தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஜிப்சம் உள்ளிட்ட கழிவுகளை அகற்றுவதற்கான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேதாந்தா குழுமத்திற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தமிழக அரசின் உயர் மட்டக் குழு அறிக்கையின் பரிசீலனையின் படி அனுமதி அளிப்பதாக கூறப்பட்டது. அதேசமயம் அரசு அனுமதிக்காத எந்த பணியையும் மேற்கொள்ள அனுமதிக்க முடியாது எனவும் நீதிமன்றம் திட்ட வட்டமாக தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் பெரும் போராட்டம் நடத்தியதையடுத்து. ஆலையை நிரந்தரமாக மூடி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் ன்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து ஆலை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நீதிமன்றம்ஆலையை தற்காலிகமாக திறக்கவோ அல்லது பராமரிக்கவோ அனுமதி வழங்க மறுத்தது. இருப்பினும் கொரோனா காலகட்டத்தில் ஆக்சிஜன் உற்பத்தியை மேற்கொள்ள தற்காலிகமாக அனுமதி வழங்கியது. அதன்பிறகு ஆலை மீண்டும் மூடப்பட்டது.
இந்நிலையில் ஆலையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவும், மீதமுள்ள ஜிப்சம் உள்ளிட்ட கழிவுகள் வெளியேற்ற வேண்டும் என்றும் வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று (ஏப்ரல் 10) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்ஹா மற்றும் ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அரசு தடையாக இல்லை
அப்போது, "வேதாந்தா நிறுவனம் தரப்பில். ஆலையில் ஜிப்சம் உள்ளிட்ட கழிவுகள் நீக்கப்படாமல் உள்ளதாக நிபுணர்கள் குழு அறிக்கை அளித்துள்ளது. அந்த கழிவுகள் அகற்றப்படவில்லை எனில் உபகரணங்கள் பாதிப்படையும். ஜிப்சம் கழிவுகளை நீக்க அதிகாரிகள் அனுமதிக்கவில்லை" என்று குற்றஞ்சாட்டப்பட்டது.
இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த தமிழக அரசு மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்யநாதன், "தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கழிவுகளை நீக்க அனுமதி வழங்கியுள்ளார். கழிவுகளை நீக்க அனுமதி வழங்கப்பட்ட சமயத்தில் வேதாந்தா நிறுவனம் அதை செய்யவில்லை. ஜிப்சம் கழிவுகளை அகற்ற 5 ஆண்டுகளுக்கு முன்னரே நீதிமன்றம் உத்தரவிட்டும் அவை அகற்றப்படவில்லை. ஜிப்சம் கழிவுகளை அகற்ற தமிழ்நாடு அரசு ஒருபோதும் தடையாக இல்லை" என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், ஏற்கெனவே தமிழக அரசின் உயர்மட்டக்குழு அனுமதி வழங்கியுள்ளபடி வேதாந்தா நிறுவனம் ஆலையின் கழிவுகளை மட்டும் அதன் சொந்த செலவில் அகற்ற அனுமதிக்கப்படும். அரசு அனுமதிக்காத வேறு எந்த பணிகளையும் மேற்கொள்ள அனுமதிக்க முடியாது என மீண்டும் திட்டவட்டமாகக் கூறி விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“