தேசிய கொடியை சமூக ஊடக பக்கங்களின் சுயவிவரப் படமாக மாற்றிய ஆர்.எஸ்.எஸ்
தேசிய கொடியை சமூக ஊடக பக்கங்களின் சுயவிவரப் படமாக மாற்றிய ஆர்.எஸ்.எஸ்; சங்கத்தின் அனைத்து அலுவலகங்களிலும் தேசியக் கொடி ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளதாகவும் அறிவிப்பு
RSS changes profile pictures of its social media accounts to national flag: சுதந்திர தினத்தை முன்னிட்டு, ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) வெள்ளிக்கிழமை தனது சமூக ஊடக கணக்குகளின் சுயவிவரப் (Profile Picture) படங்களை அதன் பாரம்பரிய காவி கொடியிலிருந்து தேசிய மூவர்ணக் கொடிக்கு மாற்றியுள்ளது.
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு நாடு முழுவதும் 'சுதந்திர தின அமுதப் பெருவிழா (ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்)' கொண்டாடப்படும் நிலையில், ஆகஸ்ட் 2ம் தேதி முதல் 15ம் தேதி வரை நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் சமூக வலைதள கணக்குகளின் சுயவிவரப் படமாக 'மூவர்ணக்கொடி' (திரங்கா) வைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
ஆளும் பா.ஜ.க.,வின் சித்தாந்த ஊற்றுக்கண்ணான ஆர்.எஸ்.எஸ், தேசியக் கொடி குறித்த அதன் நிலைப்பாடு காரணமாக காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டது.
இதனை வெளிப்படுத்தும் விதமாக நாக்பூரில் உள்ள தலைமையகத்தில் 52 ஆண்டுகளாக தேசியக் கொடியை ஏற்றாத ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, 'மூர்வணக் கொடியை' சமூக ஊடக கணக்குகளின் சுயவிவரப் படமாக மாற்ற வேண்டும் என்ற பிரதமரின் வலியுறுத்தலுக்கு ஆர்.எஸ்.எஸ் இணங்குமா என, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இந்த மாத தொடக்கத்தில் கேட்டார்.
வெள்ளிக்கிழமை, ஆர்.எஸ்.எஸ் விளம்பரத் துறை இணைப் பொறுப்பாளர் நரேந்தர் தாக்கூர் கூறுகையில், சங்கம் தனது அனைத்து அலுவலகங்களிலும் தேசியக் கொடியை ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடும் என்று கூறினார்.
மேலும், ‘ஹர் கர் திரங்கா’ பிரச்சாரத்தில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
திட்டத்தின் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 13 முதல் 15 வரை மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் அல்லது காட்ட வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
முன்னதாக, ஆர்.எஸ்.எஸ் விளம்பரத் துறைத் தலைவர் சுனில் அம்பேகர் இதுபோன்ற விஷயங்களை அரசியலாக்கக் கூடாது என்று கூறியிருந்தார்.
மேலும், “ஆர்எஸ்எஸ் ஏற்கனவே ‘ஹர் கர் திரங்கா’ மற்றும் ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ நிகழ்ச்சிகளுக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளது. அரசு, தனியார் அமைப்புகள் மற்றும் சங்கம் தொடர்பான அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகளில் மக்கள் மற்றும் சுயம்சேவகர்களின் முழு ஆதரவையும் பங்கேற்பையும் வழங்க சங்கம் ஜூலை மாதம் கேட்டுக் கொண்டது,” என்றும் சுனில் அம்பேகர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil