கேரள தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோரை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) சனிக்கிழமை பெங்களூருவில் கைது செய்தது.
போக்குவரத்து அனுமதி பெறுவதற்காக ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் இருவரும் பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள். பின்னர், கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்படுவார்கள் என்றும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
Kerala gold smuggling case. NIA arrests key suspects Swapna Suresh and Sandeep Nair from Bengaluru. Also Customs raid going on at various premises in Thiruvananthapuram @IndianExpress
— shaju philip (@shajuexpress) July 11, 2020
திருவனந்தபுரத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரக முகவரிக்கு ராஜதந்திர சரக்கு பெட்டக வழியாக 30 கிலோ தங்கத்தை கடத்த முயன்றது தொடர்பாக நான்கு பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கு யுஏபிஏ சட்டத்தின் கீழ் என்.ஐ.ஏ விசாரணைக்கு வந்தது. உள்துறை அமைச்சகம் இந்த வழக்கை வியாழக்கிழமை சுங்கவரித் துறையிடமிருந்து என்.ஐ.ஏ-விடம் ஒப்படைத்தது.
இந்த வழக்கில், என்.ஐ.ஏ முதல் குற்றவாளியாக தூதரக அலுவலகத்தின் முன்னாள் செய்தித்தொடர்பாளர் சாரித் பி.எஸ் பட்டியலிடப்பட்டார். மேலும், தூதரகத்திற்கு சரக்குகளை அனுப்பிய முன்னாள் துணைத் தூதரக செயலாளர் ஸ்வப்னா சுரேஷ், அவரது நண்பர் சந்தீப் நாயர் மற்றும் ஷார்ஜாவைச் சேர்ந்த பாசில் ஃபரீத் ஆகியோரும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என என்.ஐ.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எஃப்.ஐ.ஆரில், கடத்தப்பட்ட தங்கத்தின் வருமானம் இந்தியாவில் பயங்கரவாதத்திற்கு நிதியளிக்க பயன்படுத்தப்படலாம் என்று ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை திருவனதாபுரம் விமான நிலையத்தில் 30 கிலோ தங்கத்தை ராஜதந்திர சரக்கு பெட்டகத்தில் இருந்து சுங்கத் துறை பறிமுதல் செய்தது. ராஜதந்திர சரக்கு பரிசோதனையிலிருந்து விலக்கு பெறுகிறது. ஆனால், குறிப்பிட்ட சில தகவல்களின் அடிப்படையில் இந்த சரக்கு பறிமுதல் செய்யப்பட்டது.
சரக்கைப் பெற வந்த சாரித் கைது செய்யப்பட்டார். கைதான சாரித் மாநில தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ் பெயரைக் குறிப்பிட்டதைத் தொடர்ந்து இந்த வழக்கு ஒரு அரசியல் தன்மையை அடைந்தது.
ஜூலை 6 ம் தேதி, ஸ்வப்னா சுரேஷை பணியமர்த்துவது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி எம்.சிவசங்கரை முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலாளர் பதவியில் இருந்து நீக்கினார்.
ஞாயிற்றுக்கிழமை முதல் தலைமறைவாக இருந்த ஸ்வப்னா சுரேஷின் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை விசாரித்தது. ஸ்வப்னா சுரேஷ் தான் நிரபராதி என்றும், சுங்கச்சாவடிகளில் தலையிட்டு, சரக்குகளை செயல் தூதர் ஜெனரல் ரஷீத் காமிஸ் அல் ஷெய்மிலிக்கு அனுப்பினார் என்றும் கூறினார். தற்போதைய தூதரக ஜெனரல் கொரோனா பொது முடக்கத்தை தொடர்ந்து ஏப்ரல் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு திரும்பியிருந்தார்.
இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்த கேரளாவில் எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. இந்த வழக்கு தொடர்பாக முதல்வர் பினராயி விஜயன் ராஜினாமா செய்யக் கோரி காங்கிரஸ், பாஜக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் இளைஞர் அணியினர் அனைத்து மாவட்ட தலைமையகங்களிலும் எதிர்ப்பு பேரணிகளை நடத்தினர்.
இந்த சம்பவம் குறித்து மத்திய நிறுவனங்களின் உடனடியான ஒருங்கிணைந்த விசாரணை நடத்தக் கோரி பினராயி விஜயன் புதன்கிழமை பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார்.
இந்தியாவின் முதன்மையான பயங்கரவாத எதிர்ப்பு முகமை ஏன் தங்கக் கடத்தல் விஷயத்தை விசாரிக்கிறது என்பதை விளக்கி, என்.ஐ.ஏ அறிக்கை வெளியிட்டது. அதில், “நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில், கடல் பகுதிகளில் இருந்து இந்தியாவிற்கு அதிக அளவு தங்கம் கடத்தப்படுவது என்பது சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் 1967, 15வது பிரிவில் கூறப்பட்டுள்ளபடி ஒரு பயங்கரவாதச் செயலாகும். மேலும், இந்த வழக்கில் தேசிய மற்றும் சர்வதேச தொடர்புகள் இருப்பதால், ஆரம்ப விசாரணையில், கடத்தப்பட்ட தங்கத்தின் வருமானம் இந்தியாவில் பயங்கரவாத நிதியுதவிக்கு பயன்படுத்தப்படலாம் என்று தெரியவந்துள்ளது. அதனால், என்ஐஏ இந்த வழக்கு விசாரணையை எடுத்துள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய புலனாய்வு முகமை கடத்தல் வழக்கை விசாரிக்கவில்லை என்றும் இதுபோன்ற குற்றங்கள் அதன் அட்டவணையில் இல்லை என்றும் தெரிவித்தது என இந்தியன் எக்ஸ்பிரஸ் வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook
Web Title:Swapna suresh arrested she accused in kerala gold smuggling case swapna suresh taken into nia custody
தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு : தி.மு.க மாநில மாநாடு, பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு
தமிழகத்தில் உருவாகியது 3-வது அணி : அதிமுகவில் இருந்து வெளியேறிய சரத்குமார் ஐஜேகே-வுடன் கூட்டணி
வன்னியர்கள் இடஒதுக்கீடு மசோதா : அப்பாவிடம் கண்ணீர் மல்க தகவலை பகிர்ந்த அன்புமணி
இப்போ சித்ரா இல்லையே… கால்ஸ் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட சீரியல் பிரபலங்கள்
ஆளே அடையாளம் தெரியல… சினிமாவில் என்ட்ரி ஆன விஜய் டிவி நடிகை தோற்றத்தைப் பாருங்க!