கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொள்ள குறைந்தது 69 சதவீத இந்தியர்கள் தயங்குகிறார்கள் என்று லோக்கல் சர்க்கிள்ஸ் இந்த மாதம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை அக்டோபர் மாதத்தில் இருந்து அதிகரித்துள்ளது. 61 சதவிகிதத்தினர் தாங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயங்குவதாகத் தெரிவித்துள்ளனர்.
லோக்கல் சர்க்கிள்ஸ் என்பது ஒரு சமுதாய சமூக ஊடக தளம். இது நாடு முழுவதும் 242 மாவட்டங்களைச் சேர்ந்த 18,000க்கு மேற்பட்டவர்களிடம் சர்வே எடுத்தது. இதில் பதிலளித்தவர்களில் 66 சதவீதத்தினர் ஆண்கள், 34 சதவீதத்தினர் பெண்கள். முதல் கட்ட ஆய்வு அக்டோபர் 15 முதல் 20 வரை நடத்தப்பட்டது. இரண்டாவது கட்ட ஆய்வு டிசம்பர் 10 முதல் 15 வரை நடத்தப்பட்டது.
லோக்கல் சர்க்கிள்ஸ் நிறுவனர் சச்சின் தபரியா கூறுகையில், பக்கவிளைவுகள், செயல்திறன் நிலைகள் மற்றும் அதிக நோய் எதிர்ப்பு சக்தி அளவு காரணமாக ஒருவர் நோயால் பாதிக்கப்பட மாட்டார் என்ற பெருகிவரும் நம்பிக்கை ஆகியவை பற்றிய குறைந்த தகவல்கள் தான் தயக்கத்திற்கான முக்கிய காரணங்கள் என்று கூறுகிறார்.
நவம்பர் மாத நடுப்பகுதியில் தீபாவளியையொட்டி சராசரி தினசரி தொற்றுகளின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு 50,000 தொற்றுகளில் இருந்து 25,000ஆகக் குறைந்துள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்ள விருப்பமின்மையை விளக்க இதுவும் ஒரு காரணம் என்று தபரியா கூறினார்.
தடுப்பூசிகள் குறித்த போலி செய்திகளைக் கட்டுப்படுத்த அரசாங்க நடவடிக்கைகளை தபரியா பரிந்துரைத்தார். “தடுப்பூசி சோதனை முடிவுகள், வெற்றிகள் மற்றும் பாதகமான நிகழ்வுகள் குறித்து, அரசாங்கம் நாட்டு மக்களுக்கு ஒவ்வொரு நிலையிலும் தெரிவிக்க வேண்டியது அவசியம். சமூக ஊடகங்களில் அதிக அளவில் ஊடுருவி போலி தகவல்கள் வைரலாகிவிடும் அபாயம் அதிகம். அதனால், மக்களை தடுப்பூசி சாம்பியன்களாக மாற்றுவதில் சரியான நேரத்தில் அளிக்கப்படும் அதிகாரப்பூர்வமான தகவலுக்கு ஒரு பங்கு இருக்கும்” என்று தபரியா கூறினார்.
சுகாதார பணியில் ஈடுபடுபவர்களின் சுதந்திரமான தனியான கணக்கெடுப்பில், 45 சதவீதம் பேர் தடுப்பூசி கிடைத்தவுடன் அதை போட்டுக்கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறினார்கள். அதே நேரத்தில் 55 சதவீதம் பேர் தடுப்பூசியைத் தள்ளிவைக்க உள்ளதாகவும் அல்லது என்ன செய்வது என்று இன்னும் முடிவு செய்யாத நிலையில் பணியாளர்கள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
கோவிட் தடுப்பூசி குறித்த சுகாதார ஊழியர்களின் அணுகுமுறைகளைப் புரிந்துகொள்ள டாக்டர் அப்துல் கஃபுர் ஒருங்கிணைத்த இந்த ஆய்வுக்கு 1,424 பதில்கள் கிடைத்தன. அதன் கண்டுபிடிப்புகள் குறிப்பிடத்தக்க கவலைகளை வெளிப்படுத்துகின்றன. சாத்தியமான தீர்வுகளையும் பரிந்துரைக்கின்றன” என்று டாக்டர் கஃபூர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil