Advertisment

பிரிட்டன் பிரதமரானார் ரிஷி சுனக்; இந்தியா – பாகிஸ்தான் பெருமை கொள்வது ஏன்?

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமரானார். இது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக மாறியுள்ளது; காரணம் என்ன?

author-image
WebDesk
New Update
பிரிட்டன் பிரதமரானார் ரிஷி சுனக்; இந்தியா – பாகிஸ்தான் பெருமை கொள்வது ஏன்?

Divya Goyal 

Advertisment

கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் ரிஷி சுனக் இங்கிலாந்தின் பிரதமராகப் பதவியேற்றுள்ள நிலையில், அவரது வேர்கள் குறித்து விவாதம் தொடங்கியுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளைச் சேர்ந்தவர்களும் ரிஷி சுனக்கின் மூதாதையர் பரம்பரை மீது உரிமைகோரல்கள் மற்றும் எதிர் உரிமைகோரல்களை முன்வைக்கிறார்கள். எவ்வாறாயினும், எதார்த்தம் நடுவில் எங்கோ உள்ளது, மேலும் ரிஷி சுனக் இங்கிலாந்தின் பிரதமராக உயர்த்தப்பட்டதை, 100 ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கிலேயர்களால் ஆளப்பட்ட அண்டை நாடுகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் பெருமைக்குரிய விஷயம் என்று அழைக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

தன்னை ஒரு "பெருமைமிக்க இந்து" என்று அழைக்கும் ரிஷி சுனக் தனது உரைகளில் தனது "இந்திய வேர்கள்" மற்றும் "அவர் எங்கிருந்து வந்தார்" என்பதில் பெருமைப்படுவதாகக் கூறினார். பசு பூஜை (பசு வழிபாடு), கோவிலில் சமூக உணவு பரிமாறுவது, மாட்டிறைச்சி சாப்பிடாமல் இருப்பது, குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடுவது, எம்.பி.யான பிறகு பகவத் கீதையின் மீது சத்தியம் செய்வது என, இந்து மதத்தின் மீதுள்ள நம்பிக்கையை மறைக்க முயற்சிக்கவில்லை என்று ரிஷி சுனக் கூறினார். 42 வயதான ரிஷி சுனக், இங்கிலாந்து மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவத்தை பூர்த்தி செய்யும் போது "பிரிட்டிஷ் இந்தியன்" வகையை குறித்ததாக கூறியுள்ளார்.

இங்கிலாந்தின் பிரதமராக நியமிக்கப்பட்ட ரிஷி சுனக் ஒரு பஞ்சாபி காத்ரி குடும்பத்தில் இருந்து வந்தவர் மற்றும் அவரது தந்தைவழி தாத்தா இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு குஜ்ரன்வாலாவிலிருந்து ஆப்பிரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். குஜ்ரன்வாலா இப்போது பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது. பின்னர், சுனக்கின் தந்தை இங்கிலாந்து சென்றார்.

"உண்மையில் எந்த விவாதமும் இல்லை. ரிஷி சுனக்கின் வெற்றி இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு சொந்தமானது. உண்மையில், எல்லையின் இருபுறமும் உள்ள பஞ்சாப் மக்கள் பெருமைப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், சிறந்த சீக்கியப் போராளி மகாராஜா ரஞ்சித் சிங்கின் பிறந்த இடமான குஜ்ரன்வாலாவில் தனது குடும்பத்தின் வேர்களைக் கொண்ட ஒருவர் இறையாண்மை கொண்ட நாட்டின் (இங்கிலாந்து) தலைவராக மாறியது தான். ரிஷி சுனக்கின் குடும்ப வேர்கள் சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவின் பிரிக்கப்படாத பஞ்சாபில் உள்ளது. அவர் இங்கிலாந்தில் பிறந்தார், அதனால் சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தானுடனோ எந்த தொடர்பும் இல்லை" என்று புகழ்பெற்ற பஞ்சாபி கவிஞர் டாக்டர் குர்பஜன் சிங் கில் கூறுகிறார்.

லூதியானாவில் உள்ள குஜ்ரன்வாலா குருநானக் (ஜி.ஜி.என்) கல்சா கல்லூரியை நிர்வகிக்கும் குஜ்ரன்வாலா கல்சா கல்விக் குழுவின் தலைவர் டாக்டர் எஸ்.பி சிங், “காத்ரி என்பது இந்தியாவில் முக்கியமாகக் காணப்படும் ஒரு சாதி, ஆனால் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலும் உள்ளது. பாரம்பரியமாக, அவர்கள் பெரும்பாலும் வணிகத் தொழில்கள், கைவினைத் தொழில்கள், குறிப்பாக பட்டு நெசவு, அத்துடன் விவசாயம் மற்றும் எழுத்தர் தொழில்களில் ஈடுபட்டுள்ளனர்,” என்று கூறினார்.

ரிஷி சுனக்கின் தந்தைவழி தாத்தா ராம்தாஸ் சுனக் 1935 இல் கென்யாவின் நைரோபியில் எழுத்தராக பணிபுரிய குஜ்ரன்வாலாவை விட்டு வெளியேறினார் என அமிர்தசரஸ் குருநானக் தேவ் பல்கலைக்கழகத்தின் (GNDU) முன்னாள் துணைவேந்தரான டாக்டர். சிங் கூறுகிறார். மேலும், நைரோபிக்கு இடம் பெயர்ந்தது இந்து-முஸ்லிம் உறவுகள் மோசமடைந்து வந்ததோடு தொடர்புடையது என்றும் அவர் கூறினார்.

ராம்தாஸின் மனைவி சுஹாக் ராணி சுனக், 1937ல் கென்யாவுக்குச் செல்வதற்கு முன், குஜ்ரன்வாலாவிலிருந்து டெல்லிக்கு முதன்முதலில் குடிபெயர்ந்தார். ராம்தாஸ் சுனக் ஒரு கணக்காளராக இருந்தார், பின்னர் கென்யாவில் காலனித்துவ அரசாங்கத்தில் நிர்வாக அதிகாரியாக ஆனார். ராம்தாஸ் மற்றும் சுஹாக் ராணிக்கு ஆறு குழந்தைகள் -மூன்று மகன்கள் மற்றும் மூன்று மகள்கள். ரிஷி சுனக்கின் தந்தை யஷ்வீர் சுனக் 1949 இல் நைரோபியில் பிறந்தார். “யஷ்வீர் 1966 இல் லிவர்பூலுக்கு வந்து லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்தார். அவர் இப்போது சவுத்தாம்ப்டனில் வசிக்கிறார்,” என்று டாக்டர் சிங் கூறுகிறார்.

ரிஷி சுனக்கின் தாய்வழி தாத்தா பாட்டிகளும் பஞ்சாபை சேர்ந்தவர்கள். பிரிவினைக்குப் பிறகு குஜ்ரன்வாலாவிலிருந்து லூதியானாவுக்கு இடம் பெயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்த டாக்டர். சிங், சுனக்கின் தாய்வழி தாத்தா ரகுபீர் பெர்ரி பஞ்சாபில் வளர்ந்து, ஆப்பிரிக்காவின் காலனிப் பிரதேசமான டாங்கனிகாவுக்கு ரயில்வே பொறியாளராகச் சென்றார். அவர் தங்கனிகானில் பிறந்த ஸ்ராக்ஷாவை மணந்தார். “ஸ்ரக்ஷா 1966 ஆம் ஆண்டு தனது திருமண நகைகளை விற்று வாங்கிய ஒரு வழி டிக்கெட்டை எடுத்துக்கொண்டு இங்கிலாந்து சென்றார். ரகுவீர் பெர்ரியும் விரைவில் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தார் மற்றும் இங்கிலாந்தின் உள்நாட்டு வருவாய் துறையில் பல ஆண்டுகள் பணியாற்றினார். அவர் 1988 ஆம் ஆண்டில் சமூகத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பிற்கான ஆர்டர் ஆஃப் தி பிரிட்டிஷ் எம்பயர் அல்லது MBE-ல் விருது பெற்றார். தம்பதியருக்கு மூன்று மகள்கள் இருந்தனர், அவர்களில் ஒருவர் ரிஷியின் தாயார் உஷா," என்று கூறினார்.

உஷா 1972 இல் ஆஸ்டன் பல்கலைக்கழகத்தில் மருந்தியலில் பட்டம் பெற்றார். அவர் யஷ்வீரை இங்கிலாந்தில் சந்தித்தார், அவர்கள் 1977 இல் லெய்செஸ்டரில் திருமணம் செய்து கொண்டனர். ரிஷி சுனக் 1980 இல் சவுத்தாம்ப்டனில் பிறந்தார் மற்றும் வின்செஸ்டர் கல்லூரி என்ற புகழ்பெற்ற தனியார் பள்ளியில் பயின்றார்.

ரிஷி சுனக் தனது உரைகளில், அவர் ஒரு பணக்கார குடும்பத்தில் வளரவில்லை என்றும், அவரும் அவரது உடன்பிறப்புகளும் கல்வி கற்பதற்காக அவரது பெற்றோர் "இங்கிலாந்தில் இரவும் பகலும் உழைத்தனர்" என்றும் கூறியுள்ளார். “என் தந்தை NHS உடன் ஒரு பொது பயிற்சியாளராக (GP) இருந்தார் மேலும் கூடுதல் நேரம் மற்றும் வார இறுதி நாட்களில் வேலை செய்தார். என் அம்மா சவுத்தாம்ப்டனில் 'சுனக் பார்மசி' என்ற மருந்து கடை வைத்திருந்தார், பள்ளி முடிந்ததும், நான் வாடிக்கையாளர்களுக்கு மருந்துகளை டெலிவரி செய்தேன். எங்களுக்காக கடுமையாக உழைத்தார்கள். நான் சிறந்த வாழ்க்கைக்காக இங்கிலாந்துக்கு வந்த புலம்பெயர்ந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவன், ”என்று ரிஷி சுனக் கூறினார்.

"நான் முற்றிலும் பிரிட்டிஷ், இது எனது வீடு மற்றும் எனது நாடு, ஆனால் எனது மத மற்றும் கலாச்சார பாரம்பரியம் இந்தியன். என் மனைவி இந்தியர்,” என்று ரிஷி சுனக் கூறியுள்ளார். இன்ஃபோசிஸ் நிறுவனர் என்.ஆர் நாராயண மூர்த்தி மற்றும் சுதா மூர்த்தியின் மகளும் குழந்தைகளுக்கான புத்தகங்களில் நிபுணத்துவம் பெற்ற எழுத்தாளருமான அக்ஷதா மூர்த்தியை மணந்தவர் ரிஷி சுனக்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India England
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment