தேசிய தலைநகருக்குள் நுழைவதைத் தடுப்பதற்கான தடுப்புகளை மீறிய விவசாயிகள் மீது சிங்கு எல்லைப்பகுதியிலும், இந்திய பொறியாளா்கள் நிலைய கட்டடப் பகுதியிலும் (ஐ.டி.ஓ) டெல்லி காவல்துறை தடியடி மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியது.
Advertisment
மேலும் போராட்ட இடங்கள் ஒட்டியுள்ள பகுதிகளில் செங்கோட்டையில் இராணுவ அணிவகுப்பு முடிந்தபிறகு ட்ராக்டர் பேரணி நடத்த டெல்லி காவல்துறை முன்னதாக அனுமதி அளித்தது.
இருப்பினும், டெல்லியின் சிங்கு, திக்ரி மற்றும் காசிப்பூர் எல்லைகளில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக போராடி வரும் விவசாயிகள் காலை 8 மணியளவில் நடந்தும், டிராக்டர் வாகனங்கள் மூலமாகவும் டெல்லி நகருக்குள் நுழைய முயன்றனர். போராட்டத்தில் உள்ள சில தன்னார்வலர்கள் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். பதட்டங்களில் தடுக்க சிலர் காவல்துறையினருடன் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டனர். ஆனால், பல விவசாயி குழுக்கள் தடுப்புகளைத் தகர்த்து முன்னேறினர். இதனையடுத்து, டெல்லியின் பல பகுதிகளிலும் குழப்பமான சூழல் உருவாகியது.
Advertisment
Advertisements
பிற்பகலுக்குள், செங்கோட்டை, காஷ்மீர் கேட் , மத்திய டெல்லியின் பிற பகுதிகளை விவசாயிகள் முற்றுகையிட்டனர். இன்றைய போராட்டத்தில், ஒருவர் உயிரிழந்தார்.
இன்றைய டிராக்டர் வாகன அணிவகுப்பு குடியரசு தினத்துடன் ஒத்துப்போவது மட்டுமல்லாமல், மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் இரண்டு மாதகால போராட்டத்தை நிறைவு செய்கிறது. 5,000 டிராக்டர்களில் 5,000 பேர் கலந்து கொள்ளும் டிராக்டர் அணிவகுப்புக்கு காவல்துறை ஒப்புதல் அளித்த நிலையில், அணிவகுப்பில் 2 லட்சம் டிராக்டர் வாகனங்கள் கலந்து கொள்ளும் என்று விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பல மெட்ரோ ரயில் நிலைய வாயில்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக டெல்லி மெட்ரோ நிர்வாகம் அறிவித்தது. பிரிகேடியர் ஹோஷியர் சிங், பகதூர்கர் சிட்டி, பண்டிட் ஸ்ரீ ராம் சர்மா, திக்ரி பார்டர், திக்ரி கலன், கெவ்ரா, முண்ட்கா தொழில்துறை பகுதி, முண்ட்கா, ராஜதானி பார்க் , நாங்லோய் ரயில் நிலையம், நாங்லோய் உள்ளிட்ட ரயில் நிலையங்களின் உள்வரும், வெளியேறும் வாயில்கள் தற்காலிகமாக மூடப்பட்டது.
திங்களன்று, நூற்றுக்கணக்கான டிராக்டர் வாகனங்களில் அண்டை மாநில விவசாயிகள் டெல்லி எல்லையில் முகாமிட்டன. அணிவகுப்பில் கலந்து கொள்ளும் வாகனங்கள் பலூன்களாலும், தேசியக் கொடிகளாலும் அலங்கரிக்கப்பட்டன. டிராக்டர் மட்டுமல்லமால், விவசாயிகள் நடைபயணமாகவும், இரு சக்கர வாகனங்கள் மூலமாகவும் அணிவகுப்பில் கலந்து கொண்டன.
டெல்லியைத் தவிர்த்து, ஹரியானா, பஞ்சாப், கர்நாடகா மாநில விவசாயிகளும் இன்று இதேபோன்ற போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, தலைநகர் டெல்லி ராஜபாதையில் 21 குண்டுகள் முழுங்க குடியரசுத்தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் தேசியக்கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். இதனையடுத்து முப்படைகள், மற்றும் பல்வேறு படைப்பிரிவுகளின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.