Sterling Biotech money laundering case : குஜராத் மாநிலத்தில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனம் மீதான மோசடி வழக்கு நடைபெற்று வருகிறது. இதனை விசாரித்து வரும் அமலாக்கத்துறை புதிய தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
இந்த நிறுவனத்தில் இருந்து சுமார் 25 லட்சம் ரூபாய் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் ராஜ்யசபா உறுப்பினர் அகமது படேல் அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது என்ற தகவலை வெளியிட்டிருக்கிறது அமலாக்கத்துறை.
வியாழக்கிழமை, ரஞ்சித் மாலிக் அவர்களை விசாரிக்க வேண்டி நீதிமன்றத்தில் கேட்டுக் கொள்ளப்பட்ட விண்ணப்பத்துடன் இந்த அறிக்கையினையும் சமர்பித்தது அமலாக்கத்துறை.
Sterling Biotech money laundering case மீதான விசாரணை
குஜராத்தை சேர்ந்த இந்த மருத்துவ நிறுவனம் ஆந்திரா வங்கிகளிடம் இருந்து போலி ஆவணங்கள் சமர்பித்து 5000 கோடி ரூபாய்க்கு கடன் வாங்கியிருப்பது கண்டறியப்பட்டது. வாங்கப்பட்ட கடன் தொகையை வைத்து புதிய சொத்துகளை வாங்க முயன்றதாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்தது.
அமலாக்கத்துறையும் அதனுடன் இணைந்து பண மோசடி வழக்கினை பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த வருடம் டெல்லியைச் சேர்ந்த ககன் தவான் என்ற தொழிலதிபரை கைது செய்தது அமலாக்கத்துறை.
கடந்த வாரம் தவானின் மேனஜர் ரஞ்சித்தினை கைது செய்தது அமலாக்கத்துறை. இதற்கு முன்பாக பல்வேறு நேரங்களில் அவரை நீதிமன்றத்தில் ஆஜராகச் சொல்லியும் அவர் வராததால் அவரை கைது செய்திருக்கிறார்கள்.
ரஞ்சித்திற்கு கீழே வேலை செய்யும் ராகேஷ் சந்திராவை விசாரித்த போது அவர் ஒரு வாக்குமூலம் கொடுத்தார். அதன்படி சுமார் 25 லட்சம் ரூபாய் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் ராஜ்யசபா உறுப்பினர் அகமது படேலிடம் டெல்லியில் வைத்து கொடுத்தாக கூறியுள்ளார்.
23, மதர் தெரசா க்ரசெண்ட், நியூடெல்லி என்பது அகமது படேலிற்கு அரசாங்கம் கொடுத்த அதிகாரப்பூர்வ குடியிருப்பு பகுதியாகும் என்று குறிப்பிட்ட அமலாக்கத்துறை ரஞ்சித், தவான், மற்றும் இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட எவரும் விசாரணைக்கு முறையாக ஒத்துழைப்பதில்லை என்றும் கூறியுள்ளது.
புகார் கூறப்படும் அகமது படேல், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவின் அரசியல் ஆலோசகராக இயங்கியவர்! இவரை ராஜ்யசபைத் தேர்தலில் தோற்கடிக்க குஜராத்தில் எம்.எல்.ஏ.க்கள் இழுப்புப் படலம் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.