தெலங்கானாவின், நாகர்குர்னூல் மாவட்டத்தில் எஸ்.எல்.பி.சி சுரங்கப்பாதை இடிந்து விழுந்த இடத்திலிருந்து மீட்புப் பணியாளர்கள், செவ்வாய்க்கிழமை அன்று இரண்டாவது சடலத்தைக் கண்டுபிடித்தனர். சடலம் யாருடையது என்று இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று மீட்பு படை வீரர் ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்துள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Second body found at Telangana tunnel collapse site, CM Revanth Reddy takes stock
சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் சடலம் கண்டெடுக்கப்பட்டது. பிப்ரவரி 22 அன்று சுரங்கப்பாதையின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் எட்டு தொழிலாளர்கள் அதில் சிக்கிக்கொண்டனர். மார்ச் 9 ஆம் தேதி, சரிவு ஏற்பட்டபோது செயல்பாட்டில் இருந்த டனல் போரிங் மெஷின் அருகே இருந்து ஒரு சடலம் மீட்கப்பட்டது. அப்போது சடலமாக மீட்கப்பட்ட நபர், பஞ்சாபைச் சேர்ந்த குர்பிரீத் சிங் என்பவருடையது என்று தெரிய வந்தது.
தெலங்கானா அரசு சுரங்கப்பாதையில் தேடுதல் பணிகளைத் தொடர முடிவு செய்த ஒரு நாள் கழித்து இரண்டாவது சடலம் கண்டெடுக்கப்பட்டது.
திங்கள்கிழமை, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி செயல்பாடுகளை மறுஆய்வு செய்யும் கூட்டத்தில் கலந்து கொண்டார். மேலும், தேவையான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தினார் என்று முதல்வர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. நடவடிக்கைகளைக் கண்காணிக்க உயர்மட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆய்வுக் கூட்டத்தில், மத்திய, மாநில மற்றும் தனியார் அமைப்புகள் உட்பட 25 ஏஜென்சிகள் தலைமையில் நடைபெற்று வரும் தேடுதல் பணிகள் குறித்து முதல்வரிடம் விளக்கப்பட்டது. மீட்புப் பணிகளில் மொத்தம் 700 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று அதிகாரிகள் முதல்வரிடம் தெரிவித்தனர்.
சுரங்கப்பாதையில் உள்ள நுழைவாயிலில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் விபத்து ஏற்பட்டதால், மோசமான காற்று மற்றும் வெளிச்சம் காரணமாக மீட்புப் பணிகள் தாமதமாகியதாக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்து நடந்த பகுதியின் 30 மீட்டர் மிகவும் ஆபத்தான பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
- Nikhila Henry