காரைக்காலின் கீழகாசாக்குடிமேடு மீனவ கிராமத்தை சேர்ந்த பால்மணி என்பவருக்கு சொந்தமான மீன்பிடி விசைப்படகில் மோகன்குமார், மாணிக்கவேல், செல்வநாதன், சக்திவேல், தமிழ்மணி உள்ளிட்ட 18 மீனவர்கள் கடந்த 2-ம் தேதி அதிகாலை காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்து கொண்டிருக்கும்போது திடீரென இவர்களது படகு பழுதானது. இதனை அடுத்து அருகில் இருந்த விசைப்படகு வாக்கி டாக்கி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு, பழுதான படகை கயிறு மூலம் கட்டி இழுத்து செல்லும்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை சிறைபிடித்தனர்.
இதைத் தொடர்ந்து, காப்பாற்ற வந்த படகில் இருந்தவர்கள் கயிறை அறுத்துவிட்டு தப்பி வந்துள்ளனர். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், மீன்பிடி விசைப்படகுகளையும் உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஃபீஞ்சல் புயல் காரணமாக கடந்த 10 நாள்களுக்கு மேலாக மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இருந்த நிலையில், கடலுக்கு சென்ற மறுநாளே இலங்கை கடற்படையால் காரைக்கால் மீனவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“