ஸ்ரீதேவி இறுதி அஞ்சலி நிகழ்ச்சி இன்று மும்பையில் நடக்கிறது. இதையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்த ரசிகர்களும், வி.ஐ.பி.க்களும் கூடுகிறார்கள்.
ஸ்ரீதேவியின் மரணம், சினிமா உலகைத் தாண்டி இந்தியாவின் சோகமாக பார்க்கப்படுகிறது. இந்தியாவின் கலை அடையாளமாக அவரை பலரும் சுட்டிக் காட்டுகிறார்கள். தமிழ்நாட்டில் சிவகாசி அருகே மீனம்பட்டி என்ற குக்கிராமத்தில் இருந்து புறப்பட்ட ஸ்ரீதேவி தமிழ் சினிமா உலகில் தடம் பதித்து, தெலுங்கு மற்றும் மலையாள சினிமா உலகிலும் வெற்றிக் கொடி நாட்டி இந்தி திரை உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக சிகரம் தொட்டவர்!
ஸ்ரீதேவியின் வயது 54 தான் என்றாலு, 50 ஆண்டுகள் சினிமா வாழ்வுக்கு சொந்தக்காரர் அவர்! ஞாயிற்றுக் கிழமை (பிப்ரவரி 25) அதிகாலையில் துபாயில் மரணமடைந்த ஸ்ரீதேவியின் உடல் இன்று மும்பைக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு அவரது கணவர் போனி கபூரின் குடும்ப வழக்கப்படி இறுதி அஞ்சலி நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்த நேற்று முதல் அவரது இல்லத்தில் ரசிகர்களும் ரசிகைகளும் குவிந்தபடி இருக்கிறார்கள். இன்று காலை தனி விமானத்தில் துபாயில் இருந்து ஸ்ரீதேவியின் உடல் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரீதேவி உடலுடன் அவரது கணவர் போனி கபூர், மகள்கள் ஜான்வி, குஷி ஆகியோரும் வருகிறார்கள்.
இந்தியா முழுவதும் இருந்து சினிமாத் துறை மட்டுமல்லாது பல்வேறு துறை பிரபலங்களும் ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்த மும்பையில் கூடியவண்ணம் இருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று இரவு சென்னையில் இருந்து தனது மனைவி லதாவுடன் விமானத்தில் புறப்பட்டுச் சென்றார். தென் இந்திய நடிகர் சங்கம் சார்பிலும் அஞ்சலி செலுத்த நிர்வாகிகள் செல்கிறார்கள்.