/indian-express-tamil/media/media_files/2025/08/21/rahul-mamkootathil-2025-08-21-19-45-13.jpg)
கேரள காங். இளம் தலைவர் ராகுல் மாம்கூத்தத்தில் பதவி விலகல்: நடிகையின் புகாரால் பதவி விலகலா?
கேரள காங்கிரஸ் எம்.எல்.ஏவும், மாநில இளைஞரணி தலைவருமான ராகுல் மம்கூடத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து நடிகையாக மாறிய ஒருவர், இளம் அரசியல்வாதி மீது முறைகேடு குற்றச்சாட்டுகளை எழுப்பிய நிலையில், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராகுல் மாம்கூத்தத்தில் தனது இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். எனினும், அவர் பாலக்காடு சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்ந்து நீடிப்பார்.
நடிகை ரினி ஆன் ஜார்ஜ் நேற்று முன்தினம், தொலைக்காட்சி விவாதங்களில் மற்றும் போராட்டங்களில் முன்னணியில் இருக்கும் இளம் அரசியல்வாதியால் தான் மோசமான அனுபவத்திற்கு உள்ளானதாகக் குற்றம்சாட்டினார். சமூக வலைத்தளங்கள் மூலம் அறிமுகமான அந்த அரசியல்வாதி, அவருக்கு ஆபாச செய்திகளை அனுப்பியதாகவும், ஹோட்டல் அறைக்கு அழைத்ததாகவும் அவர் தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் கட்சியில் உள்ள பெண்கள் உட்பட பலருக்கும் இதேபோன்ற அனுபவங்கள் நேர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
நடிகை அந்த அரசியல்வாதியின் பெயரை வெளிப்படையாகத் தெரிவிக்க மறுத்துவிட்டார். ஆனால், அந்த அரசியல்வாதி, இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர், சட்டமன்ற உறுப்பினரான ராகுல் மாம்கூத்தத்தில் தான் என்று பரவலாக ஊடகங்களில் யூகங்கள் எழுந்தன. கடந்த ஆண்டு பாலக்காடு சட்டமன்றத் தொகுதியின் இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற ராகுல், ஆரம்பத்தில் இந்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கவில்லை.
காங்கிரஸ் தலைவர் வி.டி.சதீசன் கருத்து
இதுகுறித்து மூத்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சித் தலைவருமான வி.டி.சதீசன், "கட்சியின் தலைவரின் அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல், இந்தக் குற்றச்சாட்டை கட்சி விசாரித்து கடுமையான நடவடிக்கை எடுக்கும். சம்பந்தப்பட்ட எந்த காங்கிரஸ் தலைவராக இருந்தாலும், கட்சி கடும் நடவடிக்கையை எடுக்கும். நான் இதுதொடர்பாக முன்னின்று செயல்படுவேன். இப்போதுதான் எங்களுக்கு தீவிரமான புகார் வந்துள்ளது. நடவடிக்கை எடுப்பதில் எந்த தாமதமும் இருக்காது," என்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.
ராகுல் மாம்கூத்தத்தில் விளக்கம்
அழுத்தம் அதிகரித்ததையடுத்து, ராகுல் இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியதாயிற்று. பதானம் தித்தா நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல், "நான் நாட்டின் சட்ட அமைப்பை மதிக்கிறேன். குற்றம்சாட்டியவர் எனது நெருங்கிய தோழி. அவர் எனது பெயரை வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை. அவர் இப்போதும் எனது நெருங்கிய தோழிதான், இந்தக் குற்றச்சாட்டு எனக்கு எதிரானது அல்ல என்று நான் நம்புகிறேன். சி.பி.ஐ.(எம்) அரசு பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள இந்த நேரத்தில், சில ஊடகங்கள் இந்தக் குற்றச்சாட்டை வெளிப்படுத்தியுள்ளன," என்று கூறினார்.
இந்த குற்றச்சாட்டுகள் காங்கிரஸ் கட்சியை தர்மசங்கடமான சூழ்நிலையில் நிறுத்தியுள்ளன. ஏனெனில், சி.பி.ஐ.(எம்) கட்சி பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய தலைவர்களைப் பாதுகாப்பதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது. முன்னதாக, சி.பி.ஐ.(எம்) தலைவர் பி.கே.சசி மீது கட்சி தோழி ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தபோது, கட்சி அவருக்கு ஆதரவாக நின்றது. அப்போது, "கட்சித் தலைவர்களுக்கு எதிரான புகார்களை சி.பி.ஐ.(எம்) மூடி மறைக்கிறது, மேலும் அத்தகைய புகார்களை விசாரிக்க கட்சித் தலைவர்களையே நீதிபதிகளாக நியமிக்கிறது" என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.