'பயங்கரவாதம் எனும் நோயில் இருந்து உங்கள் நாட்டை மீட்க முன்வர வேண்டும்': பாகிஸ்தான் இளைஞர்களுக்கு மோடி அழைப்பு

"பாகிஸ்தான் மக்களிடம் நான் சிலவற்றை கேட்க வேண்டும். நீங்கள் என்ன சாதித்தீர்கள்? உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறிவிட்டது. உங்கள் நாட்டின் நிலை என்ன? என்று மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

"பாகிஸ்தான் மக்களிடம் நான் சிலவற்றை கேட்க வேண்டும். நீங்கள் என்ன சாதித்தீர்கள்? உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறிவிட்டது. உங்கள் நாட்டின் நிலை என்ன? என்று மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Modi msg to Pak youth

பாகிஸ்தான் அரசாங்கமும் அதன் ராணுவமும் தங்கள் மக்களின் நலனைப் புறக்கணித்து பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்து வருவதைச் சுட்டிக்காட்டிய பிரதமர் நரேந்திர மோடி, பயங்கரவாத நோயிலிருந்து பாகிஸ்தானை விடுவிக்க அந்நாட்டின் இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று நேற்று (மே 26) தெரிவித்தார்.

Advertisment

 

 

Advertisment
Advertisements

பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள புஜ் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மோடி, "பயங்கரவாத நோயிலிருந்து பாகிஸ்தானை விடுவிக்க, அந்நாட்டின் மக்கள் மற்றும் அவர்களின் இளைஞர்கள் முன்வர வேண்டும். அமைதியாக வாழுங்கள், ரொட்டி சாப்பிடுங்கள். இல்லையெனில், எனது தோட்டா இருக்கிறது" என்று கூறினார்.

ஆபரேஷன் சிந்தூர்-க்குப் பிறகு தனது சொந்த மாநிலத்திற்கு முதல் முறையாக சென்ற மோடி, ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு நடந்த ராணுவ நடவடிக்கையின் வெற்றியை நினைவு கூர்ந்தார்: "பாகிஸ்தான் மக்களிடம் நான் சிலவற்றை கேட்க வேண்டும். நீங்கள் என்ன சாதித்தீர்கள்? உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா  மாறிவிட்டது. உங்கள் நாட்டின் நிலை என்ன? உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை யார் அழித்தார்கள்? யார் உங்களை உதவியற்றவர்களாக அலையச் செய்தார்கள்? இந்தப் பயங்கரவாத தலைவர்கள் தான்" என்று மோடி தெரிவித்தார்.

"உங்கள் அரசாங்கமும், உங்கள் ராணுவமும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிக்கின்றன. பயங்கரவாதம் உங்கள் அரசாங்கத்திற்கும், ராணுவத்திற்கும் பணம் சம்பாதிக்கும் கருவியாக மாறிவிட்டது. இந்த பாதை உங்களுக்கு சரியானதா என்று பாகிஸ்தான் இளைஞர்கள் மற்றும் அந்நாட்டு குழந்தைகள் முடிவு செய்ய வேண்டும். இது அவர்களுக்கு நன்மை செய்கிறதா?" என்று மோடி கேள்வி எழுப்பினார். "அவர்கள், உங்கள் வாழ்க்கையில் ஆபத்துகளை உருவாக்குகிறார்கள் உங்கள் எதிர்காலத்தை அழிக்கிறார்கள். உங்களை இருளில் தள்ளுகிறார்கள்" என்றும் மோடி அறிவுறுத்தினார்.

"இந்தியாவின் திசை மிகவும் தெளிவாக உள்ளது. வளர்ச்சி, அமைதி மற்றும் செழிப்பின் பாதையை இந்தியா தேர்ந்தெடுத்துள்ளது. கட்ச்-ன் உணர்வு இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக மாற்ற தூண்டுதலாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்" என புஜ் பகுதியில் ரூ. 53,400 கோடிக்கும் அதிகமான பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்த மோடி கூறினார்.

குஜராத்திற்கு இரண்டு நாள் பயணமாக வந்த பிரதமர் மோடி, "எல்லை தாண்டிய பயங்கரவாதத்துடன் தான் இந்தியாவின் போர். பயங்கரவாதத்தை வளர்க்கும் கைகளுடன் தான் நமது விரோதம்" எனத் தெரிவித்தார்.

"பயங்கரவாதத்திற்கு எதிரான எங்கள் கொள்கை பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொண்டது. இந்த கொள்கையை ஆபரேஷன் சிந்தூர் மேலும் தெளிவுபடுத்தியுள்ளது. இந்தியர்களை ரத்தம் சிந்தச் செய்ய முயற்சிப்பவர் எவராயினும், அவர்களுக்கு அவர்களின் மொழியிலேயே பதில் கிடைக்கும்" என்று அவர் கூறினார்.

"ஆபரேஷன் சிந்தூர், மனிதநேயத்தை பாதுகாக்கும் மற்றும் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு மிஷன். ஏப்ரல் 22-ஐ (பயங்கரவாதிகள் பஹல்காமில் 26 பேரைக் கொன்றபோது) நான் ஒருபோதும் மறைக்கவில்லை. பீகாரில் ஒரு பொதுக்கூட்டத்தில், நான் பயங்கரவாதத் தளங்களை அழித்து விடுவேன் என்று அறிவித்தேன். பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க 15 நாட்கள் காத்திருந்தோம். ஒருவேளை, பயங்கரவாதம் அவர்களின் அன்றாட வாழ்வாக இருக்கலாம். எங்கள் படைகளுக்கு சுதந்திரமாக செயல்பட அனுமதி அளித்தேன்" என்று மோடி கூறினார்.

"நாங்கள் துல்லியமாகத் தாக்கினோம். இது எங்கள் படைகள் எவ்வளவு திறமையானவை மற்றும் ஒழுக்கமானவை என்பதைக் காட்டுகிறது. இங்கு இருந்தே நாங்கள் பயங்கரவாதிகளின் இருப்பிடங்களையும், தலைமையகங்களையும் தாக்கி அழிக்க முடியும் என்று உலகிற்கு காட்டினோம்" என்று பிரதமர் கூறினார்.

1971 ஆம் ஆண்டு போரின் போது கட்ச் பெண்கள் பாகிஸ்தானால் அழிக்கப்பட்ட ஒரு ஓடுபாதையை 72 மணி நேரத்திற்குள் மீண்டும் கட்டியெழுப்ப முன்மாதிரியான தைரியத்தைக் காட்டியதை குறிப்பிட்டு, "மே 9 இரவு கட்ச் எல்லைகளில் ட்ரோன்கள் காணப்பட்டன. மோடி குஜராத்தைச் சேர்ந்தவர் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால், அவர்களுக்குத் தெரியவில்லை. 1971 ஐ நினைவில் கொள்ளுங்கள். இந்த தைரியமான பெண்கள் பாகிஸ்தானை தோற்கடித்தார்கள்.... இந்த தாய்மார்கள் எனக்கு ஆசீர்வாதம் அளித்ததோடு மட்டுமல்லாமல், ஒரு சிந்தூர் செடியையும் எனக்குப் பரிசளித்தார்கள். இந்தச் செடி பிரதமர் இல்லத்தில் நடப்படும். இந்தச் சிந்தூர் செடி ஒரு பெரிய மரமாக வளரும்" என்றார்.

மற்றொரு பொதுக்கூட்டத்தில், தாகோதில், 9,000 ஹெச்.பி இன்ஜினியரிங் ரோலிங் ஸ்டாக் பட்டறையைத் தொடங்கி வைத்த பிரதமர், பாகிஸ்தானின் 'ஒரே குறிக்கோள்' இந்தியாவிற்கு 'விரோதத்தையும் வெறுப்பையும்' அளிப்பது தான் என்று கூறினார். '22 நிமிடங்களில் ஒன்பது பயங்கரவாத தளங்களை அழித்த' ஆபரேஷன் சிந்தூர், ஆயுதப் படைகளின் வெறும் நடவடிக்கை மட்டுமல்ல, தொன்றுதொட்டு தாய்நாட்டை பாதுகாப்பதற்கான 'இந்திய உணர்வின் வெளிப்பாடு' என்றும் அவர் கூறினார்.

தாகோத்தின் சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை நினைவு கூர்ந்த அவர், "தாகோத் பக்தி மற்றும் தியாகத்தின் பூமி. இந்த பிராந்தியம் இந்தியா மற்றும் மனிதநேயத்தை பாதுகாப்பதற்கான நமது தியாகத்தை எடுத்துக்காட்டுகிறது... இது இந்தியாவின் மதிப்புகளில் உள்ளது. அந்த வகையில், பஹல்காமில் பயங்கரவாதிகள் செயலுக்கு பிறகு, இந்தியாவோ அல்லது மோடியோ அமைதியாக இருந்திருக்க முடியுமா?" என்றார்.

"நம் சகோதரிகளின் சிந்தூரை அழிக்க யாராவது முயற்சித்தால், அவர்கள் நிச்சயமாக அழிந்து போவார்கள். எனவே, ஆபரேஷன் சிந்தூர் ஆயுதப் படைகளின் நடவடிக்கை மட்டுமல்ல. இது நமது வரலாற்று மதிப்புகள் மற்றும் தாய்நாட்டை பாதுகாக்கும் நமது உணர்வுகளின் வெளிப்பாடு" என்றும் மோடி கூறியுள்ளார்.

வதோதராவில் தான் நடத்திய ரோடு ஷோ குறித்து குறிப்பிட்ட மோடி, சிவப்புச் சேலை அணிந்த மற்றும் நெற்றியில் குங்குமம் வைத்த பெண்கள் ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியைக் கொண்டாட தன்னை வாழ்த்தினர் என்றார்.  "வதோதரா பெண்கள் ஆபரேஷன் சிந்தூருக்காக ஆயுதப் படைகளுக்கு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவிக்கும் பிரதிநிதியாக என்னை தேர்ந்தெடுத்தார்கள்... பயங்கரவாதிகள், குழந்தைகளுக்கு முன்னால் அவர்களின் தந்தைகளை கொலை செய்தார்கள். அந்தப் படங்களைப் பார்க்கும்போது எங்கள் ரத்தம் கொதிக்கிறது. பல கோடி இந்தியர்களுக்கு பயங்கரவாதிகள் சவால் விட்டனர். எனவே, என்னை எதற்காக தலைவராக தேர்ந்து எடுத்தார்களோ அதனை நான் செய்தேன்" என மோடி கூறினார்.

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத இலக்குகள் துல்லியமாக அடையாளம் காணப்பட்டு அழிக்கப்பட்டன என்று கூறிய மோடி, "முப்படைகளுக்கும் சுதந்திரமான அனுமதி மட்டுமே நான் அளித்தேன். பதிலுக்கு, பல தசாப்தங்களாக யாரும் காணாததை அவர்கள் செய்தார்கள்... எல்லைக்கு அப்பால் உள்ள 9 பெரிய பயங்கரவாத தளங்களைக் கண்டுபிடித்தோம். அவற்றின் முகவரி மற்றும் நடவடிக்கைகளை உறுதிப்படுத்தினோம். ஏப்ரல் 22 அன்று அவர்கள் (பயங்கரவாதிகள்) விளையாடிய விளையாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக, மே 6 இரவு அன்று 22 நிமிடங்களில் அவற்றை (பயங்கரவாதத் தளங்களை) அழித்தோம். இந்தியாவின் நடவடிக்கையால் கலவரமடைந்த பாகிஸ்தான் ஆயுதப் படைகள், இந்தியாவை தாக்க முயன்றபோது, ​​எங்கள் ஆயுதப் படைகளும் அவர்களுக்கு ஒரு பாடம் கற்பித்தன..." என விளக்கம் அளித்தார்.

மேலும், தாம் பிரதமராக பதவியேற்றதில் இருந்து இந்தியா பல்வேறு வளர்ச்சிகளை அடைந்துள்ளதாக மோடி தனது உரையில் கூறினார்.

- Ritu Sharma , Aditi Raja

Modi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: