மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்து வரும் நிலையில் சிவசேனா கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாரை சந்தித்து பேசியுள்ளனர். இந்த சந்திப்பு, மகாராஷ்டிரா அரசியலில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ., - சிவசேனா இடையே சுமூக தீர்வு ஏற்பட்டதாக தகவல் வெளியான நிலையில், இந்த சந்திப்பு நடைபெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிரா சட்டசபை, இம்மாதம் 21ம் தேதி நடைபெற்றது.வாக்கு எண்ணிக்கை 24ம் தேதி நடைபெற்றது. மொத்தமுள்ள 288 இடங்களில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதே நேரத்தில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பா.ஜ., - சிவசேனா கட்சிக்கு ஆட்சி அமைப்பதற்கான இடங்கள் கிடைத்தது. இருப்பினும் இரு கட்சிகளிடையே 50;50 என்ற அதிகார பகிர்வு குறித்த பிரச்னையில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.
இரு தரப்பினரும் ஏற்கனவே நடந்த ஒப்பந்தத்தை கடைபிடிப்பதில் முரண்டு காட்டி வருவதாகவும் தெரிகிறது. இதனால் தாக்ரே, முதல்வர் பட்னாவிஸ் தங்களின் அதிருப்தியை வெளிப்படையாக பேசி வருகின்றனர்.
இந்நிலையில் திடீர் திருப்பமாக சிவேசேனா கட்சியின் மூத்த நிர்வாகியான சஞ்சய் ரவுத் மற்றும் மூத்த எம்பி.,க்கள் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாரை , அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்துள்ளனர். இரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பாக விவாதித்திருக்கலாம் என அரசியல் தரப்பில் கூறப்படுகிறது. ஏற்கனவே சரத்பவார் எதிர்கட்சி வரிசையில் அமருவோம் என தெளிவுபட அறிவித்திருந்த நிலையில் தற்போதைய சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.