்கு விருப்பமான பெர்த் கிடைப்பது பலருக்கும் சவாலாக இருந்தது. குறிப்பாக, வயதானவர்கள் மற்றும் பெண்களுக்கு லோயர் பெர்த் கிடைப்பது அரிதாக இருந்தது. இதனால், அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். சில சமயங்களில், லோயர் பெர்த்தில் பயணிப்பவர்களிடம் தங்களது இருக்கையை மாற்றித் தருமாறு கேட்கும் நிலையும் உள்ளது.
இந்த சிரமங்களை தவிர்க்கும் வகையில், ரயில்வே நிர்வாகம் புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதன்படி, 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், 58 வயதுக்கு மேற்பட்ட பெண் பயணிகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட பயணிகள் ஆகியோருக்கு இனி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே தானாகவே லோயர் பெர்த் ஒதுக்கீடு செய்யப்படும். இருப்பினும், ரயில் பெட்டிகளில் உள்ள லோயர் பெர்த்த்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இது மாறுபடலாம் என்றும் ரயில்வே தெரிவித்துள்ளது.
ஒரு பெட்டிக்கு எத்தனை லோயர் பெர்த்?
ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் லோயர் பெர்த்களுக்கான ஒதுக்கீடு எவ்வளவு இருக்கும் என்ற விவரத்தையும் ரயில்வே வெளியிட்டுள்ளது:
ஸ்லீப்பர் வகுப்பு: ஒரு பெட்டிக்கு 6 முதல் 7 லோயர் பெர்த்கள்
ஏசி 3 அடுக்கு (3AC): ஒரு பெட்டிக்கு 4 முதல் 5 லோயர் பெர்த்த்கள்
ஏசி 2 அடுக்கு: ஒரு பெட்டிக்கு 3 முதல் 4 லோயர் பெர்த்கள்
2 ஆம் வகுப்பு ஏசி சேர் கார்: 4 இருக்கைகள்
மேலும், பயணத்தின்போது லோயர் பெர்த் காலியாக இருந்தால், வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட முன்பதிவு முடிந்த பிறகு, லோயர் பெர்த் தேவைப்படும் பயணிகளுக்கு இந்த படுக்கைகள் கிடைப்பதை இந்த புதிய நடைமுறை உறுதி செய்யும்.
சமீபத்தில் நாடாளுமன்றத்தில் இதுகுறித்து பேசிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், "ரயில்வே முன்பதிவு முறை தற்போது மூத்த குடிமக்கள், 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண் பயணிகள், கர்ப்பிணிகள் மற்றும் தகுதியான பயணிகளுக்கு லோயர் பெர்த்த்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது. மேலும், லோயர் பெர்த்த்களை முன்பதிவு செய்ய அனுமதிக்கும் சிறப்பு வசதியையும் ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய விதிகளின்படி, இனிமேல் ரயில்களில் லோயர் பெர்த்த்கள் காலியாக இருந்தால், அவை மூத்த குடிமக்கள், பெண்கள், கர்ப்பிணிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படும்" என்று உறுதியளித்தார்.
ரயில்வேயின் இந்த புதிய அறிவிப்பு, லோயர் பெர்த் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்த மூத்த குடிமக்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு பெரும் நிம்மதியை அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இனி இவர்கள் ரயில் பயணத்தை மகிழ்ச்சியாகவும் வசதியாகவும், சிரமமில்லாமலும் மேற்கொள்ள முடியும்.