தென்மேற்கு டெல்லியின் வசந்த் கஞ்சில் உள்ள ருச்சி விஹாரில் உள்ள காட்டுப் பகுதியில் ஏழு மற்றும் ஐந்து வயதுடைய இரண்டு உடன்பிறப்புகள் தெருநாய்களால் அடித்துக் கொல்லப்பட்டதாகக் காவல்துறை கூறியுள்ளது. இரண்டு நாட்கள் இடைவெளியில் குழந்தைகள் வெவ்வேறு சம்பவங்களில் தாக்கப்பட்டு, காயங்களுக்கு ஆளானதாக போலீசார் தெரிவித்தனர். இந்த மரணம் குறித்து உள்ளூர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளதாகவும், இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில், மூத்த சகோதரர் ஆனந்த், வனப்பகுதிக்கு அருகில் உள்ள சிந்தி பஸ்தியில் உள்ள தனது வீட்டில் இருந்து காணாமல் போனார். அவரைத் தேடுவதற்காக காவலர்களுடன் குழந்தையின் தாயும் சென்றார் என்று போலீசார் தெரிவித்தனர். “இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு, தனிமையான/ காலியான நிலத்தில் சுவரின் அருகே குழந்தையின் உடலைக் கண்டோம். உடலில் பல காயங்கள் இருந்தன,” என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.
இதையும் படியுங்கள்: ஓஷோவின் 70-வது ஞானம் அடைந்த நாள் கொண்டாட்டம்; போலீஸ் உதவியை நாடும் கிளர்ச்சியாளர்கள்
வசந்த் கஞ்ச் தெற்கு காவல் நிலையத்தில் கொலைப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சடலம் பிரேதப் பரிசோதனைக்காக சப்தர்ஜங் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
“காயங்கள் விலங்குகள் கடித்தது போல் இருந்தது. அக்கம்பக்கத்தினர் மற்றும் அப்பகுதி மக்களிடம் விசாரித்தபோது, வனப்பகுதிக்குள் அடிக்கடி ஆடு, பன்றிகளை தாக்கும் தெருநாய்கள் இருப்பது தெரிய வந்தது. அந்த இடத்தை தடயவியல் குழு மற்றும் குற்றக் குழு ஆய்வு செய்தது, ”என்று அந்த அதிகாரி கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில், ஆனந்தின் தம்பி ஆதித்யா (5) தனது உறவினர் சாந்தனுடன் சிறுநீர் கழிப்பதற்காக அதே காட்டுப் பகுதிக்கு சென்றார். “சாந்தன் ஆதித்யாவை விட்டு சிறிது தூரத்திற்கு தள்ளிச் சென்றான். சிறிது நேரம் கழித்து, சாந்தன் ஆதித்யாவை விட்டுச் சென்ற இடத்திற்குத் திரும்பி வந்தப்போது, சிறுவன் ஆதித்யாவை தெருநாய்கள் சூழந்திருப்பதைக் கண்டான். ஆதித்யா படுகாயமடைந்தான். ஆனந்தின் விசாரணை தொடர்பாக அப்பகுதியில் இருந்த வசந்த் கஞ்ச் தெற்கு எஸ்.ஐ மகேந்தர், சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டு, ஆதித்யாவை நாய்கள் தாக்கியதைக் கண்டுபிடித்தார். அவர் தனது காரில் குழந்தையை இந்திய முதுகுத்தண்டு காயம் மையத்திற்கு கொண்டு சென்றார், ஆனால் சிறுவன் சிகிச்சையின் போது மரணமடைந்து விட்டான், ”என்று அந்த அதிகாரி கூறினார்.
இரு சகோதரர்களின் பிரேதப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு விரைவில் அறிக்கை அனுப்பப்படும் என்று போலீஸார் தெரிவித்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil