/indian-express-tamil/media/media_files/2025/03/26/57mPydRBSic6rd74elDV.jpg)
ஒருவர் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை சுமத்துவதற்கு சம்பந்தப்பட்ட பெண்ணின் மார்கங்களை தொடுவதோ அல்லது ஆடைகளை கிழிப்பதோ போதுமானதாக இருக்காது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறிய தீர்ப்புக்கு, உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: ‘Depicts total lack of sensitivity’: Supreme Court stays Allahabad HC order on rape
"பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து விதிக்கப்பட்ட தீர்ப்பின் சில பகுதிகள் உணர்ச்சிப்பூர்வமற்ற வகையில் இருப்பதை கண்டு நாங்கள் வேதனை அடைகிறோம்" என்று நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் ஏ.ஜி. மசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்பு தெரிவித்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து கடந்த செவ்வாய்க்கிழமை, உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. குறிப்பாக, இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதியின் மனநிலையை சுட்டிக்காட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
"சம்பந்தப்பட்ட தீர்ப்பு, சட்டத்தின் கோட்பாடுகளுக்கு முற்றிலும் முரணாக இருப்பதுடன், உணர்ச்சிப்பூர்வமற்று மனிதாபிமானமற்ற அணுகுமுறையாக இருக்கும் காரணத்தால், தீர்ப்புக்கு தடை விதிக்கப்பட்டது" என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு, உத்தர பிரதேச மாநிலம் மற்றும் உயர்நீதிமன்றத்திற்கு, உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த 2022-ஆம் ஆண்டு உத்தர பிரதேசத்தின் காஸ்கஞ்சில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் ஒரு பெண் மனு தாக்கல் செய்தார். அதில், பாலியல் வன்கொடுமை மற்றும் மிரட்டல் தொடர்பாக மூன்று ஆண்கள் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
கடந்த 2021-ஆம் ஆண்டின் நவம்பர் 10-ஆம் தேதி அப்பெண் தனது மகளுடன் சொந்த ஊர் திரும்பிய போது, அதே ஊரைச் சேர்ந்த இரண்டு பேர், அப்பெண்ணின் மகளை தங்கள் வாகனத்தில் அழைத்துச் சென்று வீட்டில் இறக்கி விடுவதாக கூறியுள்ளனர். சொந்த ஊர்க்காரர்கள் என்ற அடிப்படையில் தனது மகளை அப்பெண் அனுப்பி வைத்துள்ளார். அப்போது, அந்த இருவரும் தன் மகளின் மார்பகங்களை பிடித்து இழுத்து, ஆடைகளை கிழித்ததாக அப்பெண்ணின் தாயார் கூறினார்.
அப்போது, சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு சிலர் வந்ததால், அவர்கள் இருவரும் தப்பிச் சென்றனர். இதைத் தொடர்ந்து, சம்பவம் குறித்து போலீசாரிடம் புகாரளித்ததால் இந்த விவகாரத்தில் ஈடுபட்ட நபரின் தந்தை தன்னை மிரட்டியதாக அப்பெண் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
அப்பெண்ணின் மனுவை புகாராக கருதிய காஸ்கஞ்ச் நீதிமன்றம், அதனை வழக்காக பதிவு செய்யுமாறு மார்ச் 21, 2022 அன்று போலீஸாருக்கு உத்தரவிட்டது. இதன் பேரில், புகார்தாரர் மற்றும் சாட்சியின் வாக்குமூலங்களை நீதிமன்றம் பதிவு செய்தது. விசாரணையின் போது, இந்திய தண்டனைச் சட்டம் (ஐ.பி.சி) பிரிவு 376 (பாலியல் வன்கொடுமை) மற்றும் போக்சோ சட்டத்தின் பிரிவு 18 (குற்றம் செய்ய முயற்சித்தல்) ஆகியவற்றின் கீழ் இரண்டு இளைஞர்களுக்கும் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரின் தந்தைக்கு ஐ.பி.சி பிரிவுகள் 504 (அமைதியை கெடுக்கும் நோக்கத்துடன் அவமதிப்பு) மற்றும் 506 (குற்றவியல் மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் சம்மன் அனுப்பப்பட்டது.
போக்சோ நீதிமன்றத்தின் சம்மனை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்ட மூவரும் உயர் நீதிமன்றத்தை அணுகினர். இரு குடும்பத்தினருக்கும் இடையே விரோதம் இருப்பதால் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டதாக எதிர் தரப்பினர் வாதிட்டனர்.
சிறுமியின் தாயார், பொய்யாக பாலியல் வன்கொடுமை வழக்கை முன்வைத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
சம்மனை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், பாலியல் வன்கொடுமை வழக்கை, "உடைகளை அவிழ்க்கும் நோக்கில் தாக்குதல் அல்லது துஷ்பிரயோகம் செய்தல் அல்லது நிர்வாணமாக இருக்க வற்புறுத்துதல்" போன்ற பிரிவுகளின் கீழ் மாற்ற வேண்டும் என உத்தரவிட்டது. பின்னர் உயர் நீதிமன்றம், மாற்றியமைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்ட இரு குற்றவாளிகளுக்கும் புதிய சம்மன் அனுப்புமாறு காஸ்கஞ்ச் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள், பெண்ணின் மார்பகங்களை பிடித்து இழுத்து, ஆடைகளை கிழித்து அழைத்துச் சென்றதால், அவர்கள் மீது பாலியல் வன்கொடுமை வழக்கை பதிவு செய்ய முடியாது என்று நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.
இந்த சூழலில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவிற்கு, உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
- Ananthakrishnan G
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.