ப்ளூ மூன், ப்ளட் மூன் ஆகிய அபூர்வ நிகழ்வுகள் இன்று கீழ்வானில் தெரியும். வெறும் கண்ணால் இதை பார்க்கலாம். இந்த நிகழ்வின்போது கடல் அலைகள் உயரும்.
ப்ளட் மூன்...
ப்ளூ மூன், ப்ளட் மூன் உலகம் முழுவதும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. முழு சந்திர கிரகணம் இன்று (ஜனவரி 31) நிகழ உள்ளது. அப்போது வானில் நிலா சூப்பர் நிலாவாக பெரிதாக தெரியும். அதோடு ப்ளூ மூன் மற்றும் பிளட் மூன் ஆகியவையும் இன்று நிகழ உள்ளன.
சந்திரகிரகணம் எப்படி ஏற்படுகிறது? சூரியனுக்கும், நிலாவுக்கும் நடுவில் பூமி வரும்போது, பூமியின் நிழல் நிலவின் மீது படும்போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது, முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது.
இன்று நிகழ இருப்பது இந்த முழு சந்திர கிரகணம்! இன்று இம்மாதத்தின் 2-வது பவுர்ணமி. அப்போது நிலா நீல நிறத்தில் காட்சி அளிக்கும். அதனால் அது ‘புளு மூன்’ என்று அழைக்கப்படும் அரிய நிகழ்வாகும். நிலா தோன்றும் நேரத்திலேயே முழு சந்திர கிரகணம் தோன்றுவது இதன் சிறப்பு.
ப்ளூ மூன், ப்ளட் மூன், சூப்பர் மூன்...
கீழ்வானத்தில் நிலா தோன்றும்போதே மாலை 6.25 மணியளவில் முழு சந்திர கிரகணம் தொடங்குகிறது. இரவு 7.25 மணிவரை முழு சந்திர கிரகணம் நீடிக்கும். அதன்பிறகு பூமியின் நிழல் படிப்படியாக மறைந்து, நிலா இயல்புநிலையை அடையும்.
ப்ளட் மூன் எப்படி? இந்த சந்திர கிரகணத்தின்போது சூரிய ஒளி நிலாவின் மீது நேரடியாக படாது. ஆனால் வளி மண்டலத்தால் சிதறடிக்கப்படும் ஒளி, நிலாவின் மேல் படும். குறைந்த அலை நீளமுள்ள ஒளிக்கதிர்கள், வளி மண்டலத்தால் சிதறடிக்கப்பட்டு, அதிக அலை நீளமுள்ள சிவப்பு நிறம் மட்டும் நிலாவை அடைகிறது. இதனால், சிவந்த நிலாவாக தோன்றும். இது, ‘பிளட் மூன்’ என்று அழைக்கப்படும் 2-வது அரிய நிகழ்வாகும். 150 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த அரிய நிகழ்வு ஏற்படுகிறது.
சூப்பர் மூன் என்றால்? மூன்றாவது அரிய நிகழ்வு, ‘சூப்பர் மூன்’ என்று அழைக்கப்படுகிறது. நிலா, பூமியை சுற்றி வரும்போது, மாதத்துக்கு ஒருதடவை பூமியை மிகவும் நெருங்கி வரும். அப்போது, நிலா வழக்கத்தைவிட பெரியதாக சூப்பர் மூனாக தோன்றும். அந்த அரிய நிகழ்வும், முழு சந்திர கிரகணத்தின்போதே நடக்கிறது. வழக்கத்தை விட 10 சதவீதம் பெரியதாக நிலா காட்சி அளிக்கும், சற்று பிரகாசமாகவும் இருக்கும் என்று வானியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
அந்த நேரத்தில், கடலிலும், ஆறுகளிலும் அலைகள் சற்று அதிக உயரத்துக்கு எழும்பும். எனினும் பயப்படும் அளவுக்கு ஒன்றும் இருக்காது. இந்த முழு சந்திர கிரகணம், இந்தியா முழுவதும் தெரியும். வெறும் கண்ணாலேயே இதை பார்க்கலாம். தொலைநோக்கி மூலமும் காணலாம். வானியல் ஆய்வாளர்களும், ஆர்வலர்களும் இந்த நிகழ்வுகளை ஆர்வமுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.