நாட்டுக்காக போரிட வேண்டிய தேவை ஏற்பட்டால், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தால் மூன்றே நாட்களில் ஒரு ராணுவத்தையே உருவாக்க முடியும் என, அவ்வியக்கத்தின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலம் முசாஃபர்பூரில், மோகன் பாகவத் கடந்த ஆறு நாட்களாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சேர்ந்தவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடைசி நாளான நேற்று (ஞாயிறு), ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினரிடையே உரையாடினார்.
அப்போது, ”நாட்டுக்காக போரிட வேண்டிய தேவை ஏற்பட்டால், ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மூன்றே நாட்களில் ஒரு ராணுவத்தை உருவாக்கும். ஆனால், இந்திய ராணுவத்திற்கு இதனை செய்ய 6-7 மாதங்களாகும். தேசத்திற்கு அத்தகைய நிலைமை ஏற்படும்போது, நமது அரசியலமைப்பு சட்டம் அனுமதியளித்தால் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் முன்னே வந்து நிற்கும்.”, என கூறினார்.
மேலும், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சேர்ந்தவர்கள் நாட்டுக்காக மகிழ்ச்சியுடன் உயிர் தியாகம் செய்யவும் எப்போதும் தயாராக இருப்பதாக மோகன் பாகவத் தெரிவித்தார்.
மேலும், குடும்ப மற்றும் பொது வாழ்க்கையில் ஒழுக்கத்தைக் கடைபிடிக்குமாறு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினருக்கு மோகன் பாகவத் வலியுறுத்தினார்.