புதுச்சேரி, மதகடிப்பட்டு அருகே உள்ள குச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தண்டபாணி, விவசாயி. இவர் கடந்த மாதம் 24-ம் தேதி தனது வீட்டில் மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டில் இருந்த 10.5 பவுன் நகை மற்றும் பத்தாயிரம் ரூபாய் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டது என திருபுவனை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வாசன் எஸ்.ஐ கதிரேசன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று திருபுவனை எஸ்.ஐ கதிரேசன் தலைமையில் போலீசார் ஆண்டியார் பாளையம் பகுதியில் வாகன சோதனை ஈடுபட்டனர். அப்பொழுது விழுப்புரம் பகுதியில் இருந்து புதுச்சேரி நோக்கி இரண்டு சக்கர வாகனத்தில் இருவர் வந்து கொண்டிருந்தனர். அவர்களை மடக்கி நிறுத்தி வாகன சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது வாகனத்தில் சுத்தி மற்றும் வெட்டிரும்பு ஆகியவை இருந்தன.
சந்தேகத்தின் பேரில், அவர்களை விசாரித்த போது முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளனர். அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் விழுப்புரம் காமன் கோயில் தெரு வழுதுரெட்டி பகுதியை சேர்ந்த துரைராஜ் என்பவரின் மகன் சந்தோஷ் என்கிற சந்தோஷ் குமார் (37) மற்றும் விழுப்புரம் பெருமாள் கோயில் வழுது ரெட்டி பகுதியைச் சேர்ந்த ரகுபதி மகன் கிருபாகரன் (35) ஆகிய இருவரும் குச்சிப்பாளையம் பகுதியில் வீட்டின் கதவை உடைத்து திருடி சென்றது தாங்கள்தான் என்பதை ஒப்புக்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் கடந்த ஒரு மாதமாக அந்த வீட்டை நோட்டமிட்டு பின்னர் கடந்த 24-ம் தேதி வீட்டின் கதவை உடைத்து நகைகளை திருடி சென்றோம் என்று தெரிவித்தனர். தொடர்ந்து அதே பகுதியில் கடந்த ஓராண்டுக்கு முன்பு மற்றொரு வீட்டில் நகை திருடி சென்றுள்ளதும் இதேபோன்று கொத்தம்புரி நத்தம் பகுதியில் ஒரு வீட்டில் திருடிச் சென்றதையும் ஒப்புக்கொண்டனர்.
மேலும், அவர்களிடமிருந்து தங்க மோதிரம், வளையல், தாலி சரடு, வெள்ளி அரைநான் கயிறு உள்ளிட்ட சுமார் பத்து லட்சம் மதிப்புள்ள 11 பவுன் நகை மற்றும் பத்தாயிரம் ரொக்க பணம் செல்போன் இரண்டு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், சந்தோஷ் மெக்கானிக்காக வேலை செய்து வருவதாகவும் இரண்டு சக்கர வாகனங்களில் இந்த திருபுவனை உள்ளிட்ட பகுதிகளில் ஆட்கள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு திருடுவதை ஒப்புக்கொண்டனர். அவர்களை கைது செய்து புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.