Shubhajit Roy
இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க திங்கட்கிழமை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பின்னர், இந்தியாவும் இலங்கையும் இணைய பாதுகாப்பு உட்பட நான்கு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆங்கிலத்தில் படிக்க: Sri Lankan President Dissanayake reaches Delhi, his first foreign trip after coming to power, pacts readied
திசாநாயக்க, ஞாயிற்றுக்கிழமை மாலை புதுடில்லியை வந்தடைந்தார், டிசம்பர் 15 முதல் 17 வரை இந்தியாவிற்கு அரசுமுறைப் பயணமாக வந்திருக்கிறார். செப்டம்பரில் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் இது அவரது முதல் வெளிநாட்டுப் பயணம்.
இலங்கையில் அண்மையில் முடிவடைந்த ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் ஜனாதிபதி திசாநாயக்க இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதலாவது பயணம் இதுவாகும் என வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
இந்த பயணத்தின் போது, ஜனாதிபதி திஸாநாயக்க, குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்திக்கிறார் மற்றும் பிரதமர் மோடியுடன் "பரஸ்பர நலன் சார்ந்த இருதரப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள்" குறித்து கலந்துரையாடுவார் என ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.
திஸாநாயக்க புதுடெல்லியில் வர்த்தக நிகழ்வொன்றில் பங்கேற்கவுள்ளதோடு, புத்த கயாவிற்கும் பயணம் செய்யவுள்ளார்.
"ஜனாதிபதி திசாநாயக்கவின் இந்திய பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும்" என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறினார்.
அரசியல் உயரடுக்கினரால் ஆளப்படும் பாரம்பரிய அரசியல் கட்சிகளைத் தோற்கடித்த புதிய இலங்கை ஜனாதிபதி திசாநாயக்க, பதவியேற்ற பிறகு அவரின் முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியா அமைந்திருப்பது, இருதரப்பு உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை உணர்த்துகிறது.
திஸாநாயக்கவுடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் நிதித்துறை இணை அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ ஆகியோரும் வருகை தந்துள்ளனர்.
திசாநாயக்கவின் வருகை இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மறுபரிசீலனை செய்வதற்கும் இலங்கையில் புதிய தலைமையின் கீழ் எதிர்கால வாய்ப்புகளைப் பார்ப்பதற்கும் ஒரு வாய்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திஸாநாயக்கவின் திட்டங்கள், இந்திய முதலீடுகள், பிராந்திய பாதுகாப்பு பற்றிய பார்வைகள் மற்றும் பிற பிரச்சினைகள் உட்பட நாட்டிலுள்ள தமிழ் சிறுபான்மையினர் உரிமைகள் தொடர்பான அவரது அணுகுமுறை பற்றி நேரடியாகக் கேட்க இந்தியாவுக்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கும்.
திஸாநாயக்கவின் வெற்றியின் பின்னர் பதினைந்து நாட்களுக்குள் கொழும்புக்கு பயணம் செய்த வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரால் புது டெல்லிக்கு வருவதற்கான அழைப்பு விடுக்கப்பட்டது.
திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் செப்டம்பர் 23 ஆம் தேதி பதவிக்கு வந்த பின்னர் இலங்கைக்கு பயணம் செய்த முதலாவது வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் ஆவார்.
225 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தின் முழுமையான கட்டுப்பாட்டைப் பெற்று, திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி ஒரு வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தபோது, நவம்பரில் பாராளுமன்றத் தேர்தல் முடியும் வரை ஜனாதிபதியின் வருகை நிறுத்தப்பட்டது.
அக்டோபர் 4 அன்று கொழும்பில் ஜெய்சங்கர் அவரைச் சந்தித்தபோது, திசாநாயக்க அவரிடம், "இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் இலங்கைப் பகுதி ஒருபோதும் பயன்படுத்த அனுமதிக்கப்படாது" என்று கூறியிருந்தார், இது தீவு தேசத்தில் சீனாவின் இருப்பை மறைமுகமாகக் குறிப்பிடுகிறது.
வளமான இலங்கை மற்றும் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்கு இந்தியாவின் பொருளாதார ஆதரவு மிகவும் முக்கியமானது என்று திஸாநாயக்க கூறியுள்ளார்.
இந்தியா ஆரம்பத்திலிருந்தே இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் மீட்சிக்கு ஆதரவாக இருந்ததுடன், சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதியை இறுதி செய்ய உதவுவதற்கு நிதி உத்தரவாதங்களை வழங்கிய முதல் நாடு ஆகும். 2022 இல் பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா 4 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி மற்றும் மனிதாபிமான ஆதரவை வழங்கியது.
இந்திய அரசாங்கத்தின் நீண்டகால கோரிக்கையான தமிழ் சிறுபான்மையினருக்கு அதிகாரங்களை வழங்கும் 13வது திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கு திஸாநாயக்க ஆதரவளிக்கவில்லை.
விடுதலைப் புலிகளுக்கும் இலங்கைப் படைகளுக்கும் இடையே நடந்த உள்நாட்டுப் போரின் போது நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான எந்த விசாரணையையும் திசாநாயக்க எதிர்த்துள்ளார். தமிழ் சிறுபான்மையினருக்கான அதிகாரப் பகிர்வு மற்றும் அதற்கான வழிமுறைகள் குறித்து இரு தரப்பும் குறிப்புகளை பரிமாறிக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக புதுடெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“