/tamil-ie/media/media_files/uploads/2018/02/cbdd14ec-498d-4921-94cb-791d7d97d3d8.jpg)
தான் நாடாளுமன்றத்தில் சிரித்ததற்காக, ராமயணத்தின் எதிர்மறை பெண் கதாபாத்திரத்துடன் ஒப்பிட்டு மோடி பேசியதற்கு காங்கிரஸ் எம்.பி. ரேணுகா சௌத்ரி பதிலடி தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் மீதான குடியரசு தலைவர் உரைக்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த 7-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நன்றி தெரிவித்து பேசினார். அப்போது, “கடந்த 1998-ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சராக இருந்த எல்.கே.அத்வானி நாட்டு மக்கள் அனைவருக்கும் தனித்துவமிக்க அடையாள அட்டை (ஆதார்) வழங்க வேண்டும் என்ற யோசனையை முன்வைத்தார். ஆனால், கடந்த காங்கிரஸ் அரசு தாங்கள் ஆதார் அட்டையை கொண்டு வந்ததாக கூறி பெருமை கொள்கிறது”, என கூறினார்.
அப்போது, காங்கிரஸ் எம்.பி. ரேணுகா சௌத்ரி அவையில் சத்தமாக சிரித்தார். அதற்கு, மாநிலங்களவை சபாநாயகர் ரேணுகா சௌத்ரியை நோக்கி, “உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால் மருத்துவரிடம் செல்லுங்கள்”, என கூறினார்.
அப்போது, பிரதமர் மோடி, “சபாநாயகரே ரேணுகா சௌத்ரியை எதுவும் கூறாதீர்கள். தொலைக்காட்சியில் ராமாயணம் தொடருக்கு பிறகு இத்தகைய சிரிப்பை இப்போதுதான் கேட்க முடிகிறது”, என கூறினார்.
ராமாயணம் தொடரில் எதிர்மறையான கதாபாத்திரம்தான் அப்படி சத்தமாக சிரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு காங்கிரஸ் கட்சியினர், ரேணுகா சௌத்ரியை பிரதமர் மோடி தரக்குறைவாக விமர்சித்ததாக கூறி கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில், நேற்று (ஞாயிறு கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய ரேணுகா சௌத்ரி, “ #LaughlikeSurpankha, #Lolisapasse, #LaughLikeRenukaChowdhury போன்ற ஹேஷ்டேகில் என்னை குறித்து பேசுகின்றனர். நான் 5 முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறேன். என்னை பிரதமர் மோடி எதிர்மறையாக சித்தரித்திருக்கிறார். ஆனால், இன்றைய பெண்கள் நிறைய மாறியிருக்கின்றனர், அவர்களுக்கு எப்படி பேச வேண்டும் என்பது தெரியும் என்பது பிரதமருக்கு தெரியவில்லை. இது பெண்கள் குறித்த அவரது மனநிலையைக் காட்டுகிறது”, என கூறினார்.
மேலும், ”சிரிப்புக்கு ஜிஎஸ்டி இல்லை என்பதால் நாம் சிரிக்கலாம். 5 முறை எம்பியாக இருந்துவிட்டு சிரிப்பதற்கு அனுமதி வாங்க தேவையில்லை.", என கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.