/tamil-ie/media/media_files/uploads/2018/02/ration.jpg)
ரேஷன் அட்டைகள் வைத்திருப்பவர்கள் நாட்டின் எந்த பகுதியிலும் உள்ள நியாய விலைக்கடைகளில் தங்களுக்கான அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்களை பெறும் வகையில் புதிய திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இத்திட்டம் வரும் ஏப்ரல் மாதம் முதல் செயல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டில் உள்ள 56% நியாய விலைக் கடைகளில் மின்னணு முறையில் முறைப்படுத்தும் வசதி உள்ளது. அடுத்த இரண்டு மாதங்களில் இத்தகைய வசதியை அனைத்து நியாய விலைக் கடைகளிலும் ஏற்படுத்திவிடுவோம் என பல மாநிலங்கள் உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மத்திய அரசு இத்திட்டத்தை கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம், மின்னணு குடும்ப அட்டைகள் மூலம் நாட்டின் எந்த நியாய விலைக்கடைகளிலும் உணவுப் பொருட்களை பெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
உணவு பாதுகாப்புச் சட்டத்தின்படி, மத்திய அரசானது, நாட்டிலுள்ள 81 கோடி பேருக்கு 3 கிலோ அரிசி, 2 கிலோ கோதுமை, 1 கிலோ பருப்பை வழங்கி வருகிறது.
மின்னணு சாதனம் மூலம் நியாய விலைக் கடைகளின் நடைமுறைகள், செயல்பாடுகள் முறைபடுத்தப்பட்டு, பதிவு செய்யப்படுவதால் இது சிறந்ததொரு திட்டமாக கருதப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாட்டில் மொத்தமுள்ள 5.27 லட்சம் நியாய விலைக்கடைகளில், 2.95 கடைகளில் மின்னணு சாதனம் மூலம் முறைப்படுத்தும் வசதி உள்ளது. இதன் மூலம், நியாய விலைக்கடைகளில் மாதந்தோறும் அரிசி மற்றும் கோதுமை உள்ளிட்ட உணவுப்பொருட்களின் விநியோகம் மத்திய அரசால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
ஒடிஷா, ஆந்திரபிரதேசம், தமிழ்நாடு, குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ள நியாய விலைக்கடைகளில் இத்தகைய மின்னணு சாதனங்கள் 100% பொருத்தப்பட்டுள்ளன. அதேபோல், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய மாநில்னக்களில் 95% பொருத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள கடைகளில் இன்னும் ஓரிரு மாதங்களில் மின்னணு சாதனங்கள் பொருத்தப்படும் என அம்மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. உத்தரபிரதேச மாநிலத்திலும், வரும் ஏப்ரல் மாதத்திற்குள் 100% பொருத்தப்பட்டுவிடும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.