Advertisment

நாடு தழுவிய மாணவர்கள் போராட்டம் : எச்சரிக்கை செய்யும் பிரதமர் நரேந்திர மோடி

பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஏதேனும் போராட்டங்கள் நடைபெற்றால் அதனை தெரியப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Students protest across the country PM Narendra Modi warns

Students protest across the country PM Narendra Modi warns

Students protest across the country PM Narendra Modi warns : கேரளாவில் இருந்து புதுடெல்லி வரை, குஜராத்தில் இருந்து மேற்கு வங்கம் வரை படிக்கும் மாணவர்கள் ஜாமியா மில்லியா பல்கலைகழகத்தில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தில் காவல்துறையினர் நடந்து கொண்ட விதத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். நரேந்திர மோடி அனைவரையும் அமைதி காக்க வேண்டும் என்று கூறினார். திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தால் இந்தியர்கள் பயப்பட தேவையில்லை என்று அவர் கூறியுள்ளார்.

Advertisment

ஜாமியா மில்லியா பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்து மாணவர்களை காவல்துறையினர் தாக்கினர். இதனைத் தொடர்ந்து 100 கணக்கான போராட்டக்காரர்கள் தங்களின் சமூக வலைதளங்களில் தங்களின் கருத்துகளையும் தாக்குதலுக்கு ஆளானவர்களின்  புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தனர். வன்முறை  போராட்டம் துரதிர்ஷ்டவசமானது என்றும் அது அழுத்தம் தருபவை என்றும் மோடி கூறியுள்ளார். மேலும் தங்களின் சுயநலனுக்காக நம்மை பிரித்து பிரச்சனையை சிலர் உருவாக்குகின்றார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சித்  தலைவர்கள் இந்த பிரச்சனையை பெரிதாக்குகிறார்கள் என்று அவர்கள் மீது குற்றம்சாட்டிய மோடி, நெருப்பினை பரப்புபவர்களை அவர்களின் ஆடைகளை கொண்டு அடையாளம் காண முடியும் என்றும் கூறினார்.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

அமைச்சர்களின் கருத்து

பிரதமரின் ட்வீட்டினை தொடர்ந்து அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் முக்கிய அமைச்சர்களாக நிர்மலா சீதாராமன், அமித் ஷா, ரமேஷ் போக்ரியால் நிஷாங் உள்ளிட்டோரும் தங்களின் கருத்துகளை பதிவு செய்தனர். போராடும் மாணவர்கள் திருத்தப்பட்ட குடியுரிமை மசோதாவை படித்து பார்க்க வேண்டும் என்றும் சில கட்சியினர் விரிக்கும் மாய வலைக்குள் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்றும், அவர்கள் தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக தவறான செய்திகளை திட்டமிட்டு பரப்புகிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார் அமித் ஷா.

ஜிகாதிகள், மாவோயிஸ்டுகள் மற்றும் பிரிவினை வாத சக்திகள் மாணவர்களின் போராட்டங்களுக்குள் புகுந்துள்ளனர் என்றும் கூறினார். மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் மாணவர்கள் அனைவரும் வன்முறையில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றும், நாட்டின் நலனுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

மாணவர்கள் போராட்டம்

ஐஐடி சென்னை, ஐஐடி பாம்பே, இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சையன்ஸ் பெங்களூரு போன்ற கல்வி நிலையங்களில் படிக்கும் மாணவர்களும் டெல்லி காவல்துறையினரின் கண்மூடி தனமான தாக்குதலுக்கு எதிராக குரல் கொடுத்தனர்.

ஜாமியாவில் மாணவர்கள் மற்றும் அந்த பகுதிகளில் வாழும் பொதுமக்கள் காவல்துறையின் நடவடிக்கையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி பல்கலைக்கழக வளாகத்தின் ஆர்ட்ஸ் பிரிவை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினார்கள். நேற்று மாலை ஆயிரக்கணக்கில் மாணவர்கள் இந்தியா கேட் அருகே ஒன்றிணைந்து போராட்டங்களில் ஈடுபட்டனர். புதிதாக கொண்டுவரப்பட்டிருக்கும் சட்டத்திற்கு எதிராக  போராடிய அவர்கள், இந்திய அரசியல் சாசனத்தின் முன்னுரையை வாசித்து தங்களின் எதிர்ப்பினை பதிவு செய்தனர்.

மும்பை பல்கலைக்கழக மாணவர்கள் கலினா வளாகத்தில் திரண்டு காவல்துறையினர் நடவடிக்கைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஞாயிற்றுக் கிழமை இரவு ஐஐடி பாம்பே வளாகத்தில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் தன்மை குறித்து மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அந்த கல்வி நிறுவனத்தின் இயக்குநரிடம் பேசியுள்ளது. டி.ஐ.எஸ்.எஸ். கல்வி நிறுவனத்தை சேர்ந்த மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்துவிட்டு செம்பூர் வளாகத்தின் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Students protest across the country PM Narendra Modi warns Express Cartoon by E P Unny

சென்னையின் பல்வேறு இடங்களில் 6க்கும் மேற்பட்ட போராட்டங்கள் நடைபெற்றது. மெட்ராஸ் பல்கலைக்கழக மாணவர்கள் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தின் நகல்களை எரித்து தங்களின் எதிர்ப்பினை பதிவு செய்தனர். அதே போன்று சென்னை, மதுரை, கோவை ரயில் நிலையங்களிலும் போராட்டஙக்ள் நடைபெற்றது. சென்னை ஐஐடி வளாகத்தில் மகாத்மா காந்தி மற்றும் பி.ஆர். அம்பேத்கார் புகைப்படங்களை கையில் ஏந்தியவாறு 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் குடியுரிமை பதிவேட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள்.

பெங்களூருவின் IISc -ல் படிக்கும் சில மாணவர்கள் தங்களின் வளாகத்திற்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேரணியாக நடந்து சென்று தங்களின் எதிர்ப்பினை பதிவு செய்தனர். மேற்கு வங்கத்தில் ஜதவ்பூர் பல்கலைக்கழகத்தில் போராட்டங்கள் நடைபெற்றது. பிரஸிடென்ஸி பல்கலைக்கழக வளாகத்தில் பேரணி நடத்தி மாணவர்கள் தங்களின் எதிர்ப்பினை பதிவு செய்தனர். ஐ.ஐ.எம். அகமதாபாத், என்.ஐ.டி. மற்றும் குஜராத் தேசிய சட்ட கல்லூரி மாணவர்களும் தங்களின் எதிர்ப்பினை பதிவு செய்தனர்.

கேரளத்தில் பல்வேறு மாணவர்கள் அமைப்பினர் மத்திய அரசின் இந்த புதிய சட்டத்திற்கு எதிராக போராடினார்கள். காசர்கோடு மத்திய பல்கலைக்கழகம், கோழிக்கோடு பல்கலைக்கழகம், காந்தி பல்கலைக்கழகம், கொச்சின் பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்களில் போராட்டங்கள் நடைபெற்றது.

லக்னோவில் மாணவர்கள் போராட்டம் நடைபெற்றது. காவல்துறையினருடன் கலவரத்தில் ஈடுபட்டனர் மாணவர்கள். வாரணாசி இந்து பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஐதராபாத் மௌலானா ஆசாத் உருது பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடைபெற்றது.

மோடியின் கருத்துகள்

தொடர்ந்து மாணவர்களை சாந்தப்படுத்தும் முயற்சியில் இறங்கினார் மோடி. தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்  “குடியுரிமை திருத்த சட்டம் 2019ம் ஆண்டு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றது. இந்த சட்டத்திற்கு பெரும்பாலான எம்.பிக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த சட்டம் இந்தியாவின் நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த ஏற்றுக்கொள்ளுதல், நல்லிணக்கம், இரக்கம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றின் கலாச்சாரத்தையே காட்டுகிறது என்று ட்வீட் செய்துள்ளார்.

இந்த நேரத்தில் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து இந்தியாவின் வளர்ச்சிக்காக போராட வேண்டும். குறிப்பாக ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் வளர்ச்சிக்காக நாம் உழைக்க வேண்டும். தங்களின் சுயநலத்திற்காக இந்தியர்களை பிரிக்கும் அந்நிய சக்திகளை நாம் அனுமதிக்க கூடாது என்று ட்வீட் செய்துள்ளார் அவர்.

ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய அமித் ஷா “நான் போராட்டத்தில் இறங்கியிருக்கும் அனைத்து மாணவர்களையும் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை படித்து பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். இந்த மசோதா பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தா மற்றும் வங்க தேசத்தில் மத வேறுபாடு காரணமாக ஒடுக்கப்பட்டு வெளியேறும் சகோதர சகோதரிகளுக்கு குடியுரிமை வழங்க உதவுகிறது என்று கூறியுள்ளார்.

மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம், ஜாமியா மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்களிடம் பேசியுள்ளார். பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஏதேனும் போராட்டங்கள் நடைபெற்றால் அதனை தெரியப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Narendra Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment