மாதபி புரி புச் மற்றும் அவரது கணவர், அதானி நிறுவனம் வெளிநாடுகளில் உருவாக்கிய நிறுவனங்களில், பல்லாயிரக்கணக்கான பங்குகளை வைத்திருந்தாக ஹிண்டன்பர்க் அண்மையில் குற்றம் சாட்டியது.
ஆனால், தன் மீதான குற்றச்சாட்டை மாதபி மறுத்தார்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மாதபி புரி விதிமுறைகளை மீறி ஐசிஐசிஐ வங்கியிடம் இருந்து ஊதியம் பெற்று வருவதாக காங்கிரஸ் கட்சி புகார் கூறியது. 2017-ம் ஆண்டு முதல் இதுவரையில் அவர் ரூ.16.8 கோடி ஊதியம் பெற்றுள்ளதாக குற்றம் சாட்டியிருந்தது. எனினும் காங்கிரஸ் கட்சி முன்வைத்த இந்த குற்றச்சாட்டுக்கு மாதபி புச்தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
இதனிடையே மாதபி புரி புச் தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று கோரி மும்பையிலுள்ள செபி தலைமையகம் முன்பு 200-க்கும் மேற்பட்ட செபி ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்நிலையில், பொதுக் கணக்குக் குழு, அரசாங்க செலவினங்களுக்கான நாடாளுமன்றக் கண்காணிப்புக் குழு, மாதபி பூரி புச் செயல்திறனை மதிப்பாய்வு செய்வதை தனது ஆண்டிற்கான நிகழ்ச்சி நிரலில் சேர்க்க முடிவு செய்துள்ளது.
அதன் நிகழ்ச்சி நிரலை அறிவித்துள்ள நாடாளுமன்றக் குழு, மறுஆய்வுச் செயல்பாட்டின் போது தற்போதைய செபி தலைவரை வரவழைக்கும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் தலைமையிலான பொதுக் கணக்குக் குழு, ஆகஸ்ட் 29 அன்று நடந்த கடைசிக் கூட்டத்தில், நாடாளுமன்றச் சட்டத்தால் நிறுவப்பட்ட ஒழுங்குமுறை அமைப்புகளின் செயல்திறன் மதிப்பாய்வு உள்ளடக்கிய, ஒரு வழக்கத்திற்கு மாறான நடவடிக்கையை எடுத்தது.
இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி நிரல் இந்த வார தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்த மாதம் இரண்டு அல்லது மூன்று முறை கூடும் என்று எதிர்பார்க்கப்படும் பொதுக் கணக்குக் குழு, செப்டம்பரில் செபி தலைவரை அழைக்கலாம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. அதன் அடுத்த கூட்டம் செப்டம்பர் 10 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது.
22 உறுப்பினர்களைக் கொண்ட பொதுக் கணக்குக் குழுவில் லோக்சபாவில் இருந்து 15 எம்பிக்களும், ராஜ்யசபாவில் இருந்து ஏழு எம்பிக்களும் உள்ளனர்.
வேணுகோபாலைத் தவிர, பாஜக மூத்த தலைவர்களான ரவிசங்கர் பிரசாத், நிஷிகாந்த் துபே, கே லட்சுமண், அனுராக் தாக்கூர், ஜகதாம்பிகா பால் மற்றும் சுதன்ஷு திரிவேதி ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, டி.சிவா (தி.மு.க.), சக்திசிங் கோஹில், அமர் சிங் மற்றும் ஜெய் பிரகாஷ் (காங்கிரஸ்), சி.எம்.ரமேஷ், அபராஜிதா சாரங்கி, அசோக் சவான், தேஜஸ்வி சூர்யா (பா.ஜ.,), டி.எம்.சி தலைவர்கள் சவுகதா ராய் மற்றும் சுகேந்து சேகர் ரே, தர்மேந்திரா யாதவ் (SP), மகுண்டா ஸ்ரீனிவாசலு ரெட்டி (TDP), வி பாலஷோரி (ஜனசேனா) பிரபுல் படேல் (NCP) ஆகியோரும் அதன் உறுப்பினர்களாக உள்ளனர்.
அரசாங்கத்தின் வருவாய் மற்றும் செலவினங்களைத் தணிக்கை செய்யும் மிக முக்கியமான நாடாளுமன்றக் குழுக்களில் ஒன்றான பொது கணக்கு குழு, பொதுவாக சிஏஜியின் பல்வேறு அறிக்கைகளில் உள்ள தணிக்கைப் பத்திகளை ஆழமான ஆய்வுக்காகத் தேர்ந்தெடுக்கிறது.
கூடுதலாக, ஆண்டு முழுவதும் ஆழமான ஆய்வுக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விஷயங்களை கமிட்டி தேர்ந்தெடுக்கலாம். "இருப்பினும், ஒழுங்குமுறை அமைப்புகளை ஆய்வு செய்வதற்கான முடிவு அரிதானது. சமீப காலங்களில் இது நடக்கவில்லை” என்று நாடாளுமன்ற அமைப்புகளின் செயல்பாடுகளை நன்கு அறிந்த ஒருவர் கூறினார்.
Read in English: SEBI review on agenda, parliamentary watchdog likely to summon Madhabi Buch
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“