Advertisment

‘அரசியல் அமைப்புக்கு எதிரானது’ - தேர்தல் பத்திர முறை ரத்து: சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தேர்தல் பத்திரங்கள் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தேர்தல் பத்திரங்கள் செல்லாது என்று உச்சநீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது.

author-image
WebDesk
New Update
Supreme Court on electoral bonds scheme Tamil News

'தேர்தல் நன்கொடை அளிக்க வகை செய்த வருமான வரி திருத்த சட்டம், மக்கள் பிரதிநிதித்துவ திருத்த சட்டம் ரத்து' என்று தேர்தல் பத்திரங்கள் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Supreme Court | Electoral Bonds: பா.ஜ.க.வின் மறைந்த அருண் ஜெட்லி நிதியமைச்சராக இருந்தபோது, ​​2017-18 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட் உரையில் தேர்தல் பத்திரம் திட்டம் முதலில் அறிவிக்கப்பட்டது. இதற்காக சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் கடந்த 2018-ம் ஆண்டில் அமலுக்கு வந்தது. அதன்படி, பாரத ஸ்டேட் வங்கியின் சார்பில் ரூ.1,000 முதல் ரூ.1 கோடி வரையிலான தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டன. 

Advertisment

இந்த தேர்தல் பத்திரங்களை தனிநபர்கள், நிறுவனங்கள் வாங்கி தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கலாம். ஒரு நபர், நிறுவனம் எத்தனை பத்திரங்களை வேண்டுமானாலும் வாங்கலாம். இந்த பத்திரங்களில் வாங்குபவரின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் இருக்காது. 15 நாட்களுக்குள் பத்திரத்தை பணமாக மாற்ற வேண்டும். இல்லையெனில் தேர்தல் பத்திரங்களின் தொகை பிரதமர் நிவாரண நிதியில் டெபாசிட் செய்யப்படும்.

தேர்தல் பத்திரங்கள் திட்டம், ரொக்கமாக நன்கொடை அளிக்கும் நடைமுறையை மாற்றுவதற்கும், அரசியல் நிதியளிப்பில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதற்கும் ஒரு தீர்வாக கருதப்பட்டது. தேர்தல் பத்திரங்கள் என்பவை நிதி மசோதா சார்ந்தது என்பதால், மக்களவையின் ஒப்புதல் இல்லாமலேயே நிறைவேற்றப்பட்டது. 

இந்த சட்டத் திருத்தத்துக்குப் பின்னர் அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெருமளவு நன்கொடைகளைப் பெற்றன. ஒவ்வொரு அரசியல் கட்சியும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் தேர்தல் பத்திரங்கள் மூலமாக பெருமளவு நன்கொடையை பெற்று குவித்தன. குறிப்பாக பா.ஜ.க. அதிக அளவிலான நன்கொடையை பெற்றுள்ளது.

ஆனால், தேர்தல் பத்திரம் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. தேர்தல் பத்திரம் திட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனக்கூறி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. தேர்தல் பத்திரம் செல்லாது என அறிவிக்கவேண்டும் என மனுதாரர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய், ஜே.பி.பார்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. இந்த திட்டத்தில் எந்தவொரு சட்ட விதிகளும் மீறப்படவில்லை, யாருடைய உரிமையும் மீறப்படவில்லை என மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. இந்த வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் முடிந்து கடந்த ஆண்டு நவம்பர் 2-ம் தேதி நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தேர்தல் பத்திரங்கள் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் ஒருமித்த தீர்ப்பை நீதிபதிகள் வழங்கினர். தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது:-

அரசை கேள்வி கேட்கும் உரிமை நாட்டு மக்களுக்கு உள்ளது என பல தருணங்களில் நீதிமன்றங்கள் கூறி உள்ளன. தகவல்களை வெளிப்படையாக தெரிவிக்காத தேர்தல் பத்திரங்கள் சட்டத்தை மீறும் வகையில் உள்ளன. அதாவது, தகவல் அறியும் உரிமை சட்டம், அரசியல் சாசன பிரிவு 19(1) ஆகியவற்றை மீறும் வகையில் உள்ளது. தேர்தல் பத்திர விவரங்களை வழங்காமல் இருப்பதற்கான காரணங்களை தெரிவிக்கவில்லை. தேர்தல் பத்திர முறை சட்டவிரோதமானது என்பதால் அதனை ரத்து செய்கிறோம்.

தேர்தல் பத்திரம் விநியோகிப்பதை பாரத ஸ்டேட் வங்கி (SBI) உடனே நிறுத்த வேண்டும். 2019 ஏப்ரல் 12 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுக்குப் பிறகு வாங்கப்பட்ட அனைத்துப் பத்திரங்களின் விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அரசியல் கட்சிகளுக்கு வரம்பற்ற நிதியை அனுமதிக்கும் சட்டத்தில் மாற்றங்கள் தன்னிச்சையானது. தேர்தல் பத்திரங்கள் மூலம் கருப்புப் பண விவகாரத்தைக் கையாள்வதற்கான மத்திய அரசின் நியாயப்படுத்தல் நியாயமானது அல்ல. 

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஆங்கிலத்தில் படிக்கவும்: ‘Unconstitutional’: Supreme Court strikes down electoral bonds scheme

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Supreme Court Electoral Bonds
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment