/indian-express-tamil/media/media_files/2025/06/28/pondy-ramalingam-2025-06-28-19-05-59.jpg)
புதுச்சேரி மாநில பா.ஜ.க. தலைவராக வி.பி.ராமலிங்கம் தேர்வு
புதுச்சேரி மாநில பாஜக புதிய தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு பா.ஜ.க மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநிலநிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், முன்னணி தொண்டர்கள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தலைமை கட்டுப்பாட்டிற்கு முழுமையாக கீழ்ப்படிந்து செயல்படும் ஒரே கட்சி பா.ஜ.க. என்றார்.
புதிய தலைவரைத் தேர்வு செய்வது தொடர்பான விவாதங்கள் நடந்தன. கட்சி ஒற்றுமை, மேலிட ஆலோசனையை கருத்திற்கொண்டு, தலைவரை அறிவிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளன. இந்த கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. வி.பி.ராமலிங்கத்தை தலைவராகத் தேர்வு செய்ய அதிக அளவில் நிர்வாகிகள் ஆதரவளித்ததாக கூறப்பட்டது. இதுகுறித்த தகவல் கட்சி மேலிடத்துக்கும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பாஜக தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த நிலையில், வி.பி.ராமலிங்கம் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
மாநில பாஜக தலைவர் பதவிக்கு அவர் ஒருவர் மட்டுமே மனுத் தாக்கல் செய்த நிலையில் ராமலிங்கம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். முன்னதாக தலைவர் பதவிக்கு காலை 10 மணி முதல் 12 வரை வேட்புமனு தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டு இருந்தது. வி.பி.ராமலிங்கம் தவிர யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதன்படி, வி.பி.ராமலிங்கம் மாநிலத் தலைவராக நாளை (ஜூன்30) மரப்பாலம் சந்திப்பில் நடக்கும் நிகழ்ச்சியில் முறைப்படி பதவியேற்பார் எனப் பாஜக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது.
இதனிடையே, பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற தேர்தலில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கான மனுத் தாக்கல் செய்தார். இந்நிகழ்வில், பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, மாநிலத் தலைவர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.