காவிரி விவகாரத்தில் மத்திய அரசு சமர்ப்பிக்க வேண்டிய காவிரி வரைவு திட்ட அறிக்கை குறித்த விசாரணை இன்று மீண்டும் உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது.
காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் தமிழத்திற்கு 177.25 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துத் தீர்ப்பு கூறியது. மேலும் இதனை நடைமுறைப்படுத்தத் தமிழகத்தில் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த வாரியம் அமைக்க மார்ச் 29 தேதியை இறுதி காலக்கெடுவாக அறிவித்த நிலையில், மத்திய அரசு இதனை இன்று வரை பின்பற்றவில்லை.
மேலும் இறுதி கெடு முடிவடையும் நேரத்தில், தீர்ப்பில் குறிப்பிட்ட ‘ஸ்கீம்’ வார்த்தை குறித்து விளக்கம் கேட்டு மனு தாக்கல் செய்தது. இதனை விசாரித்தபோது, தீர்ப்பைப் பின்பற்றாத மத்திய அரசை உச்சநீதிமன்றம் கண்டித்தது. பின்னர் மே 3ம் தேதிக்குள் காவிரி விவகாரத்தில் வரைவு திட்ட அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் 2வது காலக்கெடு முடிந்தும், வரைவு திட்டம் தாக்கல் செய்யப்படவில்லை. கர்நாடகா தேர்தல் வேலைகளில் பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள் செயல்பட்டு வருவதால் ஒப்புதல் பெற இயலவில்லை எனவே கூடுதல் அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
மத்திய அரசின் இந்த விளக்கத்திற்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்து, மே மாதம் 4 டிஎம்சி நீரைத் தமிழகத்திற்கு திறக்க வேண்டும் என்று உத்தரவு அளித்தது. இருப்பினும், கர்நாடக அரசு தண்ணீர் திறக்க மறுத்துவிட்டது. மேலும் மழை இல்லாததால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது எனவே தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க இயலாது என அறிக்கை தாக்கல் செய்தது கர்நாடகம்.
இதனைத் தொடர்ந்து, தமிழகத்திற்கு விரைவில் காவிரி நீர் திறக்க வேண்டும், தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதே வழக்கில் மத்திய அரசு பிரமாண பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில், காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தீர்ப்பை செயல்படுத்த மத்திய அரசு முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காவிரி வரைவு திட்ட அறிக்கையில் ஒப்புதல் பெற மத்திய அரசு ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், இதனை முழுமையாக முடிக்க மேலும் 10 நாட்கள் கூடுதல் அவகாசம் கோரியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது போன்ற நெருக்கடிகள் உள்ள நிலையில், மத்திய அரசு இன்று வரைவு திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்யுமா? இன்று உச்சநீதிமன்ற விசாரணையில் காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகத்திற்கு என்ன தீர்ப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.
இன்று விசாரிக்கப்படும் தீர்ப்புகளில், காவிரி விவகாரம் வழக்கை முதல் விசாரணையாக எடுத்துக்கொள்கிறது உச்சநீதிமன்றம்.