ஆதார் கட்டாயம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வரும் வரை, ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலகெடுவை நீடிப்பதாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆதார் கட்டாயமாக்குவது தொடர்பான வழக்கில் அரசியல் சாசன அமர்வு இறுதித்தீர்ப்பு வழங்கும் வரை ஆதார் எண்ணை வங்கி, மொபைல் எண், பான் கார்டு என இதனுடன் இணைக்க வேண்டியது கட்டாயமில்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், இந்த மாத (மார்ச்) இறுதிக்குள் ஆதார் எண்ணை மொபைல் எண், வங்கிக் கணக்கு, பான் கார்டு, ரேஷன் கார்டு ஆகியவற்றுடன் இணைக்க வேண்டும் என்ற காலக்கெடு காலவரையின்றி நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆதார் தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன்பு, நேற்று(13.3.18) விசாரணைக்கு வந்தது.
ஆதாரை கட்டாயமாக்குவது குறித்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அரசின் மானியம் பெறும் சமூக நலத்திட்டங்களுக்கு மட்டும் ஆதார் அவசியம் என்று நீதிபதி தெரிவித்தார். அத்துடன், ஆதார் எண்ணை இப்போது இணைக்க வேண்டியது கட்டாயமில்லை என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
வங்கிக்கணக்கு, செல்போன் சேவை இவற்றுடன் ஆதார் எண்ணை இணைப்பது தற்போது கட்டாயமில்லை என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பலரும் வரவேற்றுள்ளனர். ஆதார் எண்ணை வங்கிக்கணக்கு மற்றும் செல்போன் எண்ணுடன் இணைக்க மத்திய அரசு வழங்கிய காலக்கெடு வரும் மார்ச் 31ம் தேதி கடைசி தேதியுடன் முடிகிறது.
இந்நிலையில், ஆதார் எண் இணைப்பது குறித்துன் தீர்ப்பு வரும் வரை, ஆதார் கட்டாயமில்லை என்ற உச்சநீதிமன்றத்தின் அறிவிப்பால் மத்திய அரசு அதிர்ச்சியடைந்துள்ளது.