ராஜஸ்தான் சட்டப்பேரவைக் கூட்டத்தை கூட்டுவதற்கான கோரிக்கையை அம்மாநில ஆளுநர் திருப்பி அனுப்பியதைத் தொடர்ந்து, ராஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அமைச்சரவைக் கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். அமைச்சரவை ஜூலை 31 முதல் சட்டப்பேரவை கூட்டத்தை நடத்த திருத்தப்பட்ட முன்மொழிவை ஆளுநருக்கு அனுப்பி வைத்தனர்.
ராஜஸ்தான் காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி, மாநிலத்தின் சட்டமன்றக் கூட்டத்தை நடத்துவதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் தலையீட்டைக் கோரி அவருக்கு ஒரு கோரிக்கை மனுவை அனுப்பியது.
முன்னதாக நடைபெற்ற காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் அசோக் கெலாட் மாநிலத்தின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசியதாக கூறினார். அதற்கும் முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக அவர் பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.
ராஜஸ்தானில் சட்டமன்றக் கூட்டத் தொடரின்போது நடத்தப்படும் நம்பிக்கையில்லா தீர்மாணத்தில் அல்லது பிற நடவடிக்கைகளில் அசோக் கெலாட் அரசுக்கு எதிராக வாக்களிக்குமாறு கடந்த ஆண்டு காங்கிரசில் இணைந்த ஆறு எம்.எல்.ஏக்களை பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி எச்சரித்துள்ளார்.
இது குறித்து மாயாவதி ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், “பகுஜன் சமாஜ் கட்சி முன்னதாக நீதிமன்றத்திற்குச் சென்றிருக்கலாம். ஆனால், காங்கிரஸ் கட்சிக்கும் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் ஒரு பாடம் கற்பிக்க நாங்கள் நேரம் பார்த்துகொண்டிருந்தோம். இந்த விஷயத்தை நாங்கள் சும்மா விடமாட்டோம். நாங்கள் உச்ச நீதிமன்றத்திற்கு கூட செல்வோம். ராஜஸ்தான் சட்டமன்றக் கூட்டத் தொடரின்போது நடைபெறவிருக்கும் எந்தவொரு நடவடிக்கையிலும் காங்கிரசுக்கு எதிராக வாக்களிக்குமாறு பகுஜன் சமாஜ் கட்சி சின்னத்தில் ராஜஸ்தான் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 6 எம்.எல்.ஏ.க்களை நாங்கள் கேட்டுள்ளோம். அவர்கள் அவ்வாறு செய்யாவிட்டால், அவர்கள் கட்சியின் உறுப்பினரில் இருந்து ரத்து செய்யப்படுவார்கள்” என்று கூறினார்.
இன்று மாலைக்குள் சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடர்பான ஆளுநரின் ஆறு பக்க காதல் கடிதத்திற்கு பதிலளிப்பதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கல்ராஜ் மிஸ்ராவை விமர்சிக்கும் விதமாக கூறினார். ஜூலை 31ம் தேதி சட்டமன்ற கூட்டத் தொடருக்கான முதல்வரின் புதிய திட்டத்தை ஆளுநர நிராகரித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு அசோக் கெலாட்டிடம் இருந்து இந்த கருத்துகள் வந்துள்ளன.
ராஜஸ்தான் ஆளுநர் கடந்த காலத்தில் அரசாங்கத்தின் முந்தைய பரிந்துரையை திருப்பி அனுப்பினார். அவர் ஆறு குறிப்பிட்ட விஷயங்களீல் விளக்கங்களைக் கேட்டார். ஆளுநர் சில கேள்விகளுடன் கோப்பை மாநில அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார். இந்த விவகாரம் ஆராயப்பட்டு வருகிறது என்று அரசாங்க வட்டாரங்கள் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளன.
முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் மற்றும் 18 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மீது தகுதி நீக்கம் செய்ய உயர்நீதிமன்றம் மறுத்ததை எதிர்த்து, ராஜஸ்தான் சட்டமன்ற சபாநாயகர் சி பி ஜோஷி தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதனிடையே, மூன்று முன்னாள் சட்ட அமைச்சர்கள், சட்டமன்றக் கூட்டத்தை நடத்துவதில் தாமதம் ஏற்படுவதால் தவிர்க்கக்கூடிய அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று கவர்னருக்கு கடிதம் எழுதியுள்ளனர். “வெவ்வேறு கால காடங்களில் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர்களாகவும் அரசியலமைப்புச் சட்ட மாணவர்களாகவும் பணியாற்றியுள்ள நிலையில், சட்டபூர்வமான நிலைப்பாட்டை நிலைநாட்டியிருப்பது மாநில அமைச்சரவையின் ஆலோசனையின்படி சட்டமன்றக் கூட்டத்தொடரை நடத்த ஆளுநரைக் கட்டாயப்படுத்துகிறது என்பது நமக்கு தெளிவாகத் தெரிகிறது.” என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களும் முன்னாள் சட்ட அமைச்சர்களுமான அஸ்வனி குமார், கபில் சிபல் மற்றும் சல்மான் குர்ஷித் ஆகியோர் தெரிவித்தனர்.
ராஜஸ்தான் ஆளுநர் பாகுபாடுடனும் உள்நோக்கத்துடனும் நடந்து கொண்டதாக புது டெல்லியில் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. ஆளுநர் மிஸ்ரா எழுப்பிய கேள்விகள் ஒரு நொய்ந்த அற்பமான, மற்றும் அதிகார வரம்பற்ற காரணங்களில் குழப்பம், தடைகள் மற்றும் தந்திரங்கள் ஆகியவற்றின் வருந்தத்தக்க நிலையை காட்டுகின்றன என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
இதனிடையே, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் அமைச்சரவைக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். ஜூலை 31 முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரைக் நடத்தக் கோரி மாநில அரசு ஆளுநருக்கு திருத்தப்பட்ட முன்மொழிவை அனுப்பியுள்ளது என்று பி.டி.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.