Sikkim Flash Floods: சிக்கிம் மாநிலத்தில் உள்ள டீஸ்டா நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி 23 ராணுவ வீரர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். ராணுவ வீரர்கள், வாகனங்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது
லச்சேன் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக கனமழை பெய்து காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் பள்ளத்தாக்கில் உள்ள ராணுவ முகாம்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சில வாகனங்கள் சேற்றில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
"பள்ளத்தாக்கில் உள்ள சில ராணுவ முகாம்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் விவரங்களை உறுதிப்படுத்தும் முயற்சிகள் நடந்து வருகின்றன. 23 ராணுவ வீரர்கள் காணாமல் போயுள்ளதாகவும், சில வாகனங்கள் சேற்றில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன” என்று கவுகாத்தியின் பாதுகாப்புப் பிரிவின் அறிக்கை கூறுகிறது.
இன்று (புதன்கிழமை) அதிகாலை 1:30 மணிக்கு திடீர் வெள்ளம் தொடங்கியதாக நம்பப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், டீஸ்டா நதியின் நீர்மட்டம் புதன்கிழமை மதியம் 1 மணியளவில் அபாய அளவைக் காட்டிலும் குறைவாக இருந்தது. அதைச் சுற்றி வெள்ள நிலைமை இல்லை என்று மத்திய நீர் ஆணையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. மத்திய நீர் ஆணையத்தின் (CWC) கூற்றுப்படி, டீஸ்டாவில் உள்ள மெல்லி, சிங்டம் மற்றும் ரோஹ்தக் ஆகிய மூன்று நிலையங்களில் நீர்மட்டம் அபாயக் குறிக்குக் கீழே உள்ளது.
சுங்தாங் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால், நீர்மட்டம் திடீரென 15-20 அடி உயரத்திற்கு கீழ்நோக்கி அதிகரித்தது. இதனால் சிங்டம் அருகே பர்டாங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ராணுவ வாகனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Sikkim Flash Floods Live Updates
இந்நிலையில், வடக்கு சிக்கிமில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிக்கிம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரி ஒருவர் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், சிங்டாமில் இருந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளின் போது மூன்று உடல்கள் மீட்கப்பட்டுள்ளன." என்றார்.
சிக்கிமின் நான்கு மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் அக்டோபர் 8 ஆம் தேதி வரை மூடப்படும் என்று கல்வித் துறை அதன் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது. லாச்சென் பள்ளத்தாக்கில் உள்ள முகாம்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விவரங்களை உறுதிப்படுத்தும் முயற்சிகள் நடந்து வருவதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“