பிரபல தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. அவருக்கு ஏற்பட்ட இரத்த அழுத்தம் காரணமாக அவர் இன்று திங்கள்கிழமை பிற்பகல், மும்பையின் ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, அவரது உடல் நலம் குறித்து பலவேறு தரப்பினரும் கவலை தெரிவித்தனர். ரத்தன் டாடா தொடர்பான தகவல் சமூக வலைதளத்தில் பரவிய நிலையில், தனது உடல் நலம் குறித்து குறிப்பிட்ட ரத்தன் டாடா அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், "என்னுடைய உடல்நிலை தொடர்பாக சமீபத்தில் வதந்திகள் பரவி வருவதை அறிந்தேன். இவை அனைத்தும் உண்மையில்லை என்பதை அனைவருக்கும் தெரிவித்து கொள்கிறேன். என்னுடைய வயது மூப்பு மற்றும் அதுசார்ந்த சுகாதார நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துவமனைக்கு சென்றுள்ளேன்.
இதில் வருத்தப்படும் அளவிற்கு எதுவும் இல்லை. நல்ல நேர்மறையான சிந்தனையுடன் தான் இருக்கிறேன். எனவே மீடியாவிற்கும், பொதுமக்களுக்கும் ஒரு வேண்டுகோள் முன்வைக்கிறேன். தவறான தகவல்களை பரப்ப வேண்டாம். அதை யாரும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
தொழிலதிபரும், மனிதநேயமிக்கவருமான ரத்தன் டாடா, ஜம்செட்ஜி டாடாவின் கொள்ளுப் பேரன் ஆவார், அவர் 1991 முதல் 2012 வரை மற்றும் 2016 முதல் 2017 வரை இரண்டு முறை டாடா குழுமக் குழுமத்தின் தலைவராக இருந்தார். தற்போது, அவர் நிறுவனத்தின் அன்றாடப் பணிகளில் இருந்து வெகு காலத்திற்கு பின் விலகியிருந்தாலும், அதன் அறக்கட்டளைகளுக்கு அவர் தொடர்ந்து தலைமை தாங்கி வருகிறார். 2008 இல், அவர் இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம விபூஷணைப் பெற்றார். அவர் 2000 ஆம் ஆண்டில் மூன்றாவது உயர்ந்த விருதான பத்ம பூஷன் பெற்றார்.
ரத்தன் டாடா, 13 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களுடனும், இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட 10 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களுடனும், அவர் இந்தியாவில் அதிகமாகப் பின்தொடரும் தொழிலதிபராக இருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“