2016ம் ஆண்டு, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் அப்சல் குருவின் தூக்கு தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார்கள் அப்பல்கலைக்கழக மாணவர்கள். அதில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவர்கள் மாணவர்கள் அமைப்பின் தலைவர் கன்ஹைய்யா குமார் அவரின் நண்பர் உமர் காலித் .
இந்தியாவிற்கு எதிராகவும் பிரிவினைவாதத்தினை தூண்டிவிடும் வகையிலும் வாக்கியங்களை முழங்கியதால் இந்த இரண்டு மாணவர்களுடன் சேர்த்து மேலும் சில மாணவர்களுக்கு தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அம்மாணவர்கள் டெல்லி போலீசாரால் காவலில் வைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் உமர், கன்ஹைய்யா மற்றும் 13 மாணவர்களுக்கு அபராதம் விதித்திருக்கிறது.
பல்கலைக்கழகத்தின் ஒழுக்கத்திற்கு கேடு விளைவிக்கும்படி நடந்து கொண்டதால் அவர்களுக்கு விபராதம் விதித்ததாக அறிவித்தது பல்கலைக்கழக நிர்வாகம்.
அப்சல் குரு மரணத்தை தொடர்ந்து, காஷ்மீரில் நிலவும் அரசியல் சூழல் குறித்து ஒரு நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தார்கள் மாணவர்கள். அதில் பங்கேற்பதற்காக காஷ்மீரில் இருந்து பேராசிரியர் ஒருவரும் வரவைக்கப்படிருந்தார்.
பல்கலைக்கழகத்தில் இயங்கி வந்த ஏபிவிபி இந்த நிகழ்விற்கு எதிர்ப்பு தெரிவிக்க, இது பெரிய போராட்டத்தில் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் போராட்டங்கள் மற்றும் கலவரங்கள் நடைபெற்றது.
இந்த ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் விளைவாக ஒவ்வொருவருக்கும் 10,000 அபராதம் விதித்திருக்கிறது பல்கலைக்கழகம்.