பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (BMC) தனது கருவூலத்தில் இருந்து கட்சி அடிப்படையில் ரூ.500 கோடியை மட்டும் வழங்கவில்லை, கார்ப்ரேசன் தற்செயல் நிதியையும் கட்சி அடிப்படையில் வழங்கியுள்ளது. குறிப்பாக மும்பை கார்ப்ரேசன் ஆளும் பா.ஜ.க-சேனா (ஏக்நாத் ஷிண்டே) எம்.எல்.ஏ.,க்கள் முன்மொழிந்த திட்டங்களுக்கு மட்டுமே நிதியை வழங்கியது, எதிர்க்கட்சிகளுக்கு எதுவும் வழங்கவில்லை.
ஆங்கிலத்தில் படிக்க: Rs 163 crore BMC special fund follows party line: switch sides, get money
பிப்ரவரி 2023 முதல் டிசம்பர் 31, 2023 வரையிலான 10 மாதங்களில், குடிமராமத்து பணிகளை மேற்கொள்வதற்காக மும்பையில் உள்ள 227 “கார்ப்பரேசன் வார்டுகளில்” 31 வார்டுகளுக்கு பி.எம்.சி தனது ரூ.900 கோடி தற்செயல் நிதியிலிருந்து ரூ.163.29 கோடியை ஒதுக்கியது.
இந்த 31 வார்டுகளில் 30 வார்டுகளின் உறுப்பினர்கள் எதிர்க்கட்சிகளில் இருந்து தங்கள் அரசியல் விசுவாசத்தை மாற்றியவர்கள். அவர்களின் விபரம்: உத்தவ் பால் தாக்கரே சிவசேனா - 21, காங்கிரஸ் - 6 மற்றும் என்.சி.பி - 3. ஒருவர் பா.ஜ.க.,வைச் சேர்ந்தவர். 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பா.ஜ.க.,வுடன் இணைந்து மாநில அரசை அமைப்பதற்காக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பிரிந்து சென்ற பின்னர் 30 பேரும் ஷிண்டே பிரிவு சிவசேனாவுக்கு மாறினார்கள்.
30 உறுப்பினர்களும் கட்சி மாறிய பிறகுதான் அவர்களின் வார்டுகளுக்கு தலா ரூ.5 கோடி நிதி கிடைத்தது. உண்மையில், பல சந்தர்ப்பங்களில், முன்னாள் உறுப்பினர்கள் ஆளும் கூட்டணிக்கு மாறிய பதினைந்து நாட்களுக்குள் நிதி வழங்கப்பட்டது.
மீதமுள்ள 196 உறுப்பினர்களின் வார்டுகளில் எவரும் தற்செயல் நிதியிலிருந்து எந்தப் பணத்தையும் பெறவில்லை என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் விசாரித்த ஆர்.டி.ஐ.,யின் கீழ் பெறப்பட்டவை உட்பட அதிகாரப்பூர்வ பதிவுகள் தெரிவிக்கின்றன.
தற்செயல் நிதி என்பது கோவிட்-19 தொற்றுநோய், நிலச்சரிவுகள், பாலம் இடிந்து விழுதல் போன்ற "பாதகமான சூழ்நிலைகளின்" போது பயன்படுத்தப்பட வேண்டிய அவசர கால நிதி தொகுப்பு ஆகும். மும்பை கார்ப்ரேசன் பொதுவாக அதன் ஆண்டு நிகர வருமானத்தில் 4 சதவீதத்தை தற்செயல் நிதிக்கு ஒதுக்குகிறது.
வழக்கமான செயல்பாடு: ஒரு முன்னாள் உறுப்பினர் ஷிண்டே சேனாவின் பக்கம் மாறுவார் என்று பதிவுகள் காட்டுகின்றன, அதைத் தொடர்ந்து அந்த உறுப்பினரின் வார்டுக்கு பொறுப்பான பி.எம்.சி.,யின் வார்டு அதிகாரி, மும்பை கார்ப்ரேசன் அலுவலகத்திற்கு நிதி கேட்டு எழுத்துப்பூர்வ முன்மொழிவை அனுப்புவார், பி.எம்.சி முன்மொழிவை ஏற்று நிதியை வழங்கும்.
புதனன்று, தி இந்தியன் எக்ஸ்பிரஸ், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக தேர்தல் இல்லாத பி.எம்.சி, மும்பையில் உள்ள எம்.எல்.ஏ.,க்களுக்கு அவர்களின் தொகுதிகளில் குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள 500 கோடி ரூபாய் வழங்கியதாக செய்தி வெளியிட்டது. மும்பையில் ஆளும் சிவசேனா-பா.ஜ.க கூட்டணியின் 21 எம்.எல்.ஏ.,க்களும் இந்த சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் நிதி பெற்ற நிலையில், 15 எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு நிதி கிடைக்கவில்லை.
பல முயற்சிகள் இருந்தும், BMC கமிஷனர் மற்றும் நிர்வாகி I.S சாஹல் கருத்துக்கு கிடைக்கவில்லை.
சிவசேனா UBT தலைவர் ஆதித்யா தாக்கரே கூறுகையில், “எதிர்க்கட்சியில் இருந்து எந்த உறுப்பினரும் நகராட்சி ஆணையரை அணுகும் போதெல்லாம், முன்னாள் உறுப்பினர்கள் எந்த நிதியையும் கோர முடியாது என்று கூறப்படுகிறது. அதேநேரம், ஆளும் கூட்டணியுடன் இணைந்த எந்த முன்னாள் உறுப்பினரும் கார்ப்ரேசனை அணுகினால், அவர்களின் கோரிக்கை பதினைந்து நாட்களுக்குள் அங்கீகரிக்கப்படும். ஆளுங்கட்சியின் விருப்பப்படி நிர்வாகம் எப்படி செயல்படுகிறது என்பதை இது தெளிவாக காட்டுகிறது” என்று கூறினார்.
மும்பையின் 227 உறுப்பினர் வார்டுகள் 24 முனிசிபல் வார்டுகளை உருவாக்குகின்றன, அதன் நிர்வாகத் தலைவர் "வார்டு அதிகாரி", உதவி முனிசிபல் கமிஷனர் அந்தஸ்தில் உள்ள BMC அதிகாரி.
மார்ச் 7, 2022 அன்று அவர்களின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பு, பி.எம்.சி.,யில் சிவசேனாவில் (பிரிக்கப்படாத) இருந்து 88, பா.ஜ.க.,வில் இருந்து 80, காங்கிரஸ் 31, என்.சி.பி 9, எம்.என்.எஸ் 7, ஏ.ஐ.எம்.ஐ.எம் 2, சமாஜ்வாதி கட்சி 6 உறுப்பினர்கள் இருந்தனர். அன்றிலிருந்து பி.எம்.சி.,க்கு தேர்தல் இல்லாமல் போனதால், சிவில் அமைப்பில் தற்போது உறுப்பினர்கள் இல்லை. வார்டு அலுவலர்கள் தான், பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள, நிதி வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கட்சி மாறுங்கள், உடனடியாக பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள்
31 பேரும் சேனா (ஷிண்டே) பிரிவுக்கு மாறிய தேதி மற்றும் பணப்பட்டுவாடாவைக் காட்டும் தேதி indianexpress.com இல் விரிவான பட்டியலாக உள்ளது. சில உதாரணங்கள்:
* ஆகஸ்ட் 26, 2023 அன்று, தாராவியைச் சேர்ந்த காங்கிரஸின் ஐந்து முன்னாள் உறுப்பினர்களான கங்கா மானே மற்றும் அவரது கணவர் குணால் மானே, பாபு கான், ஜோத்ஸ்னா பர்மர் மற்றும் பாஸ்கர் ஷெட்டி ஆகியோர் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைந்தனர். மூன்று நாட்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 29, 2023 அன்று, இந்த உறுப்பினர்கள் ஒருமுறை பிரதிநிதித்துவப்படுத்திய நான்கு வார்டுகளில் குடிமை உள்கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கான நிதியைக் கோரி, தலா ரூ. 5 கோடிக்கான நான்கு தனித்தனியான திட்டங்களை அவர்களின் வார்டு அதிகாரி முன்வைத்தனர். ஆகஸ்ட் 29, 2023 அன்று, பி.எம்.சி தலா ரூ. 5 கோடியை அனுமதித்தது.
* ஜூன் 19, 2023 அன்று, சண்டிவலியைச் சேர்ந்த இரண்டு UBT சேனா முன்னாள் உறுப்பினர்கள், கிரண் லாண்டே மற்றும் அஷ்வினி மேடேகர், ஷிண்டே சேனாவில் இணைந்த சில வாரங்களுக்குள், அவர்களின் வார்டு அதிகாரி இரண்டு உறுப்பினர்களின் வார்டுகளுக்கும் முறையே ரூ.5.42 கோடி மற்றும் ரூ.5.69 கோடி கேட்டார். இரண்டு நாட்களுக்கு பின், தலா, 5 கோடி ரூபாய் ஒதுக்க, கார்ப்ரேசன் ஒப்புதல் அளித்தது.
* ஜூன் 2022 மற்றும் மார்ச் 2023 க்கு இடையில், மூன்று முன்னாள் உறுப்பினர்களான சமாதான சர்வான்கர், சந்தோஷ் காரத் மற்றும் தத்தா நர்வங்கர், UBT சேனாவிலிருந்து ஷிண்டே பிரிவுக்கு விசுவாசத்தை மாற்றினர். ஜூன் 20, 2023 அன்று, அவர்களின் வார்டு அதிகாரி இந்த மூன்று மண்டலங்களிலும் குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள ரூ.15 கோடி கேட்டார். ஒரு நாள் கழித்து, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
* முன்னாள் UBT சேனா உறுப்பினரான ஷீத்தல் மத்ரே, ஜூலை 2022 இல் ஷிண்டே முகாமில் சேர்ந்தார். சில மாதங்களுக்குப் பிறகு, ஜூன் 19, 2023 அன்று, தஹிசரில் அவர் பிரதிநிதித்துவப்படுத்திய வார்டுக்கு ரூ. 5 கோடி கிடைத்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட பணப்பரிமாற்றத்தின் இந்த முறை பற்றிய கருத்துக்கு தொடர்பு கொண்டபோது, ஷீத்தல்மத்ரே எந்த சார்பையும் மறுத்தார். “பி.எம்.சி.,யால் நிதி எவ்வாறு விநியோகிக்கப்படுகிறது என்பது குறித்து என்னால் கருத்து தெரிவிக்க முடியாது. ஆனால், அதிகாரிகள் கோரிக்கை வைப்பவர்களுக்கு மட்டும் நிதி வழங்கி வருகின்றனர். தற்போது, பி.எம்.சி.,யில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் யாரும் இல்லாததால், முன்னாள் உறுப்பினர்கள், அவர்கள் நிதியை வழங்குவதற்கான கோரிக்கைகளை வைத்துள்ளோம். மேலும், இந்த முழு வழிமுறையும் மும்பையின் பொறுப்பு அமைச்சர்களின் கண்காணிப்பின் கீழ் செய்யப்படுகிறது,” என்று ஷீத்தல் மத்ரே கூறினார்.
இதற்கு மும்பை காங்கிரஸ் தலைவர் வர்ஷா கெய்க்வாட் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். “எனது பகுதியில் என்னுடன் இருந்த கவுன்சிலர்களுக்கு நிதி கிடைக்கவில்லை. ஆனால் இப்போது அவர்கள் சிவசேனாவுக்கு (ஷிண்டே குழு) மாறியிருக்கிறார்கள். கவுன்சிலர் எங்கிருந்து வருகிறார் என்பதைத் தேர்ந்தெடுக்காமல், ஒரு பகுதிக்கு நிதி ஒதுக்கீடு செய்வது சரியான ஆய்வு மற்றும் அறிக்கைகள் மூலம் செய்யப்பட வேண்டும், ”என்று அவர் கூறினார்.
கட்சி மாறாதீர்கள், பணம் வாங்காதீர்கள்
வர்ஷா கெய்க்வாட் உடன்படாததற்கு காரணம் உள்ளது. ஏனெனில், அடுத்தடுத்த வார்டுகளில் இருந்து உறுப்பினர்கள் தற்செயல் நிதியை நாடிய சம்பவங்களும் உள்ளன, ஆனால் கட்சி மாறியவருக்கு பணம் வழங்கப்பட்டது.
சில உதாரணங்கள்:
* ஜூலை 28, 2023 அன்று, சியோன் முனிசிபல் வார்டின் உறுப்பினரான UBT சேனாவின் மங்கேஷ் சதம்கர் ஷிண்டே சேனாவில் சேர்ந்தார். ஒரு மாதத்திற்குப் பிறகு, அவரது வார்டு அதிகாரி ரூ. 5 கோடியைக் கோரினார், அதை BMC அனுமதித்தது. மாறாக, பக்கத்து வார்டில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் உறுப்பினர் ரவிராஜாவின் கோரிக்கைகள் இன்றுவரை நிலுவையில் உள்ளன. ரவிராஜா பி.எம்.சி கமிஷனருக்கு இரண்டாவது கடிதமும், பொறுப்பு அமைச்சருக்கு மூன்றாவது கடிதமும் எழுதியுள்ள போதிலும் நிதி வழங்கப்படவில்லை.
* தெற்கு மும்பையைச் சேர்ந்த UBT சேனா எம்.பி., அரவிந்த் சாவந்த், பி.எம்.சி தலைவருக்கு பிப்ரவரி 2, 2023 அன்று கடிதம் எழுதி, செவ்ரி வார்டில் குடிமராமத்து பணிகளை மேற்கொள்வதற்காக தற்செயல் நிதியின் கீழ் ரூ.6 கோடி வழங்க வேண்டும் என்று கோரினார். அதன் சிட்டிங் உறுப்பினராக சேனா UBT யைச் சேர்ந்த சச்சின் பட்வால் உள்ளார். இருப்பினும், இந்த வார்டுக்கு BMC இன்னும் நிதி ஒதுக்கவில்லை. முன்னாள் உறுப்பினர்கள் சேனா (UBT) மற்றும் காங்கிரஸுடன் இருக்கும் தெற்கு மும்பையில் உள்ள மற்ற இரண்டு வார்டுகளுக்கும் அரவிந்த் சாவந்த் நிதி கோரினார்; இருப்பினும், இந்த வார்டுகளுக்கு BMC இன்னும் நிதி ஒதுக்கவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.