ராஜஸ்தான் மாநிலத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பின் இடைவேளையின் போது அரசு ஆசிரியர்கள் உடன் பாம்பு நடனமாடிய ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் பகுதியில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்கள் என இருபாலர் ஆசிரியர்களும் பலர் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி வகுப்பின் இடைவேளையின் போது ஒரு ஆசிரியையும் அவருடன் 2 ஆசிரியர்களும் பாம்பு நடனமாடி உள்ளனர்.
அப்போது அங்கே இருந்தவர்களால் எடுக்கப்பட்ட ஆசிரியர்களின் பாம்பு நடன வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
இதனைத் தொடர்ந்து, பயிற்சி வகுப்பில் அரசு ஆசிரியர்கள் நடனமாடியது குறித்து விசாரணை நடத்த மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவிட்டார்.
அதோடு, ஆசிரியர்கள் பயிற்சி வகுப்பின் இடைவேளையில், நடனமாடிய ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த ஆசிரியை உடன் நடனமாடிய மற்ற 2 ஆசிரியர்களும் புதிதாக பணியில் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கு ராஜஸ்தான் மாநில அரசு ஆசிரியர்கள் பலரும், பாம்பு நடனமாடிய ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆசிரியர்கள் பயிற்சி வகுப்பு இடைவேளையின் போதுதான் நடனமாடினார்கள் இதில் தவறு என்ன இருக்கிறது. மாவட்ட கல்வி அதிகாரியின் இந்த நடவடிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று பலரும் ஆசிரியைக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இதனால், ராஜஸ்தானில் அரசு ஆசிரியர்கள் பயிற்சி வகுப்பின்போது பாம்பு நடனமாடியதற்கு மாவட்ட கல்வி அதிகாரி நடவடிக்கை எடுத்த விவகாரம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.