ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், இந்து ஆன்மீக சேவை கண்காட்சியில் கலந்துகொள்ள வேண்டும் என, பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த கண்காட்சியில் லவ்ஜிகாத் குறித்து கற்றல், கிறிஸ்துவ மதத்திற்கு எதிரான புத்தகங்கள் விற்பனை, முழு சைவமாக மாறுவதற்கான உறுதிமொழி எடுத்துக்கொள்ளல், மாட்டினை தேசிய தாயாக அங்கீகரிக்கும் பிரச்சாரத்தில் இணைதல், குறிப்பிட்ட சாதி அமைப்புகளில் தங்கள் பெயர்களை இணைத்துக்கொள்ளுதல் நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட கல்வித்துறை கூடுதல் அலுவலரான தீபக் சுக்லா இதுகுறித்து தெரிவிக்கையில், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களை கண்காட்சிக்கு அழைத்துச் செல்லுமாறு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது உண்மைதான் என தெரிவித்தார். இது, ஆரம்ப மற்றும் மேல்நிலை கல்வித்துறை அமைச்சர் வாசுதேவ் தேவ்னானியின் அறிவுறுத்தலால், பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்து ஆன்மீக சேவை கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள், தாங்களாகவே தனியார் மற்றும் அரசு பள்ளிகளை தொடர்புகொண்டு அழைத்தாலும், அரசு பள்ளிகள் முறையான உத்தரவு இல்லாமல் மாணவர்களை அனுப்ப முடியாது என கூறிவிடுவதாக தெரிகிறது. அதனால், கல்வித்துறையே அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தீபக் சுக்லா கூறினார்.
5 நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியானது, நாளையுடன் (நவம்பர் 20) நிறைவடைகிறது. இந்த கண்காட்சியில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் ஸ்டாலில், “இந்து மதத்திலிருந்து மாறி வேறொரு மதத்தை சேர்ந்தவர்களை காதலித்து திருமணம் செய்யக்கூடாது”, என்ற வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. குறிப்பாக, இஸ்லாமியர்கள் இதுபோன்ற வேலைகளில் ஈடுபடுவதாக அந்த துண்டு பிரசுரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.