இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மாதம் 5 ஆம் தேதி நடத்தப்பட்டு, ஜூன் 4 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்த தேர்வில் வினாத்தாள் கசிவு, ஒரே மாநிலத்தில் அதிகம் பேர் 720-க்கு 720 மதிப்பெண் பெற்று தேர்ச்சி, கருணை மதிப்பெண்கள் வழங்கியது உள்ளிட்ட விவகாரங்கள் காரணமாக நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதனை எதிர்த்து ஏராளமான வழக்குகள் உச்ச நீதிமன்றத்திலும், 7 உயர் நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேசியத் தேர்வுகள் முகமைக்கு நோட்டீஸ் அனுப்பியது. கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட 1,563 பேருக்கு மறுதேர்வு நடத்தப்படும் என்று தேசியத் தேர்வுகள் முகமை உறுதி அளித்தது.
கருணை மதிப்பெண்கள் இல்லாமல் அவர்கள் பெற்ற மதிப்பெண்களே உண்மையான மதிப்பெண்களாக இருக்கும் எனவும், விருப்பமுள்ள மாணவர்கள் மட்டும் இந்தத் தேர்வை எழுதினால் போதும் எனவும் தெரிவிக்கப்பட்டது. நீட் மறு தேர்வை எழுதும் மாணவர்களுக்கு, ஜூன் 23 ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. ஜூன் 30ம் தேதிக்கு முன்னதாகத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தேசிய தேர்வுகள் முகமை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
சுப்ரீம் கோர்ட் அதிரடி
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'நீட் தேர்வில் தவறு இருந்தால் தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) ஒப்புக்கொள்ள வேண்டும். நீட் தேர்வு நடத்துவதில் யார் மீதும் 0.001% தவறு இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்வுக்கு தயாராகிய மாணவர்களின் உழைப்பை எங்களால் மறந்து விட முடியாது".
தவறு நடந்திருந்தால் அதனை ஒப்புக்கொள்ள வேண்டும். மருத்துவம் படிக்கும் மாணவர்கள் தவறு இழைப்பது சமூகத்துக்கு ஆபத்து. மோசடி செய்த ஒருவர் மருத்துவராக மாறுவதை கற்பனை செய்து பாருங்கள். அதனால், உங்களிடமிருந்து சரியான நேரத்தில் நடவடிக்கையை எதிர்பார்க்கிறோம்.
தேர்வை நடத்தும் ஏஜென்சியான (என்.டி.ஏ) நீங்கள் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். தவறு இருந்தால், ஆம், தவறு நடந்துள்ளது என்று கூறி ஒப்புக்கொள்ளுங்கள். நாங்கள் எடுக்கப் போகும் நடவடிக்கை இதுதான் என்று சொல்லுங்கள். குறைந்தபட்சம் உங்கள் செயல்திறனிலாவது நம்பிக்கையைத் தூண்டுங்கள்" என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“