இந்தியா, பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வருமேயானால், அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் விவகாரமாக மட்டுமே இருக்கும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் ஜன் ஆசிர்வாத் யாத்திரை நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, பாகிஸ்தான், தீவிரவாத இயக்கங்களுக்கு தங்கள் நாட்டில் அடைக்கலம் கொடுப்பதை நிறுத்தாதவரை, இந்திய - பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு சாத்தியமில்லை. அதையும் மீறி இந்தியா, பாகிஸ்தான் உடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வருமேயானால், அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் விவகாரத்திற்கு தீர்வு காண்பதற்காகவே இருக்கும்.
இந்தியா முதலில் அணு ஆயுதங்களை பயன்படுத்தாது என்பதன் அர்த்தத்தை பாகிஸ்தான் அறிந்திருக்கும் என்று நம்புகிறோம். எல்லையில் தொடர்ந்து அத்துமீறல் உள்ளிட்ட சம்பவங்களில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து ஈடுபட்டு வந்தால், மோசமான பின்விளைவுகளை அந்நாடு சந்திக்க வேண்டிவரும் என்பதை மறந்துவிடவேண்டாம்.
காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் சீனா இரண்டு நாடுகளும் சேர்த்து உலக அளவிற்கு கொண்டு சென்றது. ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால் அந்த ஆலோசனையின் முடிவில் எந்த விதமான முடிவும் எடுக்கப்படவில்லை.
நாங்கள் பாலக்கோட்டில் நடத்திய தாக்குதலை விட பெரிய தாக்குதலுக்கு திட்டமிடுவதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. பாகிஸ்தான் அமைச்சர் ஒருவரே இப்படி பேட்டி அளித்து இருக்கிறார். அப்படி என்றால் அவர்களே பாலக்கோடு தாக்குதல் மிகப்பெரிய தாக்குதல் என்பதை ஒப்புக்கொண்டார்கள் என்று அர்த்தம்.
காஷ்மீரின் வளர்ச்சிக்காக அதன் சிறப்பு அதிகாரத்தை நீக்கி இருக்கிறோம். ஆனால் பாகிஸ்தான் இதை சர்வதேச தளத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இனியும் நாங்கள் காஷ்மீர் விஷயம் குறித்து பாகிஸ்தானுடம் பேச போவதில்லை. அவர்கள் ஆக்கிரமிப்பு செய்திருக்கும் காஷ்மீர் பகுதி பற்றிய வேண்டுமானால் ஆலோசிப்போம் என்று ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.