Rahul V Pisharody , Sreenivas Janyala , Sukrita Baruah
Suicide by LSR student in Telangana; family says hit by lockdown, unable to fund studies : டெல்லி லேடி ஸ்ரீராம் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த மாணவி தன்னுடைய சொந்த ஊரான தெலுங்கானாவில் தற்கொலை செய்து கொண்டார். வறுமை காரணமாக கல்லூரி படிப்பை தொடர முடியவில்லை என்ற சோகத்தில் அவர் இம்முடிவை மேற்கொண்டதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ரங்க ரெட்டி மாவட்டத்தில் மெக்கானிக்காக பணியாற்றிக் கொண்டிருக்கும் அவருடைய தந்தை “ தன் மகள் ஐ.ஏ.எஸ் படிக்க விரும்பினாள். ஆனால் நான் அவளுடைய கல்விக்காக ஒரு லேப்டாப் கூட வாங்கித் தர இயலாத நிலையில் இருந்தேன்” என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் காவல்துறையின் அறிவிப்பின் படி, ஐஸ்வர்யா ரெட்டி இரண்டாம் ஆண்டு பி.எஸ்.சி. கணிதம் படித்துக் கொண்டிருந்தார். நவம்பர் 2ம் தேதி அவருடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 19 வயதான அவர் 12ம் வாகுப்பு தேர்வில் 98.5% மதிப்பெண்களை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. என்னால் என்னுடைய குடும்பம் நிறைய நிதி பிரச்சனைகளை சந்தித்த் வருகிறது. நான் தான் இந்த குடும்பத்திற்கு பாரமாக உள்ளேன். என்னுடைய கல்வியும் ஒரு சுமை. என்னால் படிக்க முடியவில்லை என்றால் என்னால் வாழ முடியாது என்று தெலுங்கில் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார் ஐஸ்வர்யா.
ஐஸ்வர்யாவின் அப்பா ஸ்ரீநிவாச ரெட்டி, “கடந்த ஆண்டு என்னுடைய பெண்ணுக்கு பிரபலமான கல்லூரி ஒன்றில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. அதற்காக ஒரு பெட்ரூமுடன் கூடிய வீட்டினை 2 லட்சத்திற்கு அடமானம் வைத்தேன். தற்போது அந்த கடனை அடைத்து வருகிறேன்” என்று கூறுகிறார். மார்ச் மாதம் தன்னுடைய சொந்த மோட்டர் ரிப்பேர் ஷாப்பை அவர் துவங்கியுள்ளார். ஆனால் அதன் பின்னர் கொரோனா காரணமாக ஊரடங்கு நடைமுறைக்கு வந்தது.
To read this article in English
"தளர்வுகளுக்கு பிறகு மீண்டும் ஷாப் திறக்கப்பட்டது. ஆனால் வேலை மிகவும் மந்தமாகவே நடைபெற்று வருகிறது. கல்லூரி மூடப்பட்ட பிறகு பிப்ரவரி மாதம் வீட்டுக்கு வந்தால். அக்டோபர் மாதம் அவள் “எனக்கு ஒரு லேப்டாப் வாங்கி தர முடியுமா?” என்று கேட்டாள். மொபைலில் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்பது அவளுக்கு சிரமமாக இருந்தது. பழைய லேப்டாப்பாக இருந்தாலும் போதும் என்று கூறினாள். ஆனால் நான் அவளை கொஞ்சம் பொறுமையாக இருக்க கூறினேன். அதன் பின்பு அவள் என்னிடம் ஏதும் கேட்கவில்லை” என்று மனமுடைந்து கூறினார். தற்கொலை குறிப்பில் ”தனக்கு வர வேண்டிய அரசின் உதவித்தொகை இந்த ஆண்டு தாமதமாக வரும்” என்று அறிவிக்கப்பட்டதை குறிப்பிட்டுள்ளார்.
எல்.எஸ்.ஆர். முதல்வர் சுமன் ஷர்மாவிடம் பேசிய போது, “ஐஸ்வர்யா கல்வி உதவித்தொகைக்காக கல்லூரியில் ஒரு முறையும் அணுகியதே இல்லை என்று தெரிவித்த அவர், எங்களுக்கு இது ஈடு செய்ய முடியாத இழப்பு. அவருக்கு உதவ முடியாமல் போனது எங்களின் துரதிர்ஷ்டம். ஆனாலும் அவர் தன்னுடைய பிரச்சனைகள் குறித்து எந்த ஒரு ஆசிரியரிடமும், கணித துறையிலும் பகிர்ந்து கொள்ளவே இல்லை. எங்கள் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு உதவ பல்வேறு உதவித்தொகை திடட்டங்களை நாங்கள் வைத்திருக்கின்றோம். மாணவர்கள் மன அழுத்தத்தை சரி செய்யவும் பல்வேறு முயற்சிகளை கல்லூரியில் மேற்கொண்டுள்ளோம். ஆனால் ஐஸ்வர்யா இந்த இரண்டு வசதிகளையும் ஒரு முறையும் அணுகவே இல்லை என்பது வேதனை அளிக்கிறது” என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
மத்திய அறிவியல் மற்ரும் தொழில்நுட்ப துறையின் உதவித்தொகையான இன்ஸ்பெயரை பெறுவதற்கும் தகுதியானவர் அவர். அவருடைய தற்கொலைக் குரிப்பில், அனைவருக்கும் குறைந்தது ஒரு முறையாவது இந்த உதவித் தொகை கிடைப்பதை உறுதி செய்யுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். இன்ஸ்பையர் மூன்று விதமான உதவித்தொகை திட்டங்களை வழங்குகிறது. இந்த உதவித்தொகை ஐந்து ஆண்டுகளுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகஸ்ட் மாதம் ஐஸ்வர்யாவிற்கு வந்த கடிதத்தில் அவர் உயர் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளார் என்றும் அவருக்கு ரூ. 80 ஆயிரம் வழங்கப்படும் என்றும், அதற்கு அவருடைய வங்கிக் கணக்கு மற்றும் ஆதார் அட்டை தகவல்களை மின்னஞ்சல் அனுப்பவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இன்ஸ்பையர் திட்டத்தின் இன்சார்ஜ் சஞ்சய் மிஸ்ராவிடம் பேசிய போது, கொரோனா தொற்றினால் ஏற்பட்டிருக்கும் நிதி சுமைக்கு மத்தியிலும் மாணவர்களுக்கு எந்த குறையுமின்றி முழுமையான உதவித்தொகை வழங்கவே முடிவு செய்தோம். சில நேரங்களில் தொழில் நுட்ப கோளாறு காரணமாக கூட தாமதம் ஆகலாம். தேவையான ஆவணங்களை அவர்கள் அனுப்பவில்லை என்றாலோ, அல்லது சரியாக அப்லோட் ஆகவில்லை என்றாலோ, போதுமான மதிப்பெண்களை பெறவில்லை என்றாலோ அவர்களுக்கு உதவித்தொகை கிடைப்பதில் தாமதமாகும். விண்ணப்பம் கிடைத்தவுடன் 45 நாட்களில் மாணவர்களுக்கு நிதி வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டுமே கல்லூரியில் விடுதி வசதிகள் உண்டு. இரண்டாம் ஆண்டில் இருந்து அவர்கள் வெளியே வாடகைக்கு அறைகள் எடுத்து தங்க வேண்டும். அக்டோபர் மாதம் விடுதி அறையை காலி செய்ய வேண்டும் என்று கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து ஐஸ்வர்யாவுக்கு அழைப்பு வந்துள்ளது. இதைப்பற்றி நீ ஏதும் கவலைப்பட வேண்டாம். நான் பணம் ஏற்பாடு செய்து தருகிறேன் என்று அவருடைய அப்பா கூறியுள்ளார். நவம்பர் 2ம் தேதி அன்று வற்புறுத்தி அவளுடைய கையால் எனக்கு உணவை ஊட்டிவிட்டாள். அதன் பிறகு இப்படி ஒரு விபரீதமான முடிவினை மேற்கொண்டாள் என்று வருத்தத்துடன் தெரிவிக்கிறார் அவருடைய தந்தை.
அவளுக்கு எப்போதும் ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்பது தான் கனவு. அவளுடைய கனவை நினைவாக்க என்னிடம் போதுமான பணம் இல்லையே என்ற வருத்தம் எனக்கு இருந்து கொண்டே இருந்தது. விக்யான் ஜூனியர் கல்லூரியில் முதலிடம் பெற்று வந்தாள் என் மகள். இந்த ஷாத்நகரிலேயே நான் மிகப் பெருமையான தந்தையாக என்னை உணர்ந்தேன் என்று கூறுகிறார் ரெட்டி.
ஐஸ்வர்யாவுக்கு உதவ அவருடைய தாயார் சுமதியும் தன்னுடைய நகையை அடகு வைத்தார். தன்னுடைய இரண்டாவது மகள் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார். வீட்டில் இருந்த படியே சுமதி துணிகளை தைத்து வருகிறார். விடுதி அறையை காலி செய்ய கூறியது அவளுக்கு மேலும் வருத்தத்தை அளித்தது. அங்கிருந்து வெளியே சென்று தங்கினால் எப்படியும் அதற்கு மாத வாடகையே 15 ஆயிரம் ஆகும். எங்களிடம் அவளை டெல்லிக்கு அனுப்ப ட்ரெய்ன் டிக்கெட் வாங்கவே வழியில்லை என்று சுமதி கூறினார்.
இப்படி ஒரு விபரீத முடிவை எடுப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் ஏதும் உண்ணவில்லை. அம்மாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்று கூறுகிறார் அவருடைய தோழி நவ்யா ஸ்ரீ. தற்கொலை செய்து கொள்வதற்கு 15 நிமிடத்திற்கு முன்பு வரை தேர்வுக்கு தயாரவது குறித்தும், மொபைல் போனில் படித்து அசைன்மெண்ட் எழுதுவதால் சரியாக தயார் ஆகவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். அனைவருடன் சேர்ந்து அமர்ந்து இரவு உணவை உண்டாள். என்னை உண்ணக் கூறி கட்டாயப்படுத்தினாள். பின்பு அவளுடைய அறைக்கு சென்றவள், கதவைக்கூட தாழிடவில்லை. படித்துக் கொண்டிருந்தாள் என்று விட்டுவிட்டோம். ஆனால் இவள் இப்படி ஒரு முடிவை எடுப்பாள் என்று நாங்கள் யோசிக்கவும் இல்லை என்று அவர் கூறினார்.
நடிகர் சோனு சூட் மாணவர்களுக்கான உதவித்தொகை திட்டங்களை அறிமுகம் செய்த போது அவருக்கும் செப்டம்பர் 14ம் தேதி மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி என்னிடம் லேப்டாப் இல்லை. எனவே என்னால் முறையாக படிக்க முடியவில்லை. தேர்வில் தோல்வி அடைவேனோ என்ற பயம் ஏற்படுகிறது. ஏற்கனவே என்னுடைய குடும்பம் கடனில் மூழ்கியுள்ளது. எனவே லேப்டாப் என்ற பேச்சுக்கு இடமே இல்லை. என்னுடைய பட்டப்படிப்பை முடிப்பேனா என்று எனக்கு தெரியவில்லை என்று அந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டிருக்கிறார் ஐஸ்வர்யா. ”என்னை மன்னித்துவிடுங்கள். நான் நல்ல மகளாக இல்லை” என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் ஐஸ்வர்யா.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.