வக்பு சட்ட திருத்த மசோதாவிற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையை வரும் மே 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம், அதுவரை மசோதாவிற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு தொடரும் என்று தெரிவித்துள்ளது.
வக்பு சட்ட திருத்த மசோதாவின் இரண்டு முக்கிய அம்சங்களை உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பிய சில வாரங்களுக்குப் பிறகு, அந்தச் சட்டத்தின் அரசியலமைப்பு செல்லுபடியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது இன்று (மே 5) உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
மத்திய அரசு கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி, உச்ச நீதிமன்றத்தில், "பயன்பாட்டின் மூலம் வக்பு" உட்பட எந்த வக்பு சொத்துகளையும் நீக்கவோ அல்லது மத்திய வக்பு கவுன்சில் மற்றும் வாரியங்களுக்கு மே 5-ஆம் தேதி வரை எந்த நியமனங்களையும் செய்யவோ மாட்டோம் என்று உறுதியளித்தது.
மேலும், 'பயன்பாட்டின் மூலம் வக்பு' உட்பட வக்பு சொத்துகளை நீக்குவதற்கு எதிராக இடைக்கால உத்தரவு பிறப்பிக்கும் உச்ச நீதிமன்றத்தின் முன்மொழிவையும், மத்திய வக்பு கவுன்சில் மற்றும் வாரியங்களில் முஸ்லிம் அல்லாதவர்களைச் சேர்க்க அனுமதிக்கும் ஒரு விதியை நிறுத்தி வைப்பதையும் மத்திய அரசு கடுமையாக எதிர்த்தது.
வழக்கறிஞர் மேத்தாவின் வாதங்களை உச்ச நீதிமன்றம் பதிவு செய்தது. அறிவிப்பின் மூலம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட அல்லது அறிவிக்கப்பட்ட 'பயன்பாட்டின் மூலம் வக்பு' உட்பட அனைத்து வக்பு சொத்துக்கள், அடுத்த விசாரணை தேதி வரை நீக்கப்படாது என்று உச்ச நீதிமன்றம் கூறியது. மேலும், சட்டத்தின் செல்லுபடியை எதிர்த்த மனுக்களுக்கு பூர்வாங்க பதிலை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு ஒரு வாரம் அவகாசம் அளித்து, வழக்கை மே 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
வக்பு (திருத்த) சட்டம், 2025 கடந்த மாதம் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 5-ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்ததை அடுத்து இந்த அறிவிப்பு வெளியானது. மக்களவையில் இந்த மசோதாவுக்கு 288 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 232 எம்.பி-க்கள் எதிராகவும் வாக்களித்தனர். ராஜ்ய சபாவில் 128 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 95 பேர் எதிராகவும் வாக்களித்தனர்.
தி.மு.க, ஒய்.எஸ்.ஆர்.சி.பி, ஏ.ஐ.எம்.ஐ.எம், இடதுசாரிக் கட்சிகள், என்.ஜி.ஓ-க்கள் போன்ற சிவில் சமூகக் குழுக்கள், முஸ்லிம் அமைப்புகள் மற்றும் பலர் இந்த சட்டத்தின் செல்லுபடியை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில் இன்றைய தினம் (மே 5) வழக்கின் விசாரணை நடைபெற்றது. அதன்படி, வக்பு வாரியங்களில் நியமனங்கள் செய்வது உள்ளிட்டவற்றின் மீது விதிக்கப்பட்ட தடை அடுத்த விசாரணை வரை தொடரும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பான விசாரணை வரும் மே 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அடுத்த வாரம் நீதிபதி கவாய் அமர்வு முன் இந்த வழக்கை பட்டியலிடுமாறும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா ஆணை பிறப்பித்துள்ளார். தலைமை நீதிபதி பொறுப்பில் இருந்து அவர் ஓய்வு பெற இருப்பதால், அடுத்த தலைமை நீதிபதியான கவாயின் அமர்வுக்கு இந்த வழக்கை அவர் மாற்றினார்.