சென்னையின் முன்னாள் மேயரும், மனிதநேய அறக்கட்டளையின் நிறுவனருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி பயணம் செய்த கார் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சட்லஜ் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், கார் ஓட்டுநர் உயிரிழந்தார். மற்றொரு நபர் காயத்துடன் மீட்கப்பட்ட நிலையில் வெற்றி துரைசாமியைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சைதை துரைசாமியின் மகன் என்ன ஆனார் என்ற விவரம் இன்னும் தெரியவில்லை.
சைதை துரைசாமி மனிதநேய அறக்கட்டளை ஐ.ஏ.எஸ் அகாடமி நடத்தி வருகிறார். இவர் 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு சென்னையின் மேயராக இருந்தார். இவருக்கு மல்லிகா என்ற மனைவியும் வெற்றி துரைசாமி என்ற மகனும் உள்ளனர்.
சைதை துரைசாமி மனிதநேய அறக்கட்டளை ஐ.ஏ.எஸ் அகாடமிக்கு அவருடைய மகன் வெற்றி உருதுணையாக இருந்து வருகிறார். வெற்றி துரைசாமி திரைப்பட இயக்குநராகவும் உள்ளார். இவர் 2021-ம் ஆண்டு என்றாவது ஒரு நாள் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இந்நிலையில் இமாச்சலப் பிரதேசத்தில் கசாங் நலா அருகே என்.எச் 5 தேசிய நெடுஞ்சாலையில் அம்மாநில பதிவு எண் கொண்ட காரில் வெற்றி துரைசாமி, அவருடைய நண்பர் கோபிநாத் உள்ளிட்ட 3 பேர் பயணம் செய்துள்ளனர். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி, சாலையைத் தாண்டி பள்ளத்தில் கவிழ்ந்து சட்லஜ் ஆற்றில் மூழ்கி விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய காரின் சக்கரங்கள் வெளியே தெரிந்ததால் அவ்வழியாக வந்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்து போலீசுக்கு தகவல் அளித்தனர்.
தகவல் அறிந்த அம்மாநில போலீஸாரும் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் கார் கீழே விழுந்து பாலத்தில் கவிழ்ந்த போது, காரில் இருந்த திருப்பூரைச் சேர்ந்த கோபிநாத் அங்கிருந்த கற்களில் விழுந்து படுகாயமடைந்தார்.
இதையடுத்து, போலீசாற் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரால் அவர் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, பேரிடர் மீட்பு குழுவினர், சட்லஜ் ஆற்றில் விழுந்த காரை மீட்டனர். அதில் கசா பகுதியை சேர்ந்த ஓட்டுநர் டென்சின் என்பவரின் உடல் மீட்கப்பட்டது.
ஆனால், காரில் பயணம் செய்டஹ் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியைக் காணவில்லை என்பதால் அவரை தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
சைதை துரைசாமியின் மகன் வெற்றி, சுற்றுலாவுக்காக இமாச்சலப் பிரதேசம் வந்ததாக கூறப்படுகிறது. அவர் த்ரில்லர் படத்திற்கு லொகேஷன் பார்க்க தனது உதவியாளர் கோபிநாத்துடன் வந்தார் என்று தெரிய வந்துள்ளது.
வெற்றி துரைசாமி மற்றும் அவருடைய உதவியாளர் கோபிநாத் இருவரும் ஓட்டுநர் டென்சின் என்பவருடன் வாடகை காரில் சென்ற போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால், நெஞ்சை பிடித்தபடியே டென்சின் அவதிப்பட்ட நிலையில், ஒரு கட்டத்தில் காரை இயக்க முடியாமல் சரிந்ததால் கார் சாலையில் தாறுமாறாக ஓடியது. இதையடுத்து, அந்த கார் அங்கிருந்த பள்ளத்தில் கவிழ்ந்து, சட்லஜ் ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த கார் விபத்தில், வெற்றியுடன் பயணம் செய்த கோபிநாத் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், ஓட்டுநர் உயிரிழந்த நிலையில் உடல் மீட்கப்பட்டது. ஆனால், வெற்றி துரைசாமிக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. இதனால், போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் வெற்றி துரைசாமியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
சட்லஜ் ஆண்டு முழுவதும் ஓடுகிற ஒரு ஆறு. இந்த ஆற்றில் எப்போதும் தண்ணீர் இருந்துகொண்டே இருக்கும். தற்போது அங்கே பனிப்பொழிவு அதிகம் காணப்படுவதால் சட்லஜ் ஆற்றில் கார் விபத்தில் சிக்கிய சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியைத் தேடும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“