பழம்பெரும் நடிகர் சசி கபூர் உடல் நலக்குறைவால் காலமான நிலையில், சமூக வலைத்தளங்களில் பெரும்பாலானோர் தவறுதலாக காங்கிரஸ் தலைவர் சசி தரூருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பாலிவுட்டின் பழம்பெரும் நடிகரான சசி கபூர், தன் 79-வது வயதில் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று (திங்கள் கிழமை) மும்பையில் காலமானார். அவரது மறைவுக்கு இந்திய திரையுலகம் அஞ்சலி செலுத்தி வருகிறது. மேலும், அவரது ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளங்களிலும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பெயர் குழப்பம் காரணமாக, சசி கபூருக்கு அஞ்சலி தெரிவிக்காமல், நெட்டிசன்கள் பலரும் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சசி தரூருக்கு இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து, தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள சசி தரூர், "இறந்தது சசி கபூர் தான் எனவும், தான் இறக்கவில்லை", எனவும் விளக்கமளித்துள்ளார். மேலும், சசி கபூரின் குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் தனது இரங்கலையும் சசி தரூர் தெரிவித்துள்ளார்.